தூக்கம் வராத இரவில்...
தூக்கம் வராத இந்த இரவை
பூனையின் நகமெனப் பிராண்டுகிறேன்
சத்தம் கேட்டு யாரும் எழுந்திட வேண்டாம்.
பசித்த யாசகனொருவன்
உணவுக்காக வீட்டுக் கதவைத் தட்டுவதுபோல
இந்த இரவைத் தட்டுகிறேன்
சத்தம் கேட்டு யாரும் எழுந்திட வேண்டாம்.
விதைத்த பூமி விளைச்சலைக் கொடுத்திட
ஆகாயம் நோக்கி மழை வேண்டி இறைஞ்சும்
மேட்டாங்காட்டு விவசாயி என
இந்த இரவை இறைஞ்சுகிறேன்
சத்தம் கேட்டு யாரும் எழுந்திட வேண்டாம்.
நடுக்கடலுக்குச் சென்று
மீனுக்கு வலைவீசும் மீனவனாக
இந்த இரவின் மீது எனை வீசுகிறேன்
சத்தம் கேட்டு யாரும் எழுந்திட வேண்டாம்
உங்களைச் சலனப்படுத்தவோ
உறக்கம் கெடுக்கவோ
நான் விரும்பவில்லை
நிம்மதியாக உறங்குங்கள்
உங்களின் எதையும் நான் தேடவில்லை
என் தூக்கத்தையே தேடுகிறேன்.
- சௌவி
No comments:
Post a Comment