Sunday, 25 December 2016

மகுடேசுவரன்

'ஒரு சிறு இசை' என்பது சரிதானா?
**
பிழைதான்.

‘இசை’ என்று உயிரெழுத்தில் தொடங்கும் பெயர்ச்சொல் முன்னம் சிறு, பெரு ஆகியவை தனித்துத்  தோன்றமாட்டா. புணர்ந்துதான் தோன்றும். சிற்றிசை  என்றுதான் ஆகும். எங்காவாது சிறு அப்பா, சிறு அன்னை என்று எழுதுவோமா ? சிற்றப்பா, சிற்றன்னை என்றுதான் எழுதவேண்டும்.

பெரு ஆசிரியர், பெரு ஆண்மை, பெரு இடி, பெரு ஓசை என்று எழுதலாமா ? பேராசிரியர், பேராண்மை, பேரிடி, பேரோசை என்றுதான் எழுதவேண்டும்.

உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னம்தான் ‘சிறு’ தோன்றும். சிறுதூறல், சிறுமுகை, சிறுபான்மை, சிறுதேர், சிறுநீர். ஆனால், உயிரெழுத்தில் தொடங்கும் பெயர்ச்சொற்கள் முன்னம் இவ்வாறு எழுதுதல் பிழை. அங்கே பண்புத்தொகைப் புணர்ச்சி கட்டாயம் நிகழும். சிற்றடி, சிற்றம்பலம், சிற்றறிவு, சிற்றாள், சிற்றின்பம், சிற்றிடை, சிற்றுண்டி, சிற்றூர் என்று அப்பயன்பாடு நீள்வதைக் காணலாம்.

இது வழுதான் - பிழைதான். இப்போது வழுவமைதியாகத்தான் கருதவேண்டும். உணர்வு மயங்கிய நிலையில் எழுதுமொழிக்கு நேரும் பிழைகள்  வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படும். வாய்ப்பிருப்பின் அடுத்த பதிப்பில் திருத்தமும் செய்துகொள்ளலாம். இப்போது எழுதப்படுவது நம் காலத்தின் கண்ணாடியாய் நிற்கும் உணர்வெழுத்து முறை. அவற்றுக்குச் செம்பதிப்புகள் வரவேண்டும். எல்லா எழுத்தாளர்க்கும் மொழித்தேர்ச்சியான, இலக்கணவழுவற்ற பதிப்புருக்கள் பிற்காலத்தில் தோன்ற வேண்டும் என்பதே என் அவா.
கவிஞர் மகுடேசுவரன்

No comments:

Post a Comment