#வேண்டாம் மரண தண்டனை
-கோபால கிருஷ்ண காந்தி
ஒரு மனிதன் கொலை செய்யும் போது சட்டத்தை மீறுகிறான். அரசாங்கம் மரண தண்டனை மூலம் அவனை தண்டிக்கும் போது சட்டத்தை காக்கிறது
மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் உலகெங்கும் கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில்.. இந்தப் புத்தகம் மரண தண்டனை தேவையா? இல்லையா? என்பதையும் அதன் காரண காரியத்தையும் இயல்பாக விவரித்து பேசுகிறது. மரண தண்டனைக்கு எதிராக வி ஆர் கிருஷ்ணய்யர், விருமாண்டி கமல்ஹாசன் ஆகியோர் உரத்தக் குரல்களை எழுப்பினாலும் புத்தக வடிவில் உள்ள் இந்த கருத்துக்கள் நம்மையும் சற்று சிந்திக்க வைத்து கேள்வி கேட்க வைத்திருக்கின்றன.
முதல் அத்தியாயத்தில் மூல குற்றம் இழைக்கப்பட்டு, அதற்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, மூன்றாவதாக கருணை மனு ஒன்று சமர்ப்பிக்கப்படுகிறது. அதன் நோக்கம் மரண தண்டனையை 14 வருட சிறை வாசமாக அல்லது ஆயுள் முழுதும் சிறையில் கழிக்கும் தண்டனையாக மாற்றக் கூறுவது தான் என்று இந்தியாவில் கருணை மனுக்களை பெறுவதிலும் பரிசீலிப்பதிலும் குடியரசுத் தலைவரின் பங்கு என்ன என்பதையும், அவரிடம் கேட்கும் கேள்விகள் பற்றியும் முதல் அத்தியாயத்தில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு உலக நாடுகளில் எவ்வாறு தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் அதன் அறிக்கையையும் மிக சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறது.
1981 ஆண்டு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ப்ராங்கோய் மிட்டரண்ட் தாம் மரண தண்டனைக்கு எதிரானவர் என்று வெளிப்படையாக அறிவித்தார். தான் பதவி ஏற்றவுடன் மரணம் தண்டனையை நீக்கும் மசோதாவில் கையெழுத்து விட்டதுதான் மரண தண்டனையை ஒழித்த கடைசி ஐரோப்பிய நாளாக பிரான்ஸ் வரலாற்றில் இடம் பிடித்தது. மேலும் நார்வே தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் மரணம் தண்டனையை ஒழித்ததுக்கான காரணம் காரியத்தை தேவையான வரலாற்றுடன் இதில் சொல்லியுள்ளார்.
ஒரு கொலை அசட்டு துணிச்சலையும் மீட்க முடியாத தன்மையையும் கொண்டு கொடூரத் தன்மையை வெளிப்படுத்துகிறது என்றால் பாலியல் வன்முறையுடன் கூடிய கொலை இவை இரண்டோடு வக்கிரத்தையும் சேர்த்து விடுகிறது. ஒரு பெண்ணின் பூத உடல் கொலை செய்யப்படுவதின் முன்னால் அவளின் ஆளுமை கொல்லப்பட்டு விடுகிறது. இந்த உண்மையை பொறுத்தவரையில் மரண தண்டனைக்கு எதிரானவர்களும் ஆதரிப்பவர்களும் ஒன்றுபடுவர். கொலையின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் மரண தண்டனையின் குறைகளை பற்றி சொல்லி பயனில்லை என்று மரண தண்டனைக்கு ஆதரவாக உள்ளோர்களின் கருத்தினையும் அதனை கேள்விக்குள்ளாக்கி அதனால் ஏற்படும் விளைவுகளையும் இரண்டு பக்கங்களிலிருந்தும் கூறி இருப்பது பொருத்தமாய் இருந்தது.
துயரத்தில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையை ஒழிப்பதின் காரணங்களை சொல்ல முயல்வது பலனை தராது. அது மட்டுமல்ல அது இரக்கமற்றதும் கூட.
இந்தியாவில் அசோகரது காலத்தில் இருந்தும் அவரின் கல்வெட்டுகளில் இருந்தும் கிடைத்ததின்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாற்றினை அறிய முடிகிறது. கிரேக்க நாட்டில் நடைபெற்ற மன்னர்களுக்கு எதிரான ராஜா துரோக குற்றச்சாட்டையும் அதன் விளைவாக மரண தண்டனை நிறைவேற்றியதும், சாக்ரடீஸ் முதலான பல்வேறு தலைவர்களின் மூலமாக நாம் அறிந்ததை இன்னும் மேலும் விரிவாக இந்த அத்தியாயத்தில் கூறியிருக்கிறார்.
மூன்றாவது அத்தியாயத்தில் பிரபல தலைவர்களின் கொலைகளும் அதற்கு அவர்கள் பெற்ற தண்டனையையும் கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு லிங்கனின் படுகொலையில் அவரைச் சுட்ட ஜான் வில்ஸ் பூத் அந்த இடத்தை விட்டு தப்பியோடிய போது துரத்தப்பட்டு சுடப்பட்டு உயிர் இழந்தார். இறக்கும் முன் தன் செயலிழந்து கைகளை பார்த்து உதவாக்கரை உதவாக்கரை என்று கூறியபடி உயிரிழந்தார். மேலும் விங்களின் சதி வேலையில் ஈடுபட்டமைக்காக நால்வர் தூக்கிலிடப்பட்டனர். மூவர் ஆயுள் தண்டனை பெற்றனர். தூக்கு தண்டனை பெற்ற நால்வரில் ஒருவர் பெண் என்பது பலர் அறியாதது.இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் நானும் அறிந்து கொண்டேன்.
குடியரசுத்தலைவர் பதவியில் இருந்த போது யார் யார் எத்தனை கருணை மனுக்களை அமல்படுத்தினர்.. யார் நிராகரித்தினர் என்பதை ஒவ்வொரு குடியரசுத் தலைவரின் பொறப்பு வகித்த காலத்தில் இருந்து இதில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்திரா காந்தி படுகொலையும் மரண தண்டனைக்கு எதிரான போக்கை சிறிது பலவீனப்படுத்த செய்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வதற்கான உரிமை என்னும் தலைப்பில் மனித உயிர்களின் மதிப்பினை பற்றியும் இந்தியாவில் மரண தண்டனையின் எதிர்காலம் எனும் தலைப்பில் வரலாற்றில் இருந்து மரண தண்டனை கூடாது என்பதையும் வரிசை கிராமமாக எடுத்துக் காட்டியுள்ளார்
#ரசித்தவை
*ரப்பர் ஸ்டாம்புகள் ரப்பர் பிடிகளுடன் வருவதில்லை.அவை மரத்தாலும் சில சமயம் இரும்பாலும் கூட ஆனதாக இருக்கலாம். அவை அரசின் சொந்த மை அட்டைக்குப் பதிலாக தன்னுடையதைப் பயன்படுத்தவும் முடிவு செய்யலாம்
*காரணங்கள் வேதனைகளை குறைப்பதில்லை. கற்பித சித்தாந்தங்கள் இழப்பை, அவை உண்மையானவையோ ஊகத்தின் அடிப்படையிலானவையோ ஈடு செய்ய இயலாதவை.
*எதார்த்த வாழ்க்கையில் ஒரு சரிக்கும் மற்றொரு சரிக்கும் ஒரு உண்மைக்கும் மற்றொரு உண்மைக்கும் இடையிலான போராட்டங்கள் வேதனையானது
*அரசியல் எப்போதும் அரசியல் தான். தோள்களுக்கு பின்னால் திரும்பி பார்க்கும். சாளரங்களுக்கு அப்பால் நோக்கும், குப்பை தொட்டிக்கொள்ளும் தலைவிரிப்புக்கு உள்ளும் சென்று பார்க்கும் தன்மை உள்ளது அது.
*தண்டனைகள் சட்டத்தை மதிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் அதை எதிர்ப்பவர்களை கண்டிக்கும் வகையிலும் செயல்படுகின்றன
*சட்டத்தின் முன் இந்த 'லாம்' என்கிற சாத்தியக்கூறுகளுக்கு இடமில்லை
இறுதியில் ஒரு தண்டனைக்கு ஐந்து நோக்கங்கள் உண்டு தண்டிப்பது, தடுப்பது, பழி தீர்ப்பது, விதிகளை பின்பற்றுவது ,ஐந்தாவது அனுபவரீதியானது .முதல் நான்கும் தாமாகவே நடந்து விடுகின்றன. ஐந்தாவது நடப்பதில்லை. மரணம் குறிப்பிடுவதால் அது நடக்கவும் முடியாது என்றும் மரண தண்டனை அடிப்படையில் முழுமை அடையாத தண்டனை என்பதை பற்றியும் அதனை அளிப்பது ஒரு வகையான சுய ஏமாற்று வேலையே என்பதை பற்றியும் வலியுறுத்தியுள்ளார். எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் படும் வேதனைகளை பார்ப்பதை விடவும் கொலை செய்யப்பட்ட குடும்பத்தின் பார்வையில் தூக்கு தண்டனை அவசியமானது என்றும் இன்றைய
காலகட்டத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தான் தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தூக்கு தண்டனை அவசியம் என்று பலரால் உணரப்படுகிறது. இதற்கான பதில்கள் எதிர்காலத்தில் தான் கிடைக்கும்.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment