Saturday, 5 November 2022

Old is gold-9-மணி



கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா!
இப்பயிரை குருதிச் செந்நீர் விட்டே காத்தோம்!

#இந்திய வரலாற்றில் வ உ சி 
-ப. முத்துக்குமாரசுவாமி

பாடநூல்களில் படிக்கும் ஆளுமைகளை விடவும் இது போல் ஆய்வு நூல்களைப் படிக்கும்போது அவர்களைத் தெரிந்து கொள்வது அதிகம். கப்பலோட்டிய தமிழன் வ உ சி என்று நான் படித்த ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரின் பிறப்பு, போராட்டம், கப்பலை விட்டவர், இறுதியில் இறந்தார் என்று மட்டும் சில அத்தியாயங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த புத்தகங்களை படிக்கும்போது அவரைப் பற்றிய பிம்பம் வேறு வேறாக இருக்கிறது. குறிப்பாக அவர் ஒரு சிறந்த எழுத்தாளுமை என்பது வ.உ.சி யை பற்றி படிக்கும் போது அறிந்து கொண்டேன். மேலும் பல சுவாரசியமான பகுதிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வாழ்வியல், நிகழ்வுகள், நினைவுகளின் பதிவுகள், படைப்புலக பதிவுகள், அரசியல் அறிஞர்கள் பார்வையில், தமிழறிஞர்கள் பார்வையில் வ உ சி, வ உ சி குமாரிடம் நேர்காணல் என அவரின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு நல்ல ஆவணமாக இருக்கிறது.

தூத்துக்குடியில் கோரல் மில்ஸ் என்ற ஆர்வி கம்பெனியாளரின் பருத்தி ஆலையில் ஏற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவான ஒரு போராட்டமே அவரை அந்நாளில் ஒரு புரட்சியாளராக மாற்றியது என்று சொன்னால் அது மிகை இல்லை.

வ உ சி யின் உயிலில் என்னென்ன விஷயங்களை சொல்லி இருக்கிறார் என்பதை இதில் கொடுக்கப்பட்டுள்ளது .இதில் வ உ சி யோடு உடன் பிறந்தவர்கள் ஏழு பேர் ஆவார்கள் .வ உ சிக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றது . அவரின் மூத்த மகன் உலகநாதன் அண்ணல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தினை ஏற்று பள்ளிக்கு அனுப்பாமல் வேறு பள்ளிக்கு மாற்றியதாகவும் தனது 16 வயதிலேயே திலகர் பல்பொடி திலகர் திலகர் சோப்பு என்று பொருள்களை தாமே உற்பத்தி செய்து விற்கும் ஆற்றல் இருந்ததாகவும், இவருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய போது நச்சு காய்ச்சலில் 16 வயதில் மறைந்தார் என்பதும் மிகவும் சோக வரலாறு. அவரைத் தொடர்ந்து ஆறுமுகம், ஞானாம்பிகை, வேதவல்லி, ஆனந்தவல்லி, மரகதவல்லி, சுப்பிரமணியம், வாலேஸ்வரன் ஆகிய ஒவ்வொருவரை பற்றியும் குறிப்புகள் கொடுத்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின் தான் மீண்டும் வழக்கறிஞராக பணியாற்ற உத்தரவளித்த வாலிஸ் துரையின் நினைவாக தன் மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டியதும் உள்ளது

ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் கம்பெனி பற்றியும் அதை பங்குகளாக பிரித்து ஒவ்வொருவரின் மூலமும் கப்பல் வாங்கியது குறித்தும், இயக்குனர்கள், செயலாளர்கள் என்று கப்பல் கம்பெனியின் நோக்கங்கள் குறித்து விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இக்கப்பல் 42 முதல் வகுப்பு பிரயாணிகள் 24 இரண்டாம் வகுப்பு பிரயாணிகள் 1300 சாதாரண வகுப்பு பிரயாணிகள் மற்றும் 4000 மூட்டை சரக்குகள் ஏற்றுவதற்கு வசதி உடையதாய் இருந்தது. பம்பாய் சென்று 'காலியா' கப்பலை வாங்கி வந்த பின்னர் இன்னொரு கப்பலும் வாங்க முடிவு செய்யப்பட்டு 'லாவோ' என்கிற கப்பலை பிரான்ஸ்  சென்று வாங்கி வந்தார் .அதோடு இரண்டு இயந்திரபடகுகளும் விலைக்கு வாங்கப்பட்டன. ஒரே நேரத்தில் இரு பெரும் கப்பல்களும், இயந்திர படங்களும் வாங்கி பெரும் சாதனை படைத்த வ.உ.சி அவர்களை அப்போதைய பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.

திலகரை  தன்னுடைய அரசியல் குருவாக ஏற்று தனது 21ஆம் வயதிலிருந்து அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் இவரை வெகுவாக கவர்ந்தது. வக்கீலுக்கு படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே இவருக்கு அரசியல் ஈடுபாடு வந்து விட்டது. பம்பாயில் 1885 இல் துவங்கப்பட்ட காங்கிரசுக்கு அடுத்த 13 ஆண்டுகளில் இந்தியாவின் தென்கோடி ஒட்டப்பிடாரத்தில் ஒரு கிளை அமைத்து அதற்கு அவரே செயலாளர் பொருளாளராக திகழ்ந்தார்.

கொள்கை வேற்றுமை காரணமாக காங்கிரஸிலிருந்து பிரிந்து இருந்தாலும் 1927 ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸில் சேர்ந்தார்.
 அப்போது சேலத்தில் நடந்த மாநாட்டில் பேசிய உரையை மபொசி அவர்கள் மகத்தான தேச பக்தர் வ.உ.சி என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். வக்கீல் தொழிலில் மீண்டும் பணியாற்றிய தொடங்கிய காலத்தில் தேச பக்தர்கள் மீதான அரசாங்க வழக்குகளில் ஊதியம் வாங்காமல் வாதாடுவதை கடமையாக கொண்டிருந்தார் வ உ சி.

1912 ஆம் ஆண்டு கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலை அடைந்தவுடன் நேராக ஊருக்கு செல்லாமல் சென்னை சென்றார் வ உ சி போது திலகர் ஹோம் ரூல் இயக்க நிதியிலிருந்து மாதம் 100 ரூபாய் அனுப்பி வந்தார். 1918 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் திலகரின் பேச்சை மொழிபெயர்த்தார் வ உ சி. கோவையில் இருந்த நண்பர்களின் அழைப்பின் பேரில
 கோவையில் தொழிலாளர் இயக்கத்தை ஆரம்பிக்க எண்ணி கோவைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போது பிளேக் நோய் நகரெங்கும் பரவியதன் காரணமாக கோவை அடுத்த பேரூரில் குடிபெயர்ந்தனர். கடைசி தங்கை அங்கு தான் பிறந்தார் அந்த கோவிலில் உள்ள மரகதவல்லி எனும் தெய்வத்தின் பெயரை தன் மகளுக்கு அவர்களுக்கு சூட்டினார். தேசபக்தியோடு தெய்வ பக்தியும் நிரம்பியவர் வ உ சி

வ.உ.சியின் இன்னொரு முகம் எழுத்தாளராக பரிணமித்தது தான். மொழிபெயர்ப்பாளராக, உரையாசிரியராக இன்னிலை உரைப்பாயிரம் ,ஜேம்ஸ் ஆலன் இயற்றிய அகத்தில் இருந்து புறம், ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு மற்றும் மனம் போல வாழ்வு, எளிமையில் இருந்து வலிமைக்கு, திருக்குறள் அறத்துப்பால் பொருளுரை பல்வேறு நூல்களை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்

1936 நவம்பர் 18 இரவு 11 மணி அளவில் வ உ சி நம்மை விட்டு பிரிந்தார். அவரின் இறுதி யாத்திரையை காங்கிரஸ் பொறுப்பேற்று நடத்தியது .சுதேச மித்ரன் எழுதியது. துக்கத்தை தெரிவிப்பதன் அறிகுறியாக ஆங்காங்கே கருப்பு கதர் கொடிகள் தொங்க விடப்பட்டன. கருப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் இவரை பல நூற்றுக்கணக்கான காங்கிரஸார்கள் சூழ இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

அரசியல் என்பது ஏதோ பாட்டும் பேச்சும் மட்டுமல்ல. தியாகமும் செய்ய வேண்டும்.இன்று பேச்சு மேடை ,நாளை தூக்கு மேடை. இன்று  கழுத்தில் பூமாலை, நாளை கழுத்தில் சுருக்கு கயிறு. இவ்வாறு எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களே அரசியலில் பேச்சாளராக வளர முடியும் என்பர் தோழர் பா ஜீவா. இதற்கு முற்றிலும் பொருத்தமாக பொருந்திக் கூடியவர் வ உ சி ஆவார் மேடைதமிழ் மூலம் விடுதலை வேட்கையை பாமர மக்களின் நெஞ்சில் விதைத்தவர்களில் முக்கியமானவர் வ உ சி

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment