உன் வாழ்வின் சிறந்த நாள்களை நினைவுகூர்வாயானால் நிச்சயம் அது நீ பயணம் செய்த நாள்களாகத்தான் இருக்கும்."
-பராரிகள்
90களில் மெட்ராஸில் உறவினர்கள் இருப்பதை பெருமையாய் நினைத்துக் கொண்ட காலம்.
மெட்ராஸெல்லாம் நாங்க போனதேயில்ல செந்திலுனு ஆட்டோகிராப் மல்லிகா மாதிரி வெள்ளந்தியாய் பேசியது நினைவிருக்கிறது.அப்போது
டூர் பஸ்ஸில் சென்னை சுற்றுலா செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தனர்.4 நாள் டூர் சென்னைக்கு மட்டும் 350ரூபாய் கட்டணம்.மற்ற ஊர்களுக்கு டூர் செல்வதை காட்டிலும் சென்னை என்றால் விரைவில் சீட் ஃபுல்லாகிடும்.அங்க எல்லா நடிகர்களும் தெருவில் சாதாரணமாய் நடந்து கொண்ருப்பார்கள் என நம்பிக் கொண்டிருந்த காலம்.டூர் போவதற்கு ஒரு மாசம் முன்பிருந்தே நாங்க மெட்ராஸ் போறோம்,மெட்ராஸ் போறோம்னு சொல்லிக்கிட்டு இருப்பேன்
#டூரிஸ்ட் பஸ்களின் பொற்காலம்
வீடியோ கோச் பஸ்ஸில் படம் பார்த்த முதல் தலைமுறை உருவானது அப்போதுதான்.முதல் படமாய் சாமி படம் பார்ப்பது தான் ஐதீகம்.அப்படித்தான் சரஸ்வதி சபதம் படம்,திருவிளையாடல் என சாமி படமாய் போடுவாங்க.சின்னத்தம்பி, பாண்டி நாட்டு தங்கம், செந்தூரப்பூவே என மாஸ் ஹிட்டடித்த படங்கள் அன்றைய டூர் முழுவதும் பார்த்த படங்கள்
அதிகாலை மேல்மருத்துவத்தூரில் குளித்துவிட்டு சென்னைக்கு நுழைந்தோம்.இன்று வரை பயணிகள் பலரின் செட்யூல் இப்படித்தான் துவங்குகிறது. மீனம்பாக்கத்தில் நுழையும் போது அனைவரும் ஜன்னல் சீட்டுக்கு வந்துவிட்டோம்.ஆகாயத்தில் டாடா காட்டிய விமானம் அருகாமையில். இதான் ஏரோப்ளான் எல்லாரும் பார்த்துக்கோங்கனு ஒரு பெருசு அறிமுகப்படுத்தும்.
திரைப்படங்கள் மெட்ராஸ் குறித்து ஏற்படுத்திய பிம்பமும், அதிகம் பார்க்காமல் தனக்குத் தானே உருவகப்படுத்திக் கொண்ட எண்ணமும் சென்னையின் ஒவ்வொன்றையும் பிரம்மிப்பாகவே தெரிந்தன
#மெரினா முதல் மகாபலிபுரம் வரை
மெரினாவை முதன் முதலில் பார்த்தது மறக்க முடியாத நிகழ்வு. உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை எத்தனை படங்களில் பார்த்தது.இன்று நனவானதில் அப்படி ஒரு சந்தோசம்.எம்.ஜி.ஆர் சமாதியில் எல்லாரும் காது வைத்து எம் ஜி ஆரின் கடிகார சத்தம் கேட்பதில் ஒரு அலாதி இன்பம். ஒருத்தர் கேட்டுச்சுனு சொன்னா எல்லாரும் ஆமா ஆமானு சொன்னாங்க.மழை வந்தால் அணையாதீபம் எப்படி அணையாம இருக்கும்னு பேசிக்கிட்டோம்.
அப்போது அண்ணா சமாதி பராமரிப்பின்றி இருந்தது.அப்படியே பீச்சில் விளையாடிவிட்டு வள்ளுவர் கோட்டத்துக்கு போனோம்.அப்பதான் பிஸ்லரி வாட்டர் அறிமுகமான சமயம். தண்ணி இல்லாத கேன் ஒரு ரூபாய்க்கு விற்பாங்க.எல்லாரும் ஐந்தாறு வாங்கிக் கொண்டோம்
கோல்டன் பீச்சுக்கு போன போது எதாவது படத்தின் சூட்டிங் நடக்குமென்று ஆசையாய் போனதில் ஏமாற்றம்.பல படங்களில பார்த்த ரயிலில் ஏறி போனது அலாதி இன்பம்.அப்பிடியே அடையாறு ஆலமரத்துக்கு சென்று ஆயிரமாண்டு பழைமையான மரத்தை பயபக்தியுடன் வணங்கியது நினைவில் இருக்கிறது.
அஷ்ட லட்சுமி கோவில், மகாபலிபுரம், வட பழனி,தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், அன்னை இல்லத்தை வெளியிலிருந்து பார்த்தது என அத்தனை நினைவுகளும் பசுமையாய் இருக்கின்றன.மே மாத பாடலை ஊர் முழுக்க பாடிக்காட்டினேன்.
இப்போது பல முறை சென்னை சென்றாலும் அன்று முதல் முறை சென்னையைப் பார்த்ததில் அப்படி ஒரு அலாதி இன்பம்.ஊரும் வளராமல் நாமும் வளராமல் மகிழ்ச்சி மட்டும் ஆலமரமாய் மனதில் நின்ற தருணம்.
உன் வாழ்வின் சிறந்த நாள்களை நினைவு கூர்வாயானால்
நிச்சயம்
அது நீ பயணம் செய்த நாள்களாகத்தான் இருக்கும்.
No comments:
Post a Comment