Thursday, 9 February 2023

கற்கை நன்றே 17 *மணி




எந்த ஒரு கருத்தும் எதிர் கருத்தால் தான் வளர்ச்சி பெறும். எதிர் கருத்தும் முதல் கருத்தும் மோதி புதிய கருத்து ஒன்று உருவாகும். 

-ஹெகல்

சமீபத்தில் கோகுல் பிரசாத் எழுதிய சுருக்கம் எனும் ஒரு கட்டுரையை வாசித்தேன். எந்த ஒரு கருத்தையும் தற்போது கண்டிப்பது எளிதாகிறது மறுப்பதும் சுலபமாகிறது. சொல்ல வந்த கருத்தின் உட்பொருளை உணராமல் ஏதேனும் ஒன்று சொல்வது அல்லது எதிர்ப்பது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்த கட்டுரையில் அதைத்தான் முன் வைக்கிறார்.

நீங்கள் ஒரு கருத்தை சொன்னீர்கள் எனில் எதிர் தரப்பினரால் அக்கருத்து திரிக்கப்பட்டும், சுருக்கப்பட்டும், தவறான நிலைப்பாடும் எடுக்கப்படும். பின்னர் தாங்கள் பிழையாக கற்பனை செய்த கருத்தாக்கத்துக்கு எதிர்வினை ஆற்றி உங்களை குற்றவாளியாக்குவார்கள். அதுவே உங்களது நிலைப்பாடு என்று நிறுவி அதற்கு விளக்கமும் கேட்கிறார்கள். இதற்குப் பெயர்தான் straw man fallacy.
இப்போது நீங்கள் முதலில் சொன்ன கருத்து விவாத காலத்திற்கே வந்திருக்காது. நீங்கள் உத்தேசிக்காத திசையில் செல்லும் விவாத போக்குகளுக்கு மறுப்பு சொல்லியே ஓய்ந்து விடுவீர்கள். மன உளைச்சலுக்கும் நேர விரையத்துக்கும் பலியாவீர்கள்.

இதனோடு தொடர்புடையது association fallacy. ஒருவருடைய கருத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஏற்பும் மறுப்பும் சொல்லாமல் அவரது பின்னணி என்ன, குலம் கோத்திரம் என்ன, உள்நோக்கம் இருக்கிறதா, இதை சொல்வதால் அவருக்கு ஆதாயம் உள்ளதா என்பது போன்ற தேவையற்ற விஷயங்களை ஆராய்ந்து இவற்றில் ஏதேனும் ஒரு கோளாறோ பிசகோ தென்பட்டால் கருத்தை அம்போவென விட்டுவிட்டு கருத்துக்கு சம்பந்தமில்லாதவற்றை தூக்கிக் கொண்டு வந்து களமாடுவது. ஒருவர் மீது முத்திரை குத்தி வெற்றிகளிப்பில் வசை பாடுவது உள்ளிட்டவையாகும்

ஒரு கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் போது (straw man fallacy,association fallacy) இந்த இரண்டு விஷயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மையும் அறியாமல் இவை நமக்குள் ஊடுருவி இருந்தால் அவற்றைக் களைந்த பிறகே நம்முடைய பார்வையை பொதுவெளியில் கூற வேண்டும். அதுவே ஆரோக்கியமான விவாதத்திற்கான பாதை.

இதனை பொதுவெளியிலும் டிவி விவாதத்திலும் பார்க்கலாம். அன்றாட வாழ்க்கையில் மனிதர்களிடமும் காணலாம்.அலுவலகத்தில் மேலாளர் ஒருவரை பார்த்து ஏன் தாமதம்? என்று கேட்டால் அதற்கான காரணத்தை சொல்லாமல் நேற்று நடந்தது, சம்பந்தமில்லாத பதில்களை சொல்லும்போது இதனை கண்கூடாய் பார்க்கலாம். தான் குற்றவாளி அல்ல என்பதை நிருபிக்கும் மெனக்கெடல்களே முதன்மை காரணம்.ஆகவே இந்த இரு அம்சங்கள் இல்லாதவரிடம் விவாதியுங்கள்.விவாதம் புதிய சிந்தனையை, புதிய பார்வையை உருவாக்கும்.

இனிய காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment