Tuesday, 12 October 2021

கற்பதுவே பகிர்வதுவே-23*மணி



ஓநாய் குலச் சின்னம்
-ஜியாங் ரோங்

11/100
Pages-670

#Reading_marathon
#RM314

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்தது..ஆனால் தற்போது முழுப் புத்தகத்தை வாசிக்கும் போது இன்னும் கவனமாய் படிக்க முடிந்தது.
இயற்கைக்கு எதிராக மனிதன் நிகழ்த்தும் செய்கையில் இயற்கையிடமும் உயிரிகளிடமும் தோற்றுப் போகிறான்.நாகரிக வளர்ச்சியில் அழிக்கப்பட்ட நகரங்களில் பூர்வ குடிகளின் இழப்பு தெரிகிறது.மங்கோலியர்கள் எவ்வாறு சீனர்களை வெற்றிக் கொண்டனர் என்பதையும் அறிய முடிகிறது.

மேய்ச்சல் நிலம் என்பது பரந்துபட்ட பரப்பு.பெரிய உயிர்களை சார்ந்து வாழும் சிறிய உயிர்களின் நெருக்கடிகள்,இவற்றில் ஏதேனும் ஒன்றை இழந்தால் உணவுச்சங்கிலியில் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.

மாவோவின் கட்டளைக்கு கீழ்படிந்து மலைப்பகுதி கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களோடு வாழ்கின்றனர் இளைஞர்கள்.இதில் நான்கு பேர் மேய்ச்சல் நிலத்தினால் ஈர்க்கப்பட்டு அங்கு சென்று வாழ்கின்றனர்.அதில் ஒருவனான ஜென் சென் ஓநாய்களின் வாழ்வியலை அறிய விரும்புகிறான்.
அவனுக்கு முதியவரான பில்ஜியின் வழிகாட்டுதல் கிடைக்கிறது. இவரிடம் கேட்காமலேயே ஓநாயின் குகையிலிருந்து ஓநாய் குட்டியை எடுத்து வளர்க்கிறான்.அந்தக் குட்டியை எடுக்கப்போகும் இடம் செம த்ரில்.

ஓநாய்களை வணங்கும் மனிதர்களின் மனமாற்றமும், மனிதர்களை வேட்டையாட நினைக்கும் ஓநாய்களின் மனநிலையும் அருகிலிருந்து பார்ப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.இறுதியில் வென்றது ஓநாய்களா, மனிதர்களா, இயற்கையா என்பதே இந்நாவல்

ஓநாய்களின் வேட்டையை ஒரு இடத்தில் தத் ரூபமாய் விளக்கியிருப்பார்.
"ஒரு ஓநாய் பகல் வெளிச்சத்தில் தனித்திருக்கும் ஒரு மான்மீது தன் தன் கவனத்தைக் குவிக்கும்.ஆனால் இரவு கவிழும் வரை எதுவும் செய்யாது.உறங்கும் போதும் தாக்காது.ஏனெனில் தூங்கும் போதும் உஷாராய் இருக்கும்

ஓநாய் இரவு முழுதும் அருகிலேயே காத்திருக்கும்.சூரிய உதயத்தின் போது,சிறுநீர்ப்பை முழுவதும் நிறைந்திருக்க மான் விழித்தெழும். அப்போது ஓநாய் பாயத் தயாராயிருக்கும்.ஒரு மானால் ஓடிக் கொண்டிருக்கும் போது சிறுநீர் கழிக்க முடியாது.ஆக,அதிகதூரம் ஓட முடியாமல் சிறுநீர் முட்டத் தொடங்கியதும் நின்றுவிடும்.

ஒரு மான் காற்றைப் போல எல்லா நேரமும் ஓட முடியாத போது,
தனித்திருக்கும் ஒன்றை எப்போது வீழ்த்துவது என்பதை ஓநாய்கள் நன்கு அறியும் என்று படித்த முடித்தவுடன் ஒரு ஓநாய் வேட்டையாடுவதை நேரடியாய் பார்த்தது போல் இருந்தது. இந்த ஆன்மாதான் இந்த புத்தகம் முழுவதும் கையைப் பிடித்து இழுத்து செல்லும்.ஓநாய்கள் மனிதர்கள் அளவுக்குத் தீயவை அல்ல”என்ற வரி நாவலின் ஒட்டுமொத்த சாராம்சத்தையும் விளக்கும் வரி. கதையினூடே வரும் இதுபோன்ற தத்துவங்கள் புத்தகத்தை இறுதுவரை பற்றிக் கொண்டு செல்ல உதவுகிறது.

மனிதர்களின் பேராசைக்கும் இயற்கைக்கும் நடக்கும் யுத்தத்தில் பின்விளைவுகளை இயற்கை நின்று ஏற்படுத்துகிறது.

காட்டிற்கே ராஜாபோல் திரிந்த ஓநாய்
"நிலவுலகின் கூரையென வானம் பூமியை மூடியிருக்கிறது/வானம் இருண்டு விரிந்திருக்கிறது/ காற்றடிக்கும் போது புல் சாய்கிறது/ ஒரு ஓநாயும் கண்ணில் படவில்லை." எனும் வரியை படிக்கும் போது மனம் வலிக்கிறது.

#ரசித்தது

*ஓநாய்கள் உண்மையான வர்க்க எதிரிகள்.உலகெங்கும் பரவியிருக்கிற பிற்போக்குவாதிகள் அனைவருமே பேராசை கொண்ட ஓநாய்கள்தான்

*மேய்ச்சல் நிலத்தில் இன்னும் சிலகாலம் இருந்தால் நாமும் ஓநாய்களாக மாறிவிடுவோம்

*புல்லை எரிப்பது சொர்க்கத்தின் விதிகளை மீறும் செயல்

*மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.ஆனால் ஓநாய்கள் எல்லாமே ஒரே மாதிரி

*யுத்த களத்தில் ஒரு முட்டாள் குதிரையால் வெல்ல முடியாததுதான்.ஆனால் குதிரைகள் முட்டாள்தனமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள் முட்டாள்களாக இருப்பதுதான்

*ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தை தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்

*யுத்தம் பொறுமைக் கோருகிறது.மனிதனாக இருந்தாலும் சரி,மிருகமாக இருந்தாலும் சரி,சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்தும்போது பொறுமைசாலிகளே அத்தகைய சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்

*அளவுக்கு மீறிய 
மக்கள் தொகை கொண்ட 
ஒர் இனத்தின் 
மிக முக்கிய பிரச்சினை ...
உயிர் வாழ்ந்திருப்பது 
மட்டும் தான் ." 

*மேய்ச்சல் நிலத்தில் நேரம்தான் உணவு.ஒரு ஓநாய் ஆற அமர சாப்பிடுவதாக இருந்தால்,அது பசியிலேயே செத்துவிடும்.

*புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சி உண்ணும் ஜீவன்களை விட மோசமானவை. உன்னைப் பொறுத்தவரை, மான்கள்மீது இரக்கம் காட்ட வேண்டும். புல்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை,”

*புல்வெளியே பெரிய உயிர் மற்ற விலங்குகள் அனைத்தும் ஏன் மனிதன் கூட சிறிய உயிர்தான் பெரிய உயிரை போற்றினால்தான் சிறிய உயிர்கள் வாழமுடியும்”

*அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது. நீ ஒரு ஓநாயா ஆடா என்பதைப் பொறுத்தது அது"

*கால்நடைகளை வளர்ப்பதென்பது தாவரங்களை பயிர் செய்வதைக் காட்டிலும் மிகவும் கடினம்

*ஒரு கூட்டின் அணில்கள் ஒரு மானைவிட அதிகப் புல் தின்னும்

*உணவுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடுவதே ஓநாய்களின் அடிப்படை

 ஓநாய்களிடமிருந்தே மங்கோலியர்கள் வேட்டையாட கற்றனர்.மங்கோலியர்களில் புகழ் பெற்றவன் செங்கிஸ்கான். தனது எதிரி கூட தனக்கு சரிசமமாய் இருந்தால் மட்டுமே மோதுவானாம். விரைந்து தாக்குவது, சுற்றி வளைப்பது, மறைந்துருந்து தாக்குவது( தீரன் அதிகாரம் ஒன்றில் வருவது போல்)என ஓநாய்களிடமிருந்தே கற்றுள்ளான. அதீத நுகர்வினால் ஏற்படும் இன்னல்கள் என்ன என்பதை அந்த விளைநிலங்கள் புரியவைக்கின்றன.
வேகமாய் படிக்காமல் நிதானமாய் படிக்கும் போது பல உண்மைகள் ஆழமாய் புரிகின்றன

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment