கற்றதும் பெற்றதும்-10
*மணி
ஒரு தவறான புரிதலுக்கு விநாடிப் பொழுது போதும். விளக்கம் பெற / தர ஒரு யுகம் தேவைப்படுகிறது!
-ஈரோடு கதிர்
வலைப்பதிவரும்,ட்விட்டர் எழுத்தாளருமான நண்பர் ஈரோடு கதிரின் கிளையிலிருந்து வேர் வரை புத்தகத்தை 2015ம் ஆண்டு வாங்கினேன்.வழக்கமான கட்டுரை தொகுப்பாய் அல்லாமல் வாழ்வியல் யதார்த்தத்தை அனைத்து பக்கங்களிலும் படர விட்டிருப்பார்.
"வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு. வழங்கப்பட்ட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதன் போக்கில்,எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நாட்களை நகர்த்துதலை 'வாழ்தல்' என்பதைவிட பிழைத்தல் என்றே அழைக்கலாம்.வாழ்தல் என்பது சிறகு விரித்து வானம் ஏகுதல்.
சிறகு இல்லாவிடில் சிறகு வேண்டுமென ஆசை முளைக்கச் செய்தல். இப்படி வாழ்வியல் யதார்த்தங்களே இவரின் புத்தகங்களில் இருக்கும்.
#இருள்
சட்டெனத் தொலைந்த மின்சாரத்தில் மிதந்து கொண்டிருந்த ஒளியும் கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்து போனது. எங்கு நோக்கினும் அடர் இருள் நகரத்தின் மற்றும் ஒரு முகமாய் அமைதி நீண்டு கிடந்தது. நீண்ட சாலையில் பார்க்கும் போது அமைதி சலனமில்லாமல் உறங்கும் ஒரு குழந்தையை போலிருந்தது.என இரவின் இருளை கட்டுரையில்.அழகாய் விவரித்திருப்பார்.
பயமுறுத்தும் இருளை விடிய விடிய ஒளியேற்றி பசியாற்றிக் கொண்டிருக்கிறோம். நினைவோ புனைவோ எதையும் எழுத்தில் கொண்டுவர இரவுகளே உகந்த நேரம்.காலையில் எழுதலாம் என நினைத்த வரிகளை உறக்கம் தின்றுவிடுமெனவும் எச்சரிக்கிறார்.இருளோடு கூடலாம், கொஞ்சலாம்,சண்டை,சவால் இடலாம் எனக்கூறி
எவ்வளவு நகர்ந்தாலும் அது அந்த தினத்தின் இருளை நோக்கித்தான் எனகூறி முடிக்கிறார்.
#ரகசிய கதவின் திறவுகோல்
பள்ளி மாணவர்களின் தற்கொலையை பற்றிக்கூறும்போது மரணத்தோடு அம்மரணங்களின் காரணம் அறியாத பாரத்தையும் சுமக்கின்றனர்.
குழந்தைகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் வளர்க்கிறோம் நாம் வளர்க்கும் குழந்தைகளுடன் அவர்களின் உலகில் நம்மால் உடன் வாழ முடிகிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. நாம் குழந்தைகளாக இருந்த காலம் வேறு, இந்த காலம் வேறு. அடிப்படை வேறுபாடு, நாம் குழந்தைகளாக இருந்த காலத்தில் நம் அன்றாட வாழ்க்கையை நாம் வாழ்ந்தோம். நல்லது கெட்டதுகளில் நமக்கும் பங்கு இருந்தது. அப்பா அம்மா தாம் வாழும் வாழ்க்கையை மட்டுமே நமக்கும் வாழ பணித்தார்கள். அவர்களின் சுக துக்கங்கள் நமக்கும் புரிந்திருந்தன அல்லது புரிய வைக்கப்பட்டிருந்தன. ஆரம்பம் முதலே முறையான வாய்ப்புகளும் கண்டிப்பும் நம்மை வழி நடத்தின.
இன்றைக்கு நாம் வாழாத வாழ்க்கையை குழந்தைக்கு கொடுப்பது முதல் வெற்றியாக எண்ணிக் கொள்கிறோம் அதனை அன்பு என நினைக்கிறோம் தான் விரும்பியது எளிதாக கிடைத்துவிடும் என அவர்களுக்கு உணர்த்துகிறோம். அவசரம் என்னும் அடுப்புக்குள் நம்மை பொத்திக்கொண்டு எப்போதும் அதன் சூட்டோடு இருக்க பழகிக் கொண்டோம். எல்லாமும் கிடைக்க காசு மட்டுமே போதும், எனவே காசு சம்பாதிக்க ஓடு எனும் நிலைக்கு பிள்ளைகளை ஆட்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
நாம் வாழாத வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து பார்த்துவிட வேண்டுமென்று வாய்ப்பை பறித்து விட்டு பிறகு அவர்கள் நம்மைப் போல் இல்லையே என பதறுகிறோம். அவர்கள் தேடிச் சென்று எடுக்க வேண்டிய நிலை வரும்போது அதைத் தேடி எடுக்கும் திறனை கொடுத்திருக்கிறோமா எனத் தெரிய வேண்டும்.
அவர்களின் உலகத்தில் நுழைய நமக்கும் பிள்ளைகளுக்கும் இடையே அடைத்து நிற்கும் ரகசிய கதவினைத் திறக்க முயற்சி செய்வோம்.
#யூஸ் அன்ட் த்ரோ
சமீப காலங்களில் எதை அதிகம் தொலைத்தீர்கள் என்று கேட்டால் அதிகப்படியான பதில் பேனா என்று வரலாம். அதுவும் குறைந்த காலத்தில்.. காரணம் மிகக் குறைந்த விலைக்கு விதவிதமாய் வந்த பேனாக்களே.
" பயன்படுத்தி பின் தூக்கி ஏறி" எனும் யூஸ் அண்ட் த்ரோ.வீட்டிலும் சரி,அலுவலகத்திலும் சரி "நம் குப்பைத்தொட்டிகள் வழக்கத்துக்கு மாறாக வேகமாக நிரம்பி வருகின்றன".இது உயிரில்லா பொருட்களோடு மட்டுமே யாவது நிற்குமா சகமனிதர்களின் உணவோடும் உணர்வோடும் பரவாமல் இருக்குமா? "சட்டென அணைப்பதும் அதே வேகத்தில் புறம் தள்ளுவதும்" மிக இயல்பாக நம்மிடம் வேரூன்றி வருகிறது
#மனதை தொட்டவை
* ஒரு விடியலின் சாயம் குழந்தைக்கு ஒரு விதமாகவும் பெற்றோருக்கு அதன் நேர் எதிராகவும் அக்கம்பக்கத்தார் அதற்கு இன்னொரு விதமாகவும் இருப்பதை எப்படி தவிர்க்க
* எதிர்பாராத நேரத்தில் நிகழும் ஒன்றும், இயல்பாய் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் போது முரணாய் நிகழும் ஒன்றும் சுவாரசியமாக தெரிகின்றவையே
*எழவுக்கு வர்றவிளுக்கு சிரமம் இல்லாத மாதிரி ஞாயிற்றுக்கிழமை காத்தால செத்து ரவைக்குள்ள எல்லாம் முடிஞ்சரனும்
*யாம் பெற்ற துன்பம் எம் பிள்ளை பெற்றிடலாகாது
*மனித சமூகம் கண்டுபிடித்த மிக எளிய, அழகிய பொழுதுபோக்கு வேடிக்கை பார்ப்பதுதான்
*நாத்திகன் மேல் ஆத்திகனுக்கு வரும் கோபம்,கடவுளை நம்பவில்லையே
என்பதைவிட, தன்நம்பிக்கையை
நம்பவில்லையே என்பதுதான்!
*"எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்" என்ற சமாதானம் எத்தனை அழகியது அல்லது எளியது
*குடிப்பதில் தெளிவாய் இருப்பதை விட
குடித்த பாட்டிலை உடைப்பதில் தெளிவாக இருக்கின்றனர்
நண்பர் ஈரோடு கதிரின் எழுத்துப்பயணம் மென் மேலும் தொடர வாழ்த்துகள்
-தொடரும்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment