ஒரு கருத்தைச் சொல்லும்போது அது தன்னளவில் ‘வெளியேறி’விடுவதைப் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தக் கருத்தும் நானும் ஒன்றல்ல. ஒரு விஷயத்தில் தற்போதைக்கு என்னுடைய எண்ணம் இவ்வாறாக இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறேன். அதை வெளிப்படுத்தியதும் விலகிவிடுகிறேன். அந்தக் கருத்துக்கு எப்போது அடிமையாகிறேன்? நானும் கருத்தும் எப்போது ஒன்றாகிறோம்? அதற்காக வழக்காடத் தொடங்கும்போதுதான்.
விவாதத்திற்குள் புகுந்து என் கருத்துக்கு ஆதரவாக வக்காலத்து வாங்க ஆரம்பித்ததுமே ‘நானும் கருத்தும்’ என்கிற இருமை மறைந்து அந்த எண்ணமே ‘நான்’ என்றாகிவிடுகிறது. அதுவொரு தரப்பாக எஞ்சுகிறது. ஒரு தரப்பு உருவானதும் இயல்பாகவே அதற்கான எல்லையும் மறுதரப்பும் தோன்றிவிடுகின்றன. யார் சொல்கிறார்கள், அவர்களுடைய அதிகாரம் என்ன, பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா, பின்புலம் எத்தகையது, உள்நோக்கம் உண்டா என்பதைப் போன்ற சரடுகள் வழியாக உங்களது தரப்புக்கு பலமும் பலவீனமும் அமைகிறது. அதையொட்டிய கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. தீர்ப்புகள் முடிவாகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமெனில் கருத்துகளைச் சொன்னதும் அதிலிருந்து உங்களைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். அதன் செல்வாக்கை அல்லது தாக்கத்தைச் சற்று விலகியிருந்து மதிப்பிடுவதற்குப் பழக வேண்டும்.
இப்படிச் செய்வதனால் நீங்கள் சொன்ன கருத்தின் மீது உங்களுக்கே உறுதிப்பாடு இல்லை என்றாகிவிடாதா? விவாதத்தில் பங்கெடுக்காமல் நழுவினால் அக்கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு பறிபோகாதா?
மற்றவர் கருத்துக்குச் செவிமடுப்பதாலும் நிறை குறைகளை அலச முடியும். உங்களைத் (உங்கள் கருத்தைத்) தற்காப்பதற்கு முனையாமல் கட்டுப்படுத்திக்கொள்வதன் வழியாக வேடிக்கை மனநிலையைத் தருவித்து முன்னகர இயலும். ஏனெனில் பெரும்பாலான சமயங்களில் விவாதத்தின் முடிவில் கட்சி மாறியவர்களோ சமரசப் புள்ளியை எட்டியவர்களோ எவருமில்லை என்பதே யதார்த்தம். மேலும், நீங்கள் தனித்துச் சிந்திப்பதன் மூலமாக மட்டுமே இன்னொரு கருத்தை வந்தடைவீர்கள். வக்காலத்து வாங்கி அல்ல. அப்படிச் சிந்திப்பதற்கான நீண்டகால கருவிகளையே நீங்கள் கணக்கில்கொள்ள வேண்டும். தேட வேண்டும். உடனடி எதிர்வினைகளால் மிகுதியான பலன்கள் கிடைப்பதில்லை.
-கோகுல் பிரசாத்
No comments:
Post a Comment