*பூனையின் மனைவி*– எஸ். இராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ் – 35.00
பூனையின் மனைவியாக யார் இருக்க வேண்டும்? பூனைதானே என்பது ஓர் பொதுபுத்தி. ஆனால் குழந்தைகளுக்கு அப்படியா? ஏன் பூனையின் மனைவியாக ஓர் எலியோ, நாயோ இருக்க இயலாது என அவர்கள் கேட்க கூடும்? கேட்டாலும் தப்பு இல்லை. அவர்கள் கற்பனை அவ்வளவு. இங்கே எஸ். ரா பூனையின் மனைவியாக ஓர் கோழியை வைக்கிறார். கருப்பு நிறத்தாலே சொந்த இனத்தில் இகழப்பட்ட ஓர் கோழி ஓர் பூனையை திருமணம் செய்கிறது. பின் என்ன ஆனது? வாசித்து பாருங்கள்.
*இறக்கை விரிக்கும் மரம்* – எஸ். இராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ் – 40.00
தரையில் வேரூன்றி பலருக்கும் நிழல் தந்தும், இளைப்பாற வழி செய்தும், பறவையின்ங்களின் தங்குமிடமாகவும், வீடாகவும் இருக்கும் ஓர் மரம் தன் வேர் அறுத்து பறக்க நினைக்க முற்படுகிறது. பின் என்ன ஆனது என்பதுதான் இந்த சிறுவர் கதை? படித்து முடித்தபின் இக்கதை சிறுவர்களுக்கு மட்டும் ஆனதுதானா என்ற கேள்வி எழுகிறது. குழந்தைகள் படிக்க மட்டுமல்ல, அவர்களோடு ஓர் உரையாடலை நிகழ்த்தவும் எஸ். ரா வழி கோலியிருக்கிறார்.
*உலகின் மிகச்சிறிய தவளை* – எஸ். ராமகிருஷ்ணன் - டிஸ்கவரி புக் பேலஸ் – விலை ரூ. 40/-
எஸ். ராவின் அடுத்த குழந்தை நூல். இதுவும் குழந்தைகள் படித்திட எளிதான மொழி நடையில். ஏரிகள் காணாமல் போவது குறித்தும், ஏரிகளின் உறைவிட மக்களான மீன், தவளை, ஆமை போன்றவற்றின் வாழ்வாதார சிக்கல்கள் குறித்தும் போராடினால் எதையும் மீட்டெடுக்கலாம் என்ற தன்னம்பிக்கை விதையையும் வைத்து செல்லும் எளிய நூல். ஆனாலும், விலை என்னவோ சற்று அதிகம் தான் என எண்ணத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment