என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.
சுஜாதாவின் குரலோடு ஆரம்பமாகிற பாடல். கதையின்படி பெண்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். களைப்புத் தெரியாமல் பாடுகிற பாடல். பின்னணியில் ரஹ்மான் ஓர் ஓசையைப் பயன்படுத்தியிருப்பார். பாடல் நெடுக அந்த ஓசை இருக்கும். கிராமிய உணர்வுக்காக அந்த ஓசை பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.
அதைப் பெண்கள் நெல் குற்றும் ஓசைபோல கற்பனை செய்துகொள்ளவும்.
பெண்கள் உலக்கையால் நெல் குற்றும்போது, இருகைகளையும் மாற்றி மாற்றிக் குற்றுவர். அப்போது அவர்கள் அணிந்திருக்கும் வளைகள் குலுங்கி ஓசை எழுப்பும். அதை வள்ளைப்பாட்டு என்பார்கள். உள்ளத்தில் இருப்பதை உள்ளபடி தலைவி பாடுவாள். இடிக்க இடிக்க உமி எப்படிக் கழன்று போகுமோ அதுபோல இந்தப் பாடல்மூலம் அவள் உள்ளத்து துன்பம் நீங்கும். காதல் வெளிப்படும்.
முற்றத்தில் தினை குற்றுகையில், தலைவி கோபத்தில் தலைவனைப் பழித்துப் பாடுவாள். தோழி, தலைவனுக்கு ஆதரவாகப் பாடுவாள். உதாரணமாக, அவனுடைய நாட்டு வண்டுகள் எல்லாம் பூவினை மணந்துவிட்டு அதன் அழகு கெட கைவிட்டுச் செல்லும் என்று தலைவி சொல்வாள்.
உடனே அதற்கு மறுமொழியாக, அவனுடைய நாட்டு ஆண் யானை, தான் விரும்பிய பெண்யானைக்கு கடினப்பட்டுக் கரும்பு கொண்டுவரும் என்று தோழி கூறுவாள். கலித்தொகையில் கபிலர் எழுதிய "அகவினம் பாடுவம்" பாடல் தலைவிக்குத் தோழி மறுமொழி சொல்லும் பாடல்.
"என் வீட்டுத் தோட்டத்தில்" பாடலில், ஒருபக்கக் காதல் மட்டும் கொண்டிருக்கும் இவள், தன் காதலை பூக்களிடமும் ஜன்னல் கம்பிகளிடமும் கேட்டுப்பார்க்கச் சொல்கிறாள். இருவரும் மாற்றி மாற்றி எதிர்ப்பாட்டு பாடுவார்கள். முதலில் பெண் மறுத்துக் கூறுவாள். பிறகு ஆண் மறுத்துப் பாடுவான். வைரமுத்து அதைக் கையாளும் நயம் அழகு.
வாய்ப்பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது.
வாய்ப்பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது.
வண்டெல்லாம் சத்தம்போட்டால் பூஞ்சோலை தாங்காது. மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது.
சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம்போல சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.
-சுதர்சன்
No comments:
Post a Comment