ஒன்றுக்கு ஒரு ஓர்.
இரண்டுக்கு இரு, ஈர்.
மூன்றுக்கு என்ன ?
OO
1 – ஒன்று
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் ஒரு வரும்.
ஒரு புத்தகம், ஒரு வண்டி, ஒரு கட்டடம்
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் ஓர் வரும். ஒன்று என்ற சொல்தான் இரண்டாம் சொல்லுக்கேற்ப ஒரு, ஓர் என்றாகிறது.
ஓர் எழுத்து, ஓர் அணில், ஓர் அருவி
2- இரண்டு
இதனை அப்படியே இரண்டு என்ற எண்ணிற்கும் பொருத்தி எடுத்துக்கொள்ளலாம்.
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொற்களின் முன்னம் இரு வரும்.
இரு படங்கள், இரு மலர்கள், இரு பெண்டிர்
உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களின் முன் ஈர் என்றுதான் வரும்.
ஈராயிரம், ஈருருளி, ஈருயிர்.
ஒரு ஓர், இரு ஈர் ஆகியன நம் அனைவர்க்கும் தெரியும். மூன்று என்னாகிறது என்று பார்ப்போம்.
3 – மூன்று
மூன்று என்பதனை அடுத்து உயிர்மெய்யெழுத்து வந்தால் மூ என்ற எழுத்து மட்டுமே குறிலாய் மு என எஞ்சி நிற்கும். இரண்டாம் சொல்லுக்கேற்ப ஒற்று மிகும்.
முத்தமிழ், முக்கடல், முப்பால், முச்சந்தி, மும்மலர், முவ்வழி
இரண்டாம் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால் மூ என்ற நெடிலாகவே நிற்கும். ஒரு ஓர் போல மு, மூ என்றே மூன்றுக்கு அமைகின்றன.
மூவாறு, மூவேழு, மூவிரண்டு, மூவுலகம்
இவ்விடத்தில் முவ்வாறு, முவ்வேழு, முவ்விரண்டு, முவ்வைந்து, முவ்வுயிர் என்றாலும் பிழையில்லை.
4 – நான்கு :
நான்கிற்கு என்ன ஆகும் ? நான்கு நால் என்று ஆகும்.
நாலடி, நாலிலை.
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னும் நால் என்றே அமைந்து வரும் எழுத்திற்கேற்பச் சேரும்.
நாற்கரம், நாற்சந்தி, நாற்புரம், நால்வகை (நான்வகை), நால்மணி (நான்மணி)
நான்கினைக் குறிக்க அச்சொல்லைத் தனியே பிரித்து எழுதும் போக்கும் மிகுதியாக இருக்கிறது – நான்கு உயிர்கள், நான்கு கோவில்கள், நான்கு வழிகள்.
- கவிஞர் மகுடேசுவரன்
(இன்றைய தினமலரில் வெளிவந்தது.)
தலைப்பிலுள்ள கேள்விக்கு விடை :
ஒன்றுக்கு ஒரு ஓர்.
இரண்டுக்கு இரு ஈர்.
மூன்றுக்கு மு, மூ.
No comments:
Post a Comment