Thursday, 8 September 2022

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.

நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு சில குறள்களில் ஒன்று.

அநேகமாக இதை முன்வைக்காத பட்டிமன்றக் கோமாளி விவாதங்கள் எதுவுமே இருக்காது.

இதன் பொருள் நமக்கு நன்கு தெரியும் என்று நினைக்கிறோம். உண்மையில் இதன் பொருள் தான் என்ன?

பொதுவாகச் சொல்லப்படும் கருத்து என்னவெனில், தான் பெற்ற மகனைச் சான்றோன் - கல்வியில் சிறந்தவன் - என மற்றவர்கள் கூறுவதைக் கேட்கும் தாய், அவனைப் பெற்றெடுத்த தருணத்தை விட அதிகமாக மகிழ்ச்சி அடைகிறாள் என்பதே ஆகும்.

திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களில் மிகப் பலர் இவ்வாறே எழுதியுள்ளனர்.

குறிப்பாக, பரிமேலழகர், கா.சு. பிள்ளை, திருக்குறளார் முனுசாமி, ந.சி. கந்தையா ஆகியோர் சான்றோன் என்ற சொல்லுக்கு இவ்வாறே பொருளுரைத்துள்ளனர்.

மணக்குடவர் பிரச்சினையே வேண்டாம் என்று சான்றோன் என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தி உள்ளார். நாமக்கல் கவிஞர் சான்றோன் என்பதை உயர்ந்த குணமுடைய நல்லவன் என்கிறார்.  சாமி. சிதம்பரனார் அதற்கு அறிஞன் என்று பொருளுரைக்கிறார். இலக்குவனாரோ பெரியோன் என்று சொல்கிறார், அதன் பொருள் என்னவென்று விளக்கவில்லை.

இந்தக் குறளுக்கு உரை எழுதிய வ.சுப. மாணிக்கம் மட்டும் "தன் மகன் வீரன் எனப் புகழக் கேட்ட தாய் பெற்ற காலத்திலும் பெரு மகிழ்ச்சி அடைவாள்" என்று அதற்கு உரை அளித்துள்ளார்.

இத்தனை நீண்ட முன்னுரை எதற்கு என்றால் உறுதியாக அது தேவையாகிறது.

ஆய்வாளர் கோ. கேசவன் இதற்குப் பெரும்பாலான உரையாசிரிகர்களின் உரைக்கு மாறாக, அதே சமயம் உறுதியாக ஏற்கத்தக்க உரை அளிக்கிறார்.

அதாவது வ.சுப. மாணிக்கம் அவர்கள் உரைத்தது போல, சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் கொள்கிறார்.

அதற்கு அவர் முன் வைக்கும் வாதங்கள் முற்றிலும் மறுக்க இயலாதவை ஆக உள்ளன. அவர் தமிழிலக்கியச் சான்றுகளை முன் வைத்து அதன் அடிப்படையில் விளக்குகிறார்.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே..."

(புறம் 312)

என்ற பாடலைச் சுட்டிக் காட்டும் கோ. கேசவன் அவர்கள், 

வீரவுணர்வு நிரம்பிய காலத்து நற்பண்பு என்பது வீரப்பண்பு தான். சான்றோன் எனில் வீரன் என்பதே அக்காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று கூறுவதுடன்  சான்றோர் எனில் வீரர்கள் எனும் பொருளில் பயின்றிருக்கும் என்பதற்குச் சான்றுகளை முன்வைக்கிறார். மேலும் சான்றோன் எனும் சொல்லுக்கு வீரன் எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சான்றுகளை உ.வே.சா அவர்களை முன்வைத்துக் கூறுகிறார்.

அதை விடச் சிறப்பு என்னவெனில் சான்றோன் என்றால் நற்பண்பாளன் என்ற பொருள் வழங்கலாயிற்று என்று குறிப்பிடும் அவர் அச்சொல்லுக்குக் கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்ற பொருளை அளிக்கவே இல்லை!!

முன்னர் குறிப்பிட்ட சங்க இலக்கியப் பாடலைச் சுட்டும் அவர், அதில் கூறப்பட்டிருக்கும் அனைத்துக் கடமைகளும் போரோடு தொடர்புடையவையாக உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

காண்க கோ. கேசவன் நூல் தொகுப்பு 3 மார்க்சியம் பக்கம் 47-49.
ஆகவே மேற்குறிப்பிட்ட குறளில் இடம் பெற்றுள்ள சான்றோன் எனும் சொல் வீரம் செறிந்தவன் என்ற பொருளுடையதாகவே இருக்க வேண்டுமே தவிர, கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்ற பொருளுடையதாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

வீரம் குறித்த புறநானூற்றுப் பாடல்கள், போர்க்களத்தில் மாண்ட மகனின் மார்பில் மரண காயம் உள்ளதா எனத் தேடிய தாய் போன்றவற்றை மனதில் கொண்டால் இச்சித்திரம் தெளிவாகிறது.

ஆய்வாளர் கோ. கேசவன் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

-சுந்தர சோழன்

No comments:

Post a Comment