Sunday, 4 December 2016

இளம்பிறை

”நான் என்ன கையெழுத்துப் போடத் தெரியாதவனா ?
கையெழுத்துப் போட்டுத்தான் ஓட்டுகூட போட்டேன் ”
பேனா பதிப்பார், கலப்பை போல் அழுத்தி…

அட்டை கிழிந்து அடி வாங்கும் பயத்தில்
துடிக்கும் மனசு

உச்சி வெயிலில் ” பட்” டென வெடிக்கும்
உளுத்தம் நெத்தாய்
“சடக்” கென முகம் நிமிர்த்தி
சந்தேகம் கேட்பார்

” வழிவிட்டான் மவன் சன்னாசின்னுதானத்தா
போடணும் ? ”

” வ போட்டு புள்ளி வச்சு
ஒம் பேர எழுதுப்பா நேரமாவுது ”

” அந்த சிலேட்டுப் பலகையை எடுத்து
எம்பேர எழுதுத்தா
பாத்து பாத்து வெரசா எழுதிர்றேன் ”
மாடொன்றைத்
தவறவிட்டு வந்து
பண்ணையார் முன் நிற்கும்
மேய்ப்பவராய்த்
தாழும் அவர் குரல்

” இதுக்குத் தான் அப்பவே சொன்னேன்
ரேகை வையுன்னு ”

எழுதி வைக்கும் பெயரைப்
பாத்து பாத்து எழுதிக் கொண்டிருக்கும் போது
போதாமல் போய்விடும் இடம்

” அடுத்த கோட்டுல மடிச்சி எழுதவா ”

அழுகை வந்துவிடும் எனக்கு
” அடுத்த பரிச்சைக்கித்தான்
அங்க எழுதணும் ”
அட்டையைப் பறித்துக் கொண்டு
அவர் பெயரில் குறையும்
ஓரெழுத்தையோ .. ரெண்டெழுத்தையோ
மதகில் அமர்ந்து நானே எழுதி

“போன தடவை மாதிரி
எல்லார்கிட்டயும் காட்டி
சொல்லிச் சிரிக்காம இருக்கணுமே
சுப்ரமணிய சாரு ”
கவலையோடு நுழைவேன் வகுப்பிற்குள்..

— இளம்பிறை

No comments:

Post a Comment