Tuesday, 7 February 2023

கற்கை நன்றே-16*மணி



நேற்று இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.அண்ணன் ஒருவர் தன் தம்பியை சைக்கிளின் பின்னாள் அமர வைத்து ஓட்டிச்செல்வது.. அத்துடன் பாதுகாப்பிற்காக கால்கள் சக்கரத்தில் சிக்காமல் இருக்க கயிறு போட்டு கட்டியிருந்தார்.அதை பார்க்கும் போது அண்ணன் தம்பி பாசத்தை அறியமுடிகிறது. அனுபவத்தில் மூத்தவரான அண்ணன் தன் அனுபவத்தின் மூலம் கிடைத்த படிப்பினையை தம்பிக்கு போதிக்கிறார்.சகோதர பாசத்தை முதலில் பார்த்து வியப்பூட்டிய படம் கண்கண்ட தெய்வத்தில் வரும் ரங்காராவும்,எஸ் வி சுப்பையாவும் தான்.சகோதர பாசத்தை மேன்மையாய் சொன்ன இன்னொரு படைப்பு..

ஹிந்தியில் பிரேம்சந்த்  எழுதிய "மூத்த சகோதரன்" எனும் கதை. அண்ணன் தம்பி இருவர் மட்டும் கதாபாத்திரங்கள். அண்ணன் எப்போதும் படித்துக் கொண்டிருப்பார். தம்பி விளையாட்டு பிள்ளை.. அவர் பட்டம் விடுவதில் அலாதி இன்பம். தம்பி பட்டம் விடுவதை பார்த்து நீ தேர்வுக்கு படிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறாயா ஒழுங்காக படி என்று அண்ணன் அதற்றுவார். அப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும். அண்ணன் தேர்ச்சி பெறவில்லை, தம்பி தேர்ச்சி பெற்று விடுவார். மீண்டும் இதே போல் தேர்வு நாளில் பட்டம் விடும்போது அண்ணன் உடனே எழுந்து சென்று தம்பியை அதற்றி போன முறை நீ தேர்ச்சி பெற்றாய் என்பதற்காக சாதாரணமா இருக்கக் கூடாது. சின்ன வகுப்பில் தேர்வு எளிதாக இருக்கும் மேலே செல்ல கடினமாக இருக்கும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

 அந்த தேர்விலும் தம்பி தேர்ச்சி பெற்று விடுவார். அண்ணன் தோற்றுவிடுவார். இருவரும் ஒரே வகுப்பில் படிக்க நேரிடுகிறது. மீண்டும் இதே போல் தேர்வு வருகிறது. மீண்டும் இதே போல் பட்டம் விடுகிறார். மீண்டும் அண்ணன் அதே வசனத்தை கூறுகிறார். தம்பியும் தயங்காமல் கேட்டுக் கொள்கிறான். இந்த முறையும் அண்ணன் தேர்வில் தோற்க தம்பி ஜெயிக்கிறான். இப்போது நான் பட்டம் விடுவதை யார் தடுக்க முடியும் என்று நினைக்கிறான் தம்பி. மைதானத்தில் பட்டம் விட்டுக் கொண்டிருக்கும் போது அண்ணன் அங்கு வருகிறார்..

 அப்போது ஒரு உணர்வு போராட்டம் நடக்கிறது. உன் மனதில் உள்ளதை நான் அறிவேன். நான் தோற்றுப் போனதால் உன் மீது அதிகாரம் செலுத்த முடியாது என்று கருதுகிறாய். ஆனால் அது தவறு. எனக்கு உன் மீது உள்ளது அதிகாரம் அல்ல, அன்பு தான். நான் தோற்றாலும் பரவாயில்லை நீ வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அவர் கூறியவுடன் தம்பி உடனே அவர் பின்னால் வந்து விடுவார். இத்துடன் கதை முடிகிறது.

 அன்பு என்பது அதிகாரம் என்பது தவறாய் பல நேரங்களில் புரிந்து விடுகிறது. ஆனால் அன்பின் அனுசரனை தெரியவரும் போது அதிகாரம் நம் கண்ணுக்குத் தெரியாது என்று இந்த கதையின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். உடன் பிறந்தவர்கள் மட்டும்தான் அண்ணனா என்றால் நிச்சயம் அது தான் இல்லை. நம் நலனில் அக்கறை உள்ளவர்கள் அதிகாரமாய் கூறும் போது அதனுள் அன்பு நிச்சயம் இருக்கும். அந்த அதிகாரத்தை புறந்தள்ளிவிட்டு அந்த அன்பினை நம் அக கண் கொண்டு பார்த்தால் நம்மை விட பல மடங்கு அவர்கள் உயர்வாய் தெரிவார்கள். இதைத்தான் கண்ணதாசன் பழனி படத்தில் எழுதி இருப்பார்

பணத்தின் மீதுதான்

பக்தி என்றபின்

பந்த பாசங்கள் ஏனடா!

 

பதைக்கும் நெஞ்சினை

அணைக்கும் யாவரும்

அண்ணன் தம்பிகள் தானடா!

அண்ணன் தம்பிகள் தானடா!

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment