Thursday, 9 February 2023

வாலி


நமது திரைப்பாடல் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகள் என்றபோதும், அவர்களும் அவ்வப்போது சங்க இலக்கியங்களிலிருந்தோ, நமது பழம் செய்யுளிலிருந்தோ, சமயத்தில் சக பாடலாசிரியர்களிடமிருந்தோ கூட பாடல் வரிகளை எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள். 

இதை திருட்டு என்றெல்லாம் சொல்ல முடியாது. கடன் வாங்குதல் என்று சொல்லிக் கொள்ளலாம். ஏனென்றால் ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகாது. ஒருவர் எழுதியதை முழுவதுமாக நம்முடையதாக எடுத்துக் கொள்வது என்பதை வேண்டுமானால் திருட்டு என்று சொல்லிக் கொள்ளலாம். 

'எம்டன் மகன்' படத்தில் 500 ரூபா கடை கணக்குல குறையுதுனு நாசர் பரத்தை புடிச்சி வெளுத்துருவாரு. ஆனா உண்மையாவே அந்த காச வடிவேலு தான் எடுத்துருப்பாரு. நாசர் ஏன்டா எடுத்தேனு கேக்கும்போது நம்மக் கடை நம்ம கல்லானு உரிமைல கை வச்சேனு சொல்லுவாரு. 

அதே மாதிரி நம்ம பாடலாசிரியருங்க நம்ம கடை நம்ம கல்லாங்குற உரிமைல எங்கெங்க கை வச்சாங்கனு என் புத்திக்கு எட்டுன வரை எழுதலாம்னு இருக்கேன். இதையாவது தொடர்ச்சி எழுதிறனும்னு அவா. பாப்போம்.

கங்கை அமரன்  இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர்னு பன்முகத்தன்மை கொண்டவரு. அதுல அவரு பாடலாசிரியரா ரொம்பவே சிறப்பானவரு. அற்புதமான பாடல்களை எழுதிருக்காரு. அவர் எழுதுனதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

 "உன் பார்வையில் ஓர் ஆயிரம் கவிதை நான் எழுதுவேன்.."

அதுல ஒரு வரி வரும் "நிதமும் உன்னை நினைக்கிறேன். நினைவினாலே அணைக்கிறேனு". 

மத்த வரிகளை கூட இன்னொருத்தர் எழுதிறலாம். ஆனா யாரலயும் எழுத முடியாத வரியை நீங்க தரும்போதுதான் நல்ல கவிஞராவோ நல்ல பாடலாசிரியராவோ ஆக முடியும். நினைவினால் அணைப்பது என்பது புதுக்கற்பனை அதுலயும் சிறந்த கற்பனை.

இந்த வரி கவிஞர் வாலிய ரொம்பவே கவர்ந்துட்டு. எல்லாருக்குமே தெரியும் வாலி மட்டும்தான் மூத்த பாடலாசிரியர்கள்ல இளைய பாடலாசிரியர்களை பயங்கரமா பாராட்டக்கூடியவர். 

'வெயிலோடு விளையாடி' பாடலைக் கேட்டுட்டு முத்துக்குமாருக்கு போன் பண்ணி, யோவ் எப்படியா இப்படி பாட்டு எழுதுன 'புழுதிதான் நம்ம சட்டை'னு எழுதி வச்சிருக்க, இதெல்லாம் பாட்டுல வைக்க ரொம்ப கஷ்டம்யா செமனு சொன்னாராம். 

அதே மாதிரி 'கல்யாணம்தான் கட்டிக் கிட்டு ஓடி போலாமா' பாட்ட கேட்டுட்டு சினேகனுக்கு போன் பண்ணி "நல்லா எழுதிருக்கய்யா", இந்தப் பாட்டுக்கு நிறைய எதிர் விமர்சனம் வரும், அத கண்டுக்காத" கமர்சியலா ஒரு பாட்ட இப்படி எழுதிதான் ஹிட்டாக்கணும்னு சொன்னாராம்.

இதெல்லாம் எதுக்குடா சொல்றேனு நீங்க கேக்கலாம். ஏன் சொல்றேனா, தமிழ் சினிமாவுல 60 ஆண்டுகளா உச்சத்துல இருந்த ஒரே கவிஞர். அவ்வளவு உச்சத்துல இருந்தபோதும் சக கவிஞர பாராட்டுற நல்ல குணம் கொண்டவர் வாலிங்குறது மட்டுமில்ல. நல்ல பண்பாளர் அவரு.

நான் மேல குறிப்பிட்ட 'உன் பார்வையில் ஓர் ஆயிரம்' பாடல் வரிகள்ல உள்ள 'நினைவினாலே அணைக்கிறேன்" வரியைக் கேட்டு திகைச்சுப்போன வாலி, கங்கை அமரனுக்கு போன் பண்ணி பாராட்டிட்டு, வித் யுவர் பெர்மிஷன் இந்த வரியை நானும் பயன்படுத்திக்கிறேனு கேட்டாராம். கங்கை அமரனும் அண்ணே உங்களுக்கு இல்லாமலா தாராளமா எடுத்துக் கோங்கணு சொல்ல...

'மௌன ராகம்' படத்துல ஒரு அற்புதமான பாட்டு ஒன்ன வாலி எழுதிருப்பாரு. 'நிலாவே வா... செல்லாதே வா...'  

இந்த பாட்ல கங்கை அமரன்ட்ட கடன் வாங்குன வரியை வாலி பயன்படுத்திருப்பாரு. 'எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்.."னு.

வாலி கங்கை அமரன்ட கேக்காம கூட எடுத்துருக்கலாம். அதுக்கு கங்கை அமரனும் ஒண்ணும் சொல்ல போறதும் இல்ல. இருந்தாலும் கேட்டு பயன்படுத்துன வாலி கிரேட்தான்.

-படித்தது

No comments:

Post a Comment