Thursday, 4 April 2024

ஓட்டளிப்பது நம் உரிமை


ஓட்டளிப்பது நம் உரிமை.!
*மணி

#ஒரு மென்மையான வழியில் உங்களால் உலகத்தை அசைக்க முடியும்
-காந்தி

உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது மக்களாட்சி நாடான இந்தியாவின் தேர்தலை.
ஜனநாயக தேர்தல் திருவிழாவிற்கு இந்திய மக்கள் காத்திருக்கின்றனர்.
சுதந்திரத்துக்கு முன்பு வரி கட்டுபவர்கள், ஐ.சி.எஸ் படித்தவர்கள், செல்வந்தர்கள், கல்வியாளர்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும் நிலை இருந்தது. 
சுதந்திரத்துக்குப் பின் பாகுபாடு இன்றி அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது

வாக்களிக்கும் முறையைப் பண்டைக்கால முதலே தமிழர்கள் அறிந்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் சோழநாட்டில் குடவோலை முறை இருந்ததாக படித்திருப்போம்.
குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை.தேர்தலில் நிற்போரின்
 பெயர்களை ஓலைகளில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். பின்னர், சிறு பிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்து அதில் வரும் பெயருடைய நபரையே தேர்ந்தெடுக்கப்பட்டவராக இறுதியில் அறிவிப்பார்கள்.

#ஓட்டுச்சீட்டு முறையிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு

இந்தியாவில் முதல் தேர்தல்

1951 முதல் 1952 வரை பல கட்டங்களாக ஐந்து மாதங்கள் நடைபெற்றது.பின்பு படிப்படியாக ஓட்டுச் சீட்டிலிருந்து வளர்ச்சி பெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.1982ஆம் வருடம்  கேரள மாநிலம் ஒத்தப்பாலத்தில் நடந்த இடைத்தேர்தலில் முதன்முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.இதனை இசிஐஎல் மற்றும் பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனமும் தயாரித்து வழங்கின.

1996ஆம் வருடம்தான் மின்னணு இயந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. 2001 மற்றும் 2002ஆம் வருடங்கள் நடந்த தேர்தல்களில் இயந்திரங்கள் முழு அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரத்தில் ஆரம்பகாலத்தில் அடிப்படை சந்தேகங்கள் இருந்தன.

இரண்டு முறை பட்டனை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவாகாது. ஒரு வாக்குக்கும் அடுத்த வாக்குக்கும் இடையில் 12 விநாடிகள் இடைவெளி இருக்க வேண்டும். தொடர்ந்து பட்டனை அழுத்தினால் ‘பிழை’ என்றே காட்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்கு விழும் வகையில் ப்ரோக்ராம் செய்து இயந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு அனுப்ப முடியாது. எந்த இயந்திரம், எந்த ஓட்டுச் சாவடிக்கு அனுப்பப்படுகிறது என்ற விவரம் அதிகாரிகளுக்குக்கூட தெரியாது. காரணம், இயந்திரத்தின் வரிசை எண் கணினியில் போடப்பட்டு அந்தக் கணினிதான் இயந்திரம் எந்த ஓட்டுச்சாவடிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.அதிகாலை தேர்தல் துவங்கும் முன் மாதிரி ஓட்டுப்பதிவு சம்பந்தப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் முன் நடத்திய பின்பே வாக்குப்பதிவு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஒப்புகை சீட்டு முறை

2017ம் ஆண்டு பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றது.அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி,பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.இதில் மோசடி செய்ய இயலும் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரப்பரத்வாஜ் தெருவித்தார்.

இவ்வியந்திரத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்கும்பொருட்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் எடுத்த முடிவின்படி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் "பழைய வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படாது".மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு வசதி இனி அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும்.குறிப்பாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் என்றார்.

#VVPAT

Voter verifiable paper audit trail எனும் முறை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த கோவா சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.தற்போது 
தமிழகம் முழுவதும் 39 மக்களவை தொகுதியிலும்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் எந்திரம்  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது.இதன் மூலம் மக்களின் ஐயப்பாடுகள் தீர்க்க வாய்ப்புள்ளது.

வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்தும் இறுதியில் சீல் இடப்பட்டு,கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பின் இந்த ஒப்புகைச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு எண்ணப்படும்.வாக்குப்பதிவின் உண்மைத்தன்மையை நிரூபிக்க பயன்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

#நம்பகத்தன்மை

 மேலை நாடுகள் சிலவற்றில் வாக்குப்பதிவு இயந்திரப் பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பியிருக்கின்றன. அங்கேயெல்லாம் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் நம் நாட்டில் பயன்படுத்தி வருபவை போன்றல்ல. அவை வலைதளத்தோடு இணைப்பு கொண்டவை. எனவே நம்பகத்தன்மை கேள்விக்குறியானது”.நம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது ஒப்புகைச் சீட்டுடன் பயன்படுத்தப்படுவது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"உயருபவன் தன்னிலிருந்தே உயருகிறான்!
தாழ்பவன் தன்னிலிருந்தே தாழ்கிறான்"

 என்பது ஜென் வரி.இது ஜனநாயக கடமையான தேர்தலில் நேர்மையாக ஓட்டளிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.ஒவ்வொருவரும் தத்தமது உரிமையை நிலைநாட்டுவோம்.

தோழமையுடன்
-மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment