Tuesday, 21 August 2018

கற்றதும் பெற்றதும்-30

கற்றதும் பெற்றதும்-30
*மணி

இல்லாத மீதிச் சில்லறைக்கு
சேர்த்து வாங்கிக் கொண்டேன்
கூடுதலாய் ஒரு முழம் காதல்
-யாழிசை மணிவண்ணன்

பொதுவாய் ஒரு கவிதை புத்தகம் படிப்பது ஒரு ரசனையான அனுபவம்.அதிலும் அதனை காசு கொடுத்து வாங்கிப்படிப்பது அதனினும் ரசனையானது. ஏனெனில் புத்தகம் வாங்கும்பட்டியலில் நிச்சயம் கவிதைக்கென சாமானியர்கள் பட்டியலில் இடம் ஒதுக்கியிருக்கமாட்டார்கள். பெரிய புத்தகம்,தடிமனாய் இருக்க வேண்டும் என விரும்புவர்.ஆனால் மனதை கொஞ்சம் அசைத்துப்பார்ப்பது,
இதமளிப்பது கவிதைப் புத்தகங்களே.

அவ்வகையில் யாழிசை மணிவண்ணன் எழுதிய "பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்" புத்தகமும் ஒரு நெகிழ்வை தந்தது எனக்கு.

#எழுத்தாளரும்,நண்பருமான ராஜா சந்திரசேகரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொற்களை மிகச் சிக்கனமாகவும் அர்த்தத்தினை மிக ஆழமாகவும் பதிப்பிக்க வேண்டும் என்பார்.
பொதுவாய் கவிதை என்பது ஒரு நிகழ்வை படம் பிடிக்க வேண்டும்.அதில் கொஞ்சம் ஆழ்ந்த உண்மை இருக்க வேண்டும்.அவ்வகையில்..
இப்புத்தகத்தில் இடம்பெற்ற சில வரிகள்

#உறங்கும் குளத்தினை
மெல்லத் தட்டி எழுப்புகிறது
தூண்டில் தக்கை"

என்பார்.நீரின் அலையில் சதா எழுப்பிக்கொண்டே இருக்கிறது போல.
ஒரு குழந்தை  அம்மாவினை அழைப்பதுபோல் நீரின் அலையில் குளத்தினை தட்டி எழுப்புகிறது
இக்கவிதை வித்தியாசமானது

#கடந்துபோன கனரகத்திலிருந்து
கையில் சொட்டியது ஆற்றுநீர்
ஈரம் சுடுகிறது

ஆறு காணாமல் போனதும் மணலும் காணாமல் போவது நம் ஊரில் மட்டுமே நடக்கும் செயல்.

#அச்சிடாத பக்கங்களையும்
வாசித்துச் செல்கிறது
ஒரு சிற்றெறும்பு

அச்சிட்ட பக்கங்களில் படிக்கும்போது எறும்பு ஒன்று ஏறினால் கண்களும் அதன் மீதே செல்லும்.அதுபோல அச்சிடாத வெள்ளைப் பக்கங்களில் ஊர்ந்து செல்லும்போது கண்களும் உடன் பயணிக்கிறது என்கிறார்.

#யானைக்கு சோளப்பொரியா என்பார்கள்.உண்மையில் கையேந்தும் யானை காசையா கேட்கிறது.காட்டையல்லவா கேட்கிறது எனும் புகழ்மிக்க வரி உண்டு.யானையைப் பற்றி குறிப்பிடும்போது யாழிசை சொல்கிறார்

"ஒரு பாகனையும்
தன் எடையளவு பசியையும்
சுமந்து திரிகிறது யானை"

பசித்த யானை பசியையும், பாகனையும் சுமந்து திரியும் படிமம்

#பொதுவாய் இக்காலத்தில் அடிக்கடி புழங்கும் வார்த்தை வந்தேறிகள்.கனியன் பூங்குன்றன் இப்போது இருந்திருந்தால் யாதும் வந்தேறிகள்,யாவரும் வந்தெறிகள் என எழுத வைத்திருப்பர் இன்றைய இணையவாதிகள். இக்கவிதை இதனை சற்று யதார்த்தமாய் பார்க்கிறது

"பறவையாகவே பிறந்திருக்கலாம்
வலசை என்பது இனிக்கிறது
வந்தேறி வலிக்கிறது"

எனும் கவிதை

#ரசித்த வரிகள்

*தன் நெடு வாழ்வினைத்
தோசைக்கல்லில் எழுதிப்பார்க்கிறாள் அம்மா பூஜ்ஜியமாக கிடைக்கிறது விடை

*தொட்டில்கள் கட்டப்பட்ட
கோவில் மரத்தில் படுத்துறங்குகிறது நம்பிக்கை

*மற்றுமொரு தண்டவாளத்தில் நிழலினை அழைத்துச் செல்கிறது தொடர்வண்டி

*சுருக்கிய குடையிலிருந்து பேருந்து படிகளில் ஏறுகின்றனர் சில மழைத்துளிகள்

*பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்
யாருக்காகவோ ஒரு துண்டை வீசியிருக்கிறது மத்தியான வெயில்

#கொம்பில்
வண்ணம் பூசிய பிறகும்
வண்டி இழுக்கத்தான் போகும் மாடுகள்
வந்து போகும்
நம் தேர்தலைப்போல..

#பாசி அடர்ந்த குளத்தில்
எறியப்படும் கல்லால் பிறக்கிறது
கணநேரத்து நிலவு..

# அடுக்குமாடிக் கட்டிடங்களில்
பிடுங்கி நடப்பட்ட நதி
செங்குத்தாய் வளர்கிறது..

# அயல்நாட்டு அகத்தியனின்
குடுவைக்குள் சிக்கிக் கொண்டது
குளிர்பானமாய் எங்கள் நதி..

#யதார்த்த உலகின் கவிதைகள் என்றைக்கும் இயல்பாகவும் அழகாகவும் இருக்கும். அது மனதுக்கு நெருக்கமானது.கற்பனையாய் அல்லாமல்  ஆழமான உண்மையை மேலோட்டமாய் சொல்லும்போது 'அட' என ரசிக்கத் தோன்றும்.அது எப்போதும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும்.தேநீரை ரசித்துக் குடித்த இனிப்பு நாவுகள் போல்.!

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment