Saturday, 12 November 2022

Old is gold-11*மணி



#அம்பேத்கரின் உலகம்
தலித் இயக்க உருவாக்கம்
-எலினார் ஸெல்லியட்

ஒரு மனிதன் ஒரு வாக்கு வந்துவிட்டது
ஒரு மனிதன்-ஒரே மதிப்பு
என்று வரும்

-அம்பேத்கர்

ஐந்து தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் போல் நீளும் இப் புத்தகத்தில் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் காண முடிகிறது. முதலாவதாக மஹர் இனத்தின் பின்புலத்தை மிகவும் வரலாற்று ரீதியாகவும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டன என்பதை பற்றியும் மிக விரிவாக 83 பக்கங்களில் விவரிக்கிறது. 17 ஆம் நூற்றாண்டில் இருந்து மஹர்கள் காவலாளியாகவும், படைவீரர்களாகவும் பணிபுரிந்துள்ளனர். பேஸ்வாக்களின் காலம் ஆரம்பம் ஆகும் போதும் மஹர்கள் பழைய பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.பேஷ்வா என்ற பிராமணர்களின் கைக்குள் அதிகாரம் சென்றபின் மஹர்களின் நிலை மோசமடைய ஆரம்பித்துவிடுகிறது என்பது தொடங்கி அவர்கள் பட்ட துன்பத்தினை மிக விரிவாக.. அம்பேத்கர் முன் போராடிய தலைவர்களை பற்றியும் விளக்குகிறது.

நாக்பூரில் பன்சோத், புனேவில்  காம்ப்ளே ஆகிய இரு தலைவர்களும் மஹர்களின் வாழ்வாதாரம் மேம்பட போராடியவர்கள்.1904 இல் இருந்து 1920 வரை தொடர்ந்த நீண்ட நெடிய போராட்டம் மஹர்களின் குறைகளை பறைசாற்றுவதும் உரிமைகளை பெற்று தரவும் நடந்த போராட்டத்தில் முன் நின்று நடத்தியவர் காம்ப்ளே. 1920 இல் சமூக களத்தில் அம்பேத்கர் இறங்கும் போது காம்ப்ளே அவரை முழு மனதுடன் வரவேற்கிறார். 1930 இல் நடந்த வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோரின் சார்பாக அம்பேத்கர் கலந்து கொண்டார். 1937 இல் காம்ப்ளே இயக்கத்தில் இருந்து அம்பேத்கர் விலகுகிறார். ஆனாலும் காம்ப்ளேயின் வழியிலேயே தன்னுடைய இயக்கத்தையும் நடத்தினார்.

அம்பேத்கரை மாபெரும் தலைவராக ஆக்கிய மூன்று விஷயங்களாக சொல்லப்படுவன.. ஆங்கிலேயரை சாராமல் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனித்து இயங்கினார்.தெளிந்த அவரது சிந்தனையில் அழகிய மொழி வல்லமையும், உயர் சாதி இந்து மக்கள் மீது கொடுத்த குத்தல்களும் கைதேர்ந்த வழக்கறிஞரின் தொகுப்புரை விட சிறப்பாக இருந்தது. மூன்றாவதாக தாழ்த்தப்பட்டோரின் குறைகளையும் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தேவையை நிறுத்தி விடாமல் ஜனநாயக அரசின் அதிகார பரவலாக்கம் ஆகியவை குறித்தும் பேசியது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கரின் பின்னணி பற்றி பாட புத்தகங்களில் நாம் படித்தவர்கள் தான். ஆனால் தெரியாதவையாக அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சப்பல் பணி ஓய்வு பெற்ற ராணுவத்தினர். மனைவியின் தந்தையும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவரின் குடும்பப் பெயர் சக்பால். பிறந்த மண்ணின் பெயர் அம்பவதேக்கர். இதுதான் இரண்டாவது பெயராக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆசிரியரின் அன்பு இதையெல்லாம் தாண்டி அவருக்கு புதிய பெயர் ஒன்றை அளித்தது.

அம்பேத்கரின் அரசியல் பயணத்தில் ஆலய நுழைவு போராட்டம் மிக முக்கியமாக இருந்துள்ளது 1927 இல் மூன்று கோவில்களில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்தித்தாள் மூக் நாயக் எனும் குரலற்றோரின் நாயகன் மற்றும் விலக்கப்பட்ட இந்தியா,மக்கள், எழுச்சி பெற்ற இந்தியா என பல்வேறு செய்தித்தாள்களில் அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.

1919 முதல் 1936 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் நிறைவேறும் நாள் வரை ஆங்கிலேயர் அமைத்த அத்தனை கமிஷன்கள் மாநாடுகள் அனைத்திலும் தீவிரமாக கலந்து கொண்டு தன் கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இதற்குப்பின்  காந்திக்கும் இவருக்கும் ஆன கருத்து மோதல் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. தனித்தொகுதி வேண்டும் என்பதில் தீவிரமாகவும் தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதிலும் தீவிர முனைப்புடன் இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பே 1932 முதல் 1942 வரை தாழ்த்தப்பட்டவர்களின் நலன்களுக்காக பாடுபட்டதுடன், எப்படியாவது முன்னேற்றி  விட வேண்டும் என்று தீவிரமாக உழைத்தார்.

1935 லிருந்து தீண்டப்படாத மக்கள் முன் இரண்டு வார்த்தைகள் நின்றன. ஹரிஜன் மற்றும் பட்டியலினம். இதில் ஹரிஜன் என்ற சொல் கடவுளின் மக்கள் என்று பொருள் படும் குஜராத் சமயத்துறவி ஒருவரால் முதலில் பயன்படுத்தப்பட்டது‌. காந்திக்கு இது பிடித்ததால் அச்சொல்லை காந்தியும் காங்கிரஸ் கட்சியும் 1933 பயன்படுத்த ஆரம்பித்தனர். 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தீண்டாமைக்குள் அடைபட்டிருக்கும் சில சாதிகளை தனியாக பட்டியலிட்டு அவர்களை பட்டியல் இனங்கள் என்று அழைக்கப்பட்டனர். மஹர் ஜாதியினரும் இரண்டாவது பெயரையே தேர்ந்தெடுத்தனர். 1942-ல் அம்பேத்கர் பட்டியல் இனத்தவருக்கென்று ஆரம்பித்த அரசியல் கட்சிக்குப் பிறகே இந்த பெயர் முழு புழக்கத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1935 ஆம் ஆண்டில் தான் இந்து மதத்தை விட்டு விலக வேண்டும் என்ற முடிவை அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இயோலா நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாட்டில் முதன்முறையாக அறிவித்தார். இதற்குப் பின் பல்வேறு உரையாடல்கள் போராட்டங்கள் நடைபெற்றாலும் 20 ஆண்டுகள் காத்திருக்கும் படி நேர்ந்து பின்பு மதம் மாறினார்கள். 1956 ஆம் ஆண்டு நாக்பூரில் மதம் மாற விரும்புவர்கள் வெள்ளை உடையில் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அக்டோபர் 14 மற்றும் 15ஆம் தேதி நாக்பூரில் நடைபெற்றது. 65 ஆயிரம் பேர் இதில் பெயர் கொடுத்திருந்தனர். ஆனால் மதமாற்றுச் சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் மூன்றிலிருந்து 5 லட்சம் பேர் என்கிறார்கள். அம்பேத்கர் பர்மாவில் இருந்து வந்திருந்த 83 வயதான புத்தப்பிச்சு விடமிருந்து தீட்சை பெற்றார். அதன் பின் மூன்று சரணங்களையும், ஐந்து வாக்குறுதிகளையும், 22 உறுதிமொழிகளையும் எடுத்தார். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் மதமாற்றத்துக்கு வந்திருந்த அனைவருக்காகவும் அவரே சிந்தித்து உருவாக்கியது. இவை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

1935 ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை அம்பேத்கரின் அரசியல் வளர்ச்சியை ஒவ்வொரு நிலையிலிருந்தும் அவர் ஆரம்பித்த இயக்கம் கட்சி இயக்கப்பட்ட போராட்டங்கள் அந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்று வரிசை கிராமமாக மிகவும் விரிவாக இந்த கட்டுரை தந்துள்ளது.

இறுதியாக அம்பேத்கர் மூன்று பெரும் அமைப்புகளை வாரிசுரிமையாக விட்டுச் சென்றுள்ளார் .அவை மக்களின் கல்வி அமைப்பு, இந்திய புத்தமத அமைப்பு, குடியரசு கட்சி என் மூன்று ஆகும். அம்பேத்கர் மறைவுக்கு பின்பு மகாராஷ்டிராவில் புத்த மத மாநாடுகள் நடைபெற்றன புத்த மதத்தினர் அரசியல் ஈடுபாடு இல்லாததும் ஒரு காரணமாக மக்களிடையே ஈர்ப்பு இல்லை என்பது தெரிய வருகிறது. அவருக்கு பின் அவரது மகன் யஸ்வந்த் அம்பேத்கர் தலைமையில் நடந்த இந்த அமைப்பு முறையாக இயங்கவில்லை. புத்த மதத்தினருக்கு சலுகைகள் கிடையாது என்பதும் இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது.

அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு குடியரசு கட்சி பி கே கெய்கவாட் என்பவரின் தலைமையை எதிர்த்து இளைஞர்கள் விலகி பிளவு ஏற்படுத்தினர்.அதனால் தோல்வியே மிஞ்சியது. ஒரு சிலர் சோசியலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தனர். காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து அதன் மூலகாரணத்தை தகர்த்து விட்டார் என்பார்கள் அரசியல் அறிஞர்கள்

*எங்கள் நாட்டில் முதல் முறை ஆங்கிலேயர்கள் படைப்பிரிவு ஆரம்பத்தை நாளிலிருந்து மஹர்கள் அதன் முழுமையாக ஈடுபட்டிருந்தார்கள்

*1907 ஆம் ஆண்டு அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் படிப்பினை முடித்தார். இந்தக் கல்வி நிலையை கடந்த இரண்டாவது மஹர் அம்பேத்கர் தான்

*பட்டம் வாங்கியதும் பரோடா மன்னரிடம் ஒன்பது நாட்கள் வேலைக்கு இருந்தார். பின் தந்தை உடல்நிலை காரணமாக திரும்பி வந்து விட்டார்

*1913-1916 மூன்று ஆண்டுகள் கொலம்பியாவில் பயின்றார்  என் வாழ்வில் மிகச் சிறந்த நண்பர்களாக வந்தவர்கள் என்னுடன் கொலம்பியாவில் பயின்ற வகுப்பு தோழர்களும் மதிப்புக்குரிய என் பேராசிரியர்களும் ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார்

*1914 இல் அமெரிக்காவில் ஹோம் ரூல் இயக்க கிளைக்கு அவரை அழைத்த போது "அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற விரும்பியோரின் அடிமைகளாக இன்னும் தாழ்த்தப்பட்டோர் இருப்பதால் மறுத்துவிட்டார்.

* இந்தியன் பழம்பொருள் திரட்டு என்ற ஆய்விதழில் அவரின் ஆய்வு கட்டுரை வந்துள்ளது முதல் முறையாக

*முனைவர் பட்டம் 1927ல் வாங்கியுள்ளார்.

நூலின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் மிகவும் ஆதாரத்துடன் குறிப்புகளுடன் மிகவும் நேர்த்தியாக புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் அறிந்த தகவல்கள் சில இருந்தாலும் அறியாத தகவல்களும் அவ்வப்போது எட்டி பார்ப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும் உள்ளது. அம்பேத்கர் குறித்து அறிய விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று. அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவ உலகம் இன்னும் கனவாகவே இருப்பது வேதனைக்குரியதுதான். எதிர்காலத்தில் அவரின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற நிலைப்பாட்டுடன் புத்தகத்தை படித்து முடித்தேன் 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment