Thursday, 13 July 2023

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!-கவிதாஎத்தனை எத்தனை கவிஞர்கள் பிறந்து வந்திருக்கின்றனர். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை , பாரதியின் கவி வரிகளை மேவியோ கடந்தோ ஒற்றைச் சொல்லைக் கூட இதுவரை இலகு தமிழில் யாரும் எழுதிவிட இல்லை என்றே தோன்றுகிறது. துமிக்கும் மழையின் முதற் துளி போல அத்தனை இளமையோடு இருக்கின்றன அவன் எழுதிய வரிகள். அவனது ஒற்றைச் சொற்களுக்குக்கூட அத்தனை வலிமையுண்டு.ஆண்டு பலவாய் அவன் கவிதைகளைப் படித்து வந்தபோதும் அவன் யாத்த சொற்களும் வரிகளும் இன்றும் நம் உணர்வுகளைப் புத்தம் புதிதாய் உயிர்ப்பித்து விடுகிறது.ஒரு செண்பகத் தோட்டத்தின் தெற்கு மூலையில் அவன் காத்திருப்பு. காதலுக்காக சில மணித்துளிகள் காத்திருப்பதன் சுகத்தையும், சந்திக்க வராது போனவளிடத்துப் பிறக்கும் தவிப்பையும் எத்தனையெத்தனை வடிவிற்தான் சொல்லிப் பார்க்கிறான் பாரதி.காத்திருக்கிறான். பார்க்கும் இடங்களெல்லாம் அவளைப் போலவே தோற்றம் கொள்கிறது. இதையே மற்றொரு பாடலில் விரித்துக் கூறுகின்றான்.‘நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை.’வானின் இடத்தையெல்லாம் வெண்ணிலா வந்து தழுவுது பார்’ என்று அவனுக்குள் சின்னதாய் ஒரு சிணுங்கல் எழுகிறது. காதலினால் உடல் கொதித்து வேதனை செய்கிறது. இது வேதனையல்ல! காதலின் பெருந்தவிப்பு!சட்டென்று அங்கிருந்து ஓடிச் சென்று அவளைக் காணவேண்டும் என்ற வேகம் வருகிறது. ஒரு அரசியைப் போல மிடுக்கோடு இருப்பவளை தனது வருகை நாணச் செய்திடுமோ என்ற அச்சமும் வருகிறது. அவ்வெண்ணத்தை அதே வேகத்தில் தடுத்துவிடுகிறான். ஒரு பெண்ணின் தன்னிலை மாறாது தன்னோடு வைத்துக்கொள்ள எத்தனிக்கும் காதல் அவனது.அன்றைய பொழுதில் காதலோடு கூடிப் பரவசப்பட முடியாதது தான் செய்த குற்றம் தானோ என தனக்குள் நொந்து நோகிறான்.இதே போல ஊரே உறங்கிக் கிடக்கும் தருணத்தில் தான் மட்டும் அனுபவிக்கும் காதல் வேதனையை, தவிப்பை குறுந்தொகைப் பாடலொன்றும் பாடியிருக்கிறது. அது அங்கே தலைவன் வராததையிட்டு தலைவி தோழிக்குச் சொல்லியது. பதுமனார் என்ற புலவர் எழுதியது.‘நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்தினிதடங் கினரே மாக்கள் முனிவின்றுநனந்தலை உலகமும் துஞ்சும்ஓர்யான் மன்ற துஞ்சா தேனே’ஆனாலும் பாரதியின் “இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ?” என்ற வார்த்தைகளுள் இருக்கும் உணர்வையும் உடல்மொழியையும் குறுந்தொகைப் பாட்டில் என்னால் பெறமுடியவில்லை என்பதே உண்மை.‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!’ – பிரிவாற்றாமையின் ஏக்கத்தை அவளுக்கு வலிக்காமல் சொல்வதற்கு இதை விடவும் வார்த்தையுண்டோ!கொடுத்துவைத்தவள் கண்ணம்மா!உண்மையில் யார் இந்தக் காதலி?‘வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலிபன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தனநின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே’என்று தன் கவிதைத்தமிழையும் காதலியென்றான். அவனுடைய கண்ணம்மா, பால் கடந்தவள், வயதெல்லை கடந்தவள், வரையறைகள் கடந்தவள், அளவீடுகளைக் கடந்தவள்.அவள் சிறுவாழ்வின் பேரோசை.ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

No comments:

Post a Comment