கற்றதும் பெற்றதும்-32
*மணி
இச் சாக்கடை நீரில்
உறுமீன் ஏது
கிடைக்கிற குஞ்சுகளைக்
கொத்தித் தின்
என் கொக்கே
-இசை
#வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்
-இசை
நவீன படைப்பாளிகளில் மிக முக்கிய இடம் இசை அவர்களுக்கு உண்டு.காலச்சுவடு இதழில் தொடர்ந்து கட்டுரை,கவிதை என எழுதி வருபவர். "ஒரு சொல் அல்லது காட்சி ஏதோ ஒரு தூண்டுதல் தான் கவிதைக்கு காரணம். அந்தத் தூண்டுதல் கொஞ்சம் வலுவானதாக இருக்க வேண்டுமென சொல்கிறார். அன்றாட வாழ்விலிருந்து பெறும் அனுபவமும்,நடைமுறை வாழ்வியலையும் இவரின் கவிதைகளில் காணலாம்.
#ஒருவரோடு சண்டையிட்டு பார்க்கப்போவதை யதார்த்த நோக்கில்
"இந்தமுறை
உன்னை உறுதியாக அறுத்துவிட்டேன்
இனி எங்கேனும்
வழியில் கண்டால் தலையாட்டிக் கொள்வதென.
எப்படி ஆட்ட வேண்டுமென்று
ஆட்டியாட்டிப்பார்ப்பது
இது 119வது முறை"
அன்பின் காரணமாய் அறுத்தெரிய முடியாதவாறு உள்ள சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது கவிதை
#ஒரு பேருந்து பயணத்தில் ஜன்னலோரத்தில் இருப்பவனின் மனநிலைக்கு நேர் எதிரானவர்கள் தான் அருகிலிருப்பவர்கள்.
எடுக்கவோ தொடுக்கவோ என்பது போல,திறக்கவோ மூடவோ எனும் கையறுநிலையை
" இடையில் இருப்பவருக்கு
காற்று என்றால்
அறவே ஆகாது
கடைசியில் உள்ளவருக்கு
கிளியனார் கொஞ்சலன்ன லேசாக அலசவேண்டும். ஜன்னலோரத்தானுக்கோ
அது வழியே
உலகமே தெரியவேண்டும் ஒத்தைக் கண்ணாடி
படாதபாடு படுவதை பார்.
என இயல்பாய் கவிதை முடிகிறது.
இக் கவிதையைப் படிக்கும்போது தென்கச்சியாரின் ஒரு துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது ஜன்னல் ஓரத்தில் இருந்த பெண், ஜன்னலை திறக்க வேண்டும் இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்கிறார். மற்றொரு பெண், ஜன்னலை மூட வேண்டும் இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்கிறார். அப்போது தென்கச்சியார் சொல்கிறார்.. முதலில் ஜன்னலை திறந்து வையுங்கள் ஒருவர் இருக்கட்டும். மூடிவிடுங்கள் மற்றொருவர் இறக்கட்டும். நாம் நிம்மதியாய் பயணம் செய்யலாம் என்று சொல்வது நினைவுக்கு வருகிறது.
#ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள். பொதுவாக ஒருவர் பேச்சின் குறையை சொன்னால் மூக்கின் மேல் கோபம் வருவதை பார்க்கலாம்.இனி சொல்லவே கூடாது என நினைத்திருப்போம். அப்போதும் நம்மையும் அறியாமல் சொல்லிவிடுவோம்.அதுபற்றி விபத்து கவிதையில்
"பன்னிரண்டு கால்களையும் ஊன்றி
இருபத்தைந்து கைகளிலும் பற்றி எவ்வளவோ
இழுத்துப் பிடித்தேன் அந்தச்சொல்லை
ஆனாலும், அது உன் மீது மோதி விட்டது.
எனும் கவிதை அன்றாட வாழ்வில் ஒருவரின் குறையை சுட்டிக்காட்ட முயலும் அப்பாவியை பற்றி கூறுகிறது.
#ஒவ்வொரு சாலையும் மரணத்தை நோக்கி என்பது போல், ஊரிலுள்ள சாலைகள் பழுதடைந்ததை "ஸ்டுபிட்ஸ்"கவிதையில் சாடுகிறார்
" அவ்வளவு பிரதானமான சாலையில்
அத்தனை ஆழமான பள்ளம் ஆகாததுதான்
பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் பார்த்தார்
சுதாரித்துக் கடந்த பிறகு காலூன்றி நின்று
சாலையை திரும்பிப் பார்த்தார். அதிகாரிகளைப் பார்த்தார்... அரசைப் பார்த்தார்...
அமைச்சரைப் பார்த்தார்.. முதலமைச்சரை, பிரதமரை பார்த்தார்
ரோடு காண்ட்ராக்டரைப் பார்த்தார் அந்த பள்ளத்துள்
யார் யாரையெல்லாம் பார்க்க முடியுமோ
அத்தனை பேரையும் பார்த்தார்.
பொதுவாக சாலையில் கல் தடுக்கி விட்டாலும், வாகனம் இடறி விட்டாலும்.. நாம் அந்த இடத்தை ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பித் திரும்பிப் பார்ப்போம். எதுக்கு என்று தெரியாது. இருப்பினும் பார்ப்போம். இது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். இதனை தம் கவிதையில் மிக அழகாக பயன்படுத்திருக்கிறார் கவிஞர்
#விஷமி எனும் கவிதையில்
புழங்கும் சொல் தான்
என்றாலும் பொருள் தேடிப்பார்த்தேன்
விஷமம் பிடித்த அகராதி ஒன்று பிரிவு என்பது
"இமைப்பொழுதும் நீங்காது இருத்தல் என்கிறது.
#"எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாகக் கைக்கொள்ளும் சூத்திரம்.. தெளிவுறவே அறிந்திடுதல்:தெளிவு தர மொழிந்திடுதல் என்பார் பாரதியார்.அதுபோல் "இசை"யின் கவிதையாகட்டும் கட்டுரையாகட்டும் இயல்பான பிம்பத்தின் மீது, தினசரி காணும் காட்சிகளின் மீது ஆழமான புரிதலோடு மற்றொன்றை தொடற்புபடுத்துவார்.
#மனதை கவர்ந்த வரிகள்
*அவ்வளவு
வலுக்கட்டாயமாக
தலையை வலப்பக்கம்
திருப்பிக் கொள்ளாதே
பிறகு
ஒருநூறு கைகள் ஒன்று கூடி அதை
இடப்பக்கம் இழுக்கும்
*ஒரு பைத்தியத்தை துரத்திக்கொண்டே வருவார்கள். இறுதியில் அக்கவிதை இவ்வாறு முடியும்.எல்லோரும் விரட்டினாலென்ன
*பைத்தியத்திற்கு அதன் பைத்தியமிருக்கிறது"
# நான் உன்னிடம்
எவ்வளவோ சொன்னேன் உண்மையை
அவ்வளவு பக்கத்தில் போய் பார்க்காதே என்று
இப்போது
தலை வெடித்துச் சாக கிடக்கிறாய்
# நான்கு நாய்கள்
எங்கள் தெருவிற்குள்
மார்கழியை இழுத்து வந்தன
# பொதுவழியும்
சிறப்பு வழியும்
ஒன்றாகும் இடத்தில்
என்னய்யா இரைச்சல்?
பொது வழியும்
சிறப்பு வழியும்
ஒன்றாவதால்
எழும் இரைச்சல்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment