கற்றதும் பெற்றதும்-20
*மணி
குமுதம் வார இதழில் அரசு கேள்வி பதில் பகுதியில் 1976-ல் ஒருவர் கேட்கிறார்,"அரசு! உங்களுக்கு பிடித்தமான, மிகவும் மதிக்க தக்க அறிஞர் யார்?" என கேட்க, 'பண் நூல் ஆசிரியரும், யுனிவர்சல் பப்ளிஷரின் அதிபருமான அப்துற் றஹீம்" என சொல்லியிருக்கிறார்.
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் அப்துற் றஹீம்
இவரை வாசித்துள்ளீர்களா?
உலகெங்கும் சுயமுன்னேற்ற நூல்கள் என்றாலே ஆங்கில நூல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் தமிழில் திரு அப்துல் ரஹீம் அவர்கள் தான் முதன்முதலில் சுயமுன்னேற்ற நூல்களை அறிமுகம் செய்தவர். 1922ஆம் ஆண்டில் பிறந்து.. தனது 22 வயதில் lord of arabia எனும் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். 1948 இல் "வாழ்க்கையில் வெற்றி" எனும் வாழ்வியல் நூல் விற்பனையில் இன்றளவும் சாதனை புரிந்து வருகிறது.
35 சுயமுன்னேற்ற நூல்கள் 9 வரலாற்று நூல்களும் எட்டு மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதி உள்ளது பெரும் வியப்பைத் தருகிறது. 1955 ஆம் ஆண்டு "எண்ணமே வாழ்வு" எனும் புத்தகம் உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதி இன்றளவும் விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது.
எதெச்சையாய் நூலகத்தில் இவரின் ஒரு புத்தகம் படித்தவுடன் புதைகுழியில் இழுத்து செல்லும் சுவாரஸ்யம்.தொடர்ந்து பல நூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவரின் இல்லறம் புத்தகம் அனைத்து தம்பதிகளும் வாசிக்க வேண்டியது.வெளிவந்தது 50களில்.தீர்க்கதரிசனத்துடன் எழுதியிருப்பார்.சுயமுன்னேற்ற நூல்களில் இருக்கும் தகவல் எல்லையற்றது. கே.ஜீவபாரதி இவரின் அனைத்து நூல்களையும் குறித்த கட்டுரை எழுதியிருப்பார்.
வாழ்வில் முன்னேறுவது எப்படி? கவலைப்படாதே', "முன்னேறுவது எப்படி?' "சுபிட்சமாய் வாழ்க', "வியாபாரம் செய்வது எப்படி?', "வாழ்வைத் துவங்கு', "வாழ்வது ஒரு கலை', "வழி காட்டும் ஒளி விளக்கு', "மகனே கேள்', "அன்புள்ள தம்பி', "வாழ்வின் வழித்துணை', "வாழ்வின் ஒளிப்பாதை', "மன ஒருமை வெற்றியின் இரகசியம்', "அகிலத்தின் அறிவுத் திறன்', "இல்லறம்', "விளக்கேற்றும் விளக்கு', "இளமையும் கடமையும்', "உன்னை வெல்க', "படியுங்கள் சிரியுங்கள்', "படியுங்கள் சிந்தியுங்கள்', "படியுங்கள் சுவையுங்கள்', "ஒழுக்கம் பேணுவீர்', "நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி' முதலான பல நூல்களில் புதிய புதிய செய்திகளைப் புதைந்து வைத்துள்ளார்.
#அன்புள்ள தம்பிக்கு
கடித இலக்கியம் போல் தன் தம்பிக்கு அறிவுரை கூறும் வாழ்வியல் நூலாக இப்புத்தகம் உள்ளது.
"இருபதாவது வயதில் அழகாக இல்லாதவன், முப்பதாவது வயதில் திடகாத்திரமாக வாழாதவன், நாற்பதாவது வயதில் அறிவாளியாக இல்லாதவன், ஐம்பதாவது வயதில் பணக்காரனாக ஆகாதவன், ஒருபோதும் ஆணாகவோ பெண்ணாகவோ அறிவாளியாகவோ பணக்காரனாகவும் மாட்டான்.
"பாரம்பரிய கௌரவமானது ஒரு குடும்பத்தின் வழித்தோன்றல்களுக்கு கிடைத்த சிறப்புமிக்க கருவூலமாகும்". இறந்து சென்ற மூதாதையரிடமிருந்து கவுரவத்தை பெறுவதை விட தானே தன்னுடைய நல்லொழுக்கதினால் பெறுவது மேலானது.
நல்லொழுக்கம் என்பது இனிமையான நறுமண பூண்டுக்கு நிகர் ஆகும். அதனை நசுக்கினால்தான் அதன் நறுமணம்
கம்மென்று கமழும் என்ற பேகன் கூறியதை நினைவூட்டுவார். நல்லொழுக்கமே ஒருவனுக்கு கவசம் என்று ஒரு அண்ணன் தம்பிகளுக்கு ஒழுக்கம் குறித்து சொல்லும் பல்வேறு மேற்கோள்களை கூறுவார்.
" ஒரு சிற்பி தான் செய்த சிலையின் பின்பாகத்தை ஒழுங்காக செய்து கொண்டிருந்தார். அதனை பார்த்த ஒருவன் சிலையின் முகப்பைதானே மக்கள் பார்ப்பர். பின்புறம் சுவரின் பக்கத்தில் தானே உள்ளது என்றார். அதனை மக்கள் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்ப்பான் அல்லவா என்று மறுமொழி பகர்ந்தார் அந்த சிற்பி. இப்படி பல்வேறுபட்ட துணுக்குகள் இப்புத்தகத்தில் இருக்கிறது.
#பணம்
பணத்தைப் பற்றிக் கூறும் போது ஒரு இடத்தில் இவ்வாறு கூறுகிறார் "வருமானத்தை காலணிக்கு நிகராக கூறலாம். அது சிறிதாக இருப்பேன் அதை அணிந்திருப்பவனின் காலை கடிக்கிறது. பெரிதாக இருப்பின் அவனை சற்று தடுமாற செய்கிறது.
* ஓராண்டிற்குள் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற விரும்புபவன் ஆறு மாதத்துக்குள் தூக்கு மேடையில் ஏறி விடுவான். விரைவாக சுண்ணாம்பாலும் செங்கல்லாலும் எழுப்பப்படும் கட்டிடம் விரைவில் விழுந்துவிடும். நேர்மையான முறையில் சிறிது சிறிதாக சேர்க்கப்படுவது நிறைந்து பெருகும்.
மனம் கவர்ந்த வரிகள்
* சிறு மனிதர்கள் வறுமைக்கு அடங்கி விடும் போது, பெரிய மனிதர்கள் வறுமையை தங்களுக்கு அடிபணியச் செய்து மேலேறி நிற்க்கிறார்கள்.
*இன்று உலகம் விரும்புவது தனித்தன்மையுடன் சிந்தித்துச்செயலாற்றுகின்றவர்களையேயன்றி பிறருடைய சிந்தனையைச் செயலாற்றும் மனித இயந்திரங்களையல்ல.
* அறிவின் முதற்படி என்னவென்றால் பொய்யை பிரித்தறிவது, இரண்டாவது படி உண்மையை விளங்கிக் கொள்வது
இவரின் மொத்த எழுத்தினையும் ஆய்வு நூலாக ஜீவபாரதி தொகுத்து எழுதியுள்ளார்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment