அதிர்வுகள் -இன்குலாப் பற்றிய கட்டுரைகள்
-பா செயபிரகாசம்
#RM314
12/100
Pages-464
"வாழ்வது இனிமையானது
போராட்டங்களோடும் புன்னகையோடும்.
இறப்பது நிறைவானது-நம்பிக்கையோடு"
இன்குலாப் என்றால் புரட்சி என்று அர்த்தம்.இன்குலாப் ஜிந்தாபாத் என்றால் புரட்சி ஓங்குக என்று அர்த்தம்.இறுதிவரை புரட்சியாளராக விளங்கிய ஒருவர்தான் கவிஞர் இன்குலாப்.எழுத்தாளராக, மார்க்சியவாதியாக, மார்க்சிய் லெனினியவாதியாக, ஈழ தமிழர் ஆதரவாளராக, பேராசிரியராக பல்வேறு முகங்களை கொண்டவர் இன்குலாப்.
இன்குலாப்பின் மறைவிற்கு பின் அவர் குறித்து பிரபலங்கள் பகிர்ந்த கட்டுரைகள் மற்றும் அனுபவங்களை நூல் முழுவதும் ஆவணப்படுத்தியுள்ளனர். பொதுவாக இன்குலாப் என்றவுடன் மனுசங்கடா கவிதையும் இன்ன பிற நறுக்குகளையும் கூறி சென்றுவிடுவோம்.ஆனால் அவரின் வாழ்வு ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டமும் இலட்சியத்தை அடைவதற்கான போராளியாகவும் இறுதிவரை இருந்துள்ளார். "மார்க்சிஸ்டாக வாழ்ந்த மார்க்சிஸ்ட்" என்று ஒரு திருமாவேலன் கூறுவார்.
இருபது வயதில் ஒருவன் இடதுசாரியாக மாறாவிட்டால் அவனுக்கு இதயம் இருக்கிறதா கேளுங்கள் என்பது தமிழறிஞர் ஒருவரின் கருத்து. துவக்கத்தில் இன்குலாபும் இடதுசாரி கருத்தியலில் துவங்கினார்.எந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டாலும் சுற்றிப் பார்ப்பது அந்த ஊரின் நினைவுச் சின்னங்களையும் போர்குணமிக்க மக்களையும் தான்.பாப்லோ நெருடாவின் 'காண்டோ ஜெனரல்' எப்போதும் பெரும் செல்வமாய் பாதுகாத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தங்கள் மகளிடமும் கருத்தியல் ரீதியாக வார்த்தெடுத்த அனுபவத்தை மகள் ஆமினா பகிர்ந்துள்ளார்
மொழிப் போர் போராட்டத்தில் இன்குலாப் கலந்து கொண்டதையும்
மார்க்சியவாதியாக, ஈழ விடுதலை வேண்டிய போராளியாக பரிணமித்ததை அவரின் நண்பர் எடுத்துக்கூறுகிறார்.1979ல் தன் இரண்டாவது மகனுக்கு சூட்டிய இன்குலாப் எனும் பெயரை புனைப்பெயராக வரித்துக் கொண்டார்.80களில் நக்சலைட் இயக்கத்திற்கு ஆதரவாய் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.
தனியார் கல்லூரியில் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் யார் தயவுமின்றி இருந்தவர்.
கவியரங்க நிகழ்வில் இன்குலாப்புடன் பயணித்த அனுபவித்தை விளக்கும் ஈரோடு தமிழன்பன்..அவரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்த அனுபவத்தையும் சுவைபட சொல்லியுள்ளார்.அரியலூர் குளப்பாடி ஊரின் கிணற்றில் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த மழலைகளுக்கு சொல்லும் இரங்கற்பாவில் 'மனுசங்கடா' கவிதை உருவானதையும்
ஈழ விடுதலைப் போராட்டங்களில் அவரின் பங்களிப்பை கூறியதுடன் மணிமேகலையை இன்குலாப் எழுதியதைப் போல தமிழகத்தில் யாரும் எழுதவில்லை என பட்டயம் தருகிறார் வை.கோ
இன்குலாபின் புரட்சி கவி நயத்தை அ.மார்க்ஸ்,மு.மேத்தா, கூறியதுடன் சிம்சன் தொழிற்சங்க போராட்டத்தில் கவி பாடியது குறத்தும் பாடல்கள் குறித்தும் பெ.மணியரசன் பதிவு செய்துள்ளார்.திராவிட இயக்க சிந்தனையில் துவங்கி, கீழ் வெண்மணிக்குப் பிறகு தீவிர கம்யூனிஸ்டு ஆனார். போராட்ட குணமுள்ள அவருக்கு அது ஏற்ற களமாகவும் இருந்தது.
பாரதி தன் தீப்பந்தங்களை தந்தது இருவரிடம் ஒருவர் பாரதிதாசன் மற்றவர் இன்குலாப் என்பார் நூலாசிரியர்.போலித்தனங்கள், ஜாதி ஒலிப்பு,பெண்களை, சமூக அவலங்களை தன் பாடு பொருளாக்கினார்.'உலகம்/பிணங்கள் உறங்கும்/கல்லறை அல்ல/புரட்சி துடிக்கும் கருவறை' என்று பாடினார்.ஒரு முறை காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து வெளியேறும் போது "இனி என்ன செய்வீர்கள்? என்று ஏளனம் பொங்க கேட்ட போது சொன்னார் 'இதுவரை செய்ததை இனிமேல் இரண்டு மடங்காகச் செய்வேன்! என்று. அந்தத் துணிவு தான் அவர்.
" செருப்பணிந்து கொண்டு தெருவில் வராதே என்று
சொல்லுகின்றவனின் தோலை உரித்தே
செருப்பாக்கி மாட்டித் திமிர் நடை போடுவோர் என அந்நாளைய ஆதிக்க சக்திகளுக்கு எதிராய் குரல் கொடுத்தவர்."நான் பாடாவிட்டாலும் என் பாடலின் பொருளை என் தோழர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தோழர்களின் நாடித்துடிப்பையும் அறிந்தவர். புரட்சிகர பயணம் போராட்ட வாழ்க்கை ஒரு கட்டத்தில் சலிப்புத் தட்டிவிடும். ஆனால் ஒரு சிலர்க்கு மட்டுமே போராட்ட குணம் வற்றவே வற்றாது. அந்த ஊற்றுக்கண் அமைந்த ஒருவர் தான் இன்குலாப்
#ரசித்தது
*விளம்பர வெளிச்சத்தில் விட்டில் பூச்சிகளை கவர்ந்திழுப்பது கடினமானது அன்று.ஆட்சி மாற்றம் குறித்து
*எனது நிறத்திலும் மணத்திலும் நான் பூத்துக் கொண்டிருக்கின்றேன். இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் நான் கருகும் வரை பூப்பேன்
*நியாய சூட்டால் சிவந்த கண்கள், உரிமை கேட்டுத்துடிக்கும் உதடுகள், கொடுமைகளுக்கு எதிராக உணரும் கைகள்-இவையே எனது பேனாவை இயக்கும் சக்திகள்
*சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன் இசைப்பேன்!
*நெருக்கடி நிலை காலத்தில் குரல்கள் எனும் நாடகம் அப்போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
*அதிகாரவர்க்கம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ அதை எல்லாம் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்
*இன்குலாப்பின் கடைசி கவிதை 'கண்ணாமூச்சு' உகரன் இதழில் வெளிவந்தது.
*வெள்ளையாய்த் தோன்றும்
எந்தச் சொல்லும் வெள்ளையாய்
இல்லாததால்
இல்லை எனது சொல்லும்
வெள்ளையாய்
*தனிமை எனக்குப் பிடிக்கும். ஆனால் இது திணிக்கப்பட்ட தனிமை
*போயும் போயும்
அட்டைகளிடம் அல்லவா
கேட்டோம் ரத்ததானம்
பெரியாருக்கு பின் வந்த திராவிட இயக்கங்களின் மீது விமர்சனம் இருந்தது.இறுதியாக இறக்கும் தருவாயில் கூட என்னை முழுமையாக மக்களுக்கு உரித்தாக்க விரும்பினேன்.ஆனால் நேர்ந்த வாழ்க்கை அதற்கான முழு வாய்ப்பை தரவில்லை என்றார்.
இறுதிவரை இலட்சிய பாதையிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டார்.திருமாவேலன் கூறியது போல் அவரை ப்போல எழுதலாம். அவரைவிட வேகமாக எழுதலாம். ஆனால் அவரைப் போல 'கொஞ்சமாகக் கூட' வாழ முடியாது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment