Monday, 12 June 2023

கோகுல் பிரசாத்


சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கல்லறை வாசகத்தைப் (epitaph) பற்றி 13 reasons why தொடரில் குறிப்பிடுவார்கள். கல்லறையில் சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் பெயர், பிறப்பு - இறப்பு தகவல், அதனிடையே ஒரு குத்துச்சண்டை வீரனின் படம், முத்தாய்ப்பாக அதன் மேலே ‘Don’t try’ எனும் அறிவுறுத்தல் இடம்பெற்றிருக்கிறது. 

முதற்பார்வைக்கு ‘எதையும் முயலாதே’ என்பதே புக்கோவ்ஸ்கியின் வாழ்க்கைக் கண்ணோட்டமாகப் படுகிறது. இதைக் கண்டதும் ஒரு மனிதனால் முயற்சி செய்யாமல் எப்படி வாழ முடியும், இத்தகைய எதிர்மறைத் தன்மையைப் பிறரிடம் விதைப்பது சரியானதா, வருங்காலத் தலைமுறையினருக்கு இருண்மையான பார்வையைப் பரிந்துரைப்பது முறையா போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

ஆனால், புக்கோவ்ஸ்கியை வாசித்தவர்களுக்குத் தன் வாழ்க்கைச் சாராம்சமாக அவர் எதைக் கருதுகிறார் என்பது தெளிவாகவே புரியும். ‘எதுவாகவும் ஆக முயலாதே. எதை உன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கிறாயோ அதுவாகவே இரு’ என்கிறார். Don’t try to become something, be it. கல்லறையிலுள்ள குத்துச்சண்டை வீரனின் படம் புக்கோவ்ஸ்கியின் வாழ்க்கைப் பாடுகளைக் குறியீடாக உணர்த்துகிறது. தன்னுடைய இடையறாத போராட்டத்தின் வழியாகத் தான் கண்டடைந்த உண்மையை மிகச் சுருக்கமாக நமக்குச் சொல்வதே அவரது நோக்கம். 

தன்னுடைய முப்பதாவது வயதில் எழுதத் தொடங்கிய புக்கோவ்ஸ்கி, 49வது வயதில்தான் முதல் நாவலை எழுதி முடிக்கிறார். அவரது தொடக்க காலப் படைப்பாக்க முயற்சிகள் அனைத்தும் திருப்திகரமான ஆக்கங்களாக அமையவில்லை. அதனால் எழுதுவதைக் கைவிட்டு வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டார். பிறகு, பல்லாண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதத் தொடங்குகிறார். சரசரவென எழுதிக் குவிக்கிறார். 

தனது அனுபவத்தின் வழியாகக் கவிதைகளிலும் கடிதங்களிலும் புக்கோவ்ஸ்கி வலியுறுத்தும் விஷயம் ஒன்றே. ‘எதையும் வலிந்து செய்யாதே. உன்னுள் இயல்பாகப் பெருக்கெடுக்காத விஷயத்திடம் முட்டி மோதாதே. அதன் பொருட்டு நேரத்தை வீணடிக்காதே. உன்னுடைய திறமை எதுவோ அது ஆற்றொழுக்காக வெளிப்பட்டே தீரும். கொட்டித் தீர்க்கும். அப்படிப் பொங்கிப் பெருகவில்லை எனில் உன்னிடம் அந்த ஆற்றல் இல்லை என்று பொருள்.’

இதையே தன் கல்லறை வாசகமாக விட்டுச்சென்றிருக்கிறார் புக்கோவ்ஸ்கி. ரத்தினச் சுருக்கமாக!

-கோகுல் பிரசாத்

No comments:

Post a Comment