கற்றதும் பெற்றதும்-34
*மணி
ஜென் கதை
*ஒருவன் கஷ்டத்தில் இருந்தான்.அந்த ஊரில் உள்ள குருவிடம் சென்றான்
*குரு கூறினாராம்
"இன்று போல் என்றும் இருப்பாயாக என்று"
இது போல் நடைமுறை யதார்த்தத்தை ஜென் வழியில் ஞானிகள் கூறுவதை படிக்கும்போது நிறைய அகக்கதவுகள் திறக்கும். ஆன்மிகம் என்பதை தாண்டி உபதேசத்தின் போது சொல்லும் வாழ்வியல் உண்மைகள் மிகப்பெரும் படிப்பினைகள் தரும்.குன்றக்குடி அடிகளார் போன்றோர் ஆன்மிகவாதி மட்டுமல்ல, தமிழும் மார்க்சியமும் படித்தவர்.அவரின் உரையில் கருத்துகள் மிளிரும். தத்துவத்தோடு வாழ்வியலை சொல்வார்.அவ்வகையில் யதெச்சையாய் படித்த சுகபோதானந்தாவின் புத்தகத்தின் சில வாழ்வியல் கருத்துகளில் சில..
#அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை.அது சிறியதோ, பெரியதோ,கசப்போ,இனிப்பாகவோ இருக்கலாம்.அது இலைகளை,பூக்களை,அசுத்தங்களை எவ்வித பாகுபாடின்றி சும்ந்து செல்லும் நதியைப்போலத்தான். வாழ்க்கை எனும் நெடுங்கதையில் மாற்றம் ஒருகால் புள்ளிதான், முற்றுப்புள்ளியல்ல.
#மகிழ்ச்சி குறித்து ஜென்னில்
மகிழ்ச்சி பொருளில் இல்லை,அது மற்றவர்கள் கொடுத்து நாம் பெறுவது அல்ல,உள்ளே இருக்கிறது மகிழ்ச்சி. அதை உணராதவர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை."எது மகிழ்ச்சியளிக்குமோ அதை எண்ணுங்கள்.எது மகிழ்ச்சியாய் உணரச்செய்யுமோ அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
#திருப்தி
பொதுவாக தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.அதுதான் மனதார போதும்னு சொல்வாங்க.
மற்றவைகளான பொன்னோ,
பணமோ கொடுத்தால் திருப்தியடையாது.
"ஒரு பெண்மணி குழந்தையுடன் கடற்கரைக்கு சென்றாள்.ஒரு பெரிய அலை குழந்தையை இழுத்துச் சென்றது.ஐயோ என அலறியபோது, இளைஞன் துள்ளிச் சென்று காப்பாற்றினான். குழந்தையை கையில் வாங்கிய தாய் "ஐயோ குழந்தையின் செருப்பு போய்விட்டதே என்றாராம். திருப்தியற்ற மனம் இப்படித்தான் இருக்கும்.
#முரண்பாடு
ஒரு கருத்தோடு முரண்பட்டு, தன் கருத்தோடு மோதி புதிய கருத்து உருவாகும் என்பார் ஹெகல்.ஆனால் சமீப காலமாக முரண்படுதல் என்பது ஃபேசனாகிவிட்டது.இதுபற்றி, துருகனேவ் எழுதிய ரஷ்யக்கதை
"ஒரு ஊரில் ஒரு மூடன் இருந்தான். அவனின் அறிவற்ற தன்மையும், அபத்த செயலையும் கண்டு ஊரே கைகொட்டி சிரித்தது.அவனுக்கு சங்கடம். அறிவாளியிடம் யோசனை கேட்டான்.அவர் சொன்னார் யாரேனும் உன்னத படைப்பு எனச் சொன்னால் குப்பை என்று நீ சொல்.பிறரை மட்டம் தட்டு. மறுத்துப்பேசு.ஏழுநாள் கழித்து என்னை வந்துபார். பின்னாளில் அவனை மேதை,ஆராய்ச்சியாளர்,
என ஊரே கொண்டாடினர் என கதை முடியும்.
"முரண்படுகிற சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது.ஆனால் அதையே தன்னுடைய இயல்பாகவும், வாழ்க்கை முறையாகவும் ஆக்கிக் கொண்டுவிடக்கூடாது. எண்ணங்களுடன் முரண்படாதீர்கள்.
மனதைக் காலியாக வைத்திருங்கள்.
#ஒப்பிடுதல்
மனம் ஒரு ஒப்பீடு செய்யும் கருவியாயிருக்கிறது.இது வெறுப்பையும் பொறாமையும் தரும்."இதைவிட அழகான நதியை நான் பார்த்திருக்கிறேன்.இதைவிட பெரிய மலையை பார்த்திருக்கிறேன் என்பதெல்லாம் எதையும் முழுமையாய் புரியவிடாமல் அதாவது நிகழ்காலத்துடன் ஒன்றாமல் செய்துவிடுகிறது.
"அகந்தை எப்பொழுதும் பழையதாகத்தான் இருக்கும்.
அவரின் சொல்லும் செயலுமே சரியாக இருக்கும் என நினைப்பார். மாற்றங்களை வரவேற்கமாட்டார்.பழைய முறையை தொடர்வார்.ஒரு கருத்துடன் ஒன்றாமல் தன் கருத்தையே திணிப்பார்கள்.
ஒத்துப்போக தன்னுணர்வு இடம் தராது. அகந்தை அறியாமையுடன் பொருந்தியிருக்கும்.இதனுடன் இன்னொன்று "கோபம்".
நம்மைநாமே தாழ்த்திக்கொண்டு சிந்திக்கும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் எதிர்வினை கோபம். கோபத்தை அடக்குவதுவிட வெளிப்படுத்துவது நல்லது. சுஜாதா தன் கற்றதும் பெற்றதும் தொடரில் இதனை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருப்பார்.
ஜப்பானில் கோபம் வந்தால் கோபமல்லாததை செய்வார்களாம்.அதாவது எதிராளியின் மீது கோபம் வந்தால் அதற்குப்பதில் பூவைக் கொடுப்பார்களாம்.இது கோபத்தை குறைக்குமாம்.
#துணிவு
தனக்கு சரியெனபட்டதை தயக்கமின்றி செய்வது துணிவு. அச்சமற்று இருத்தலல்ல.அச்சத்தை அடக்கி வைத்து மெலெழும் நிலை.விவேகம் இல்லாவிடில் அது அசட்டு துணிச்சல் ஆகிவிடும். தைரியம் என்பது தெரியாத ஒன்றை ஆராய்ந்து தேடிக் கண்டுபிடிப்பது.
தெரிந்தே ஒன்றின் கைதியாக இருப்பது தைரியமல்ல.
இதற்கு ஷிப்லியின் கதை ஒன்று
சொல்லலாம்..
ஒரு நாள் அந்த நாய் கடும் தாகத்துடன் இருந்தது. தண்ணீரில் தெரியும் தனது பிம்பத்தைப் பார்த்து ஒவ்வொரு முறையும் அதை கண்டதும் தண்ணீரைக் குடிக்காமல் பின்வாங்கியது. தன்னுடைய பிம்பத்தை வேறு நபராக எண்ணிக்கொண்டது. ஆனால் தாகம் அதிகரித்த நிலையில், அது பயத்தை உதறி விட்டு தண்ணீரில் பாய்ந்தது. அந்தக் கணத்தில் அதன் சுய பிம்பம் மறைந்து போனது. நாயின் செயல் தமக்கு தெளிவு தந்ததாக ஷிப்லி கருதினார். நாம் தாகம் கொண்டு விடுகிற போது நமக்கு தேவையானது கிடைத்துவிடும் என்கிறார் எவ்வளவு பெரிய உண்மை.
நல்ல புத்தகங்களை தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment