க.நா.சு கட்டுரைகள்
பாகம்-2
இலக்கிய விமர்சகராக அறியப்படுபவர் க.நா சுப்பிரமணியம் அவரின் விமர்சன கட்டுரைகளோடு எழுத்து ஆளுமைகளை பற்றிய குறிப்பு மிக அருமையாக இருக்கிறது. பெரிய தொகுப்பை காவியா சண்முகசுந்தரம் அவர்கள் கொண்டு வந்தது படிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது. இதுபோல் எத்தனை இலக்கிய விமர்சகர்கள் நேர்மையாக தனது விமர்சனத்தையும் அவர்களின் எழுத்து நடைகளை பற்றியும் அவர்களுடன் பழகிய போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் சுவைப்பட கூறியுள்ளனர் என்பது தெரியாது.
மெத்த வலது மேற்கே என்பார் பாரதியார். தமிழில் நல்ல இலக்கிய விமர்சனம் இல்லை என்று சொல்லும் படியாகவும், அது அவசியம் என்று கூட பலர் எண்ணவில்லை. மேலை நாடுகளில் இலக்கியத்தை வளர்க்கும் போதும் இலக்கிய விமர்சனமும் வளர்கிறது. நூல்களைப் பற்றிய ஏராளமாக விமர்சனங்கள் அங்கு உள்ளன. ஒரு விதத்தில் விமர்சனம் காடாக மண்டிவிடும் என்பது உண்மைதான்.. என்றாலும் சரியான விமர்சனம் சரியான சமயத்தில் இல்லாவிட்டால் இலக்கிய வளர்ச்சியும் தேக்கமுறும் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார்
வ. ராமசாமி எனும் வ.ரா அவர்கள்தான் சுப்ரமணியம் எனும் பெயரை கந்தாடை நா. சுப்ரமணியன் என மாற்றியதில் இவருக்கு பங்கு உண்டு என்று தெரிவிக்கிறார்.
இதில் நான் படித்து ரசித்த நறுக்குகளை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எழுத்தாளராக அறியப்பட்ட கல்கியின் இன்னொரு முகம் சுதந்திரப் போராட்டத்திற்கு தன் எழுத்தின் வழியாக தேசபக்தியை மக்களுக்கு எடுத்துரைத்தது தான். அந்த வகையில் "வெறும் வியாபாரியாக இருந்த என்னை தேச உணர்ச்சியையும் தேசியத்தையும் நன்கு அறியச் செய்தவர் கல்கி தான்" என்று எஸ் எஸ் வாசன் ஒருமுறை கல்கி பற்றிக் கூறினார் என்பதை தெரிவிக்கிறார்.
மௌனியை பற்றி சொல்லும் போது அவருடைய கதைகளை 200 பக்கங்களில் அடக்கி விடலாம். அதீதமான உருவ அமைதி, ஆங்கிலத்தில் கிடைத்த காதரின் மான்ஸ்பீல்டு போன்ற கதாசிரியர்களை படித்து ஏற்பட்ட உருவப்பிரக்ஞை. இரண்டாவது ரொமான்டிக் தத்துவம் .மெளனியின் கதைகளில் அடிநாதமாக இருக்கும். மூன்றாவதாக தனிமனித மனோ தத்துவத்தேடல் என்று கூறியிருப்பார்.
இந்தியாவில் இலக்கிய அமைப்புகள் யார் அமைத்தாலும் அதில் ஒருவராக தகழி சிவசங்கர பிள்ளை. செம்மீன் நாவலில் வரும் உரையாடல் அவரே ஏற்படுத்திய வட்டார வழக்கு என்று சிலர் கூறுவார்கள்.. அதற்கு அவர் அப்படி உருவாக்கினால் நான் இன்னும் மேதையாக தெரிவேன் என்று கூறி இருப்பார்.
ஆனந்த விகடனை விட்டு கல்கி விலகிய பிறகு பலரும் கல்கியில் எஸ்விவி எழுதுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் எழுத மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் நான் ஒரே பத்திரிக்கை எழுத்தாளனாக இருக்க விரும்புகிறேன் என்று தான். ஆங்கிலத்தில் ஹிண்டு தமிழில் ஆனந்த விகடன் என்று எழுதுவேன் என்றார் எஸ்விவி
சேக்ஸ்பியர் குறித்தும் அவரின் படைப்புகளை குறித்தும் மிக விரிவாக ஆராய்ந்து விமர்சனக் கட்டுரைகளை எழுதி உள்ளார். மேலும் கம்பனுக்கும் சேக்ஸ்பியருக்கும் உண்டான படைப்புகளின் ஒற்றுமை குறித்தும் இலக்கிய நுட்பங்களை குறித்தும் இதில் விரிவாக கூறியுள்ளார்.
தமிழில் முதல் மூன்று நாவல்களையும் நல்ல தரத்தில் எழுதி உள்ளவர்கள் மிக மிகக் குறைவு. ஷண்முகசுந்தரம், கந்தசாமி, நகுலன் அந்த வரிசைகளில் வண்ண நிலவனும் ஒருவர். பலரின் முதல் நாவல் நன்றாக இருக்கும். இரண்டாவது தரம் குறைந்துவிடும். மூன்றாவது அடியோடு குட்டிச்சுவராக இருக்கும். இதை பல நாவலாசிரியரின் எழுத்தில் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறி வண்ண நிலவனை புகழ்ந்திருப்பார் அவருடைய சிறுகதை தொகுப்புகளையும் சிலாகித்திருப்பார்.
உலகின் தலைசிறந்த 52 எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமும் ,அவர்களின் படைப்புகளையும் மிக சுருக்கமாக விவரித்து இருப்பார். சின்ன விஷயங்களை பெரிது பண்ணியும் பெரிய விஷயங்களை சின்னது பண்ணியும் சொல்லுகிற காரியம் பலருக்கு சுலபமாக கை வந்துவிடும். ஆனால் சாதாரண விஷயங்களை சாதாரணமாக சொல்வது என்பது பாண்டித்தியம் அதிகம் தேவை. இப்படி சாதாரண விஷயங்களை சொல்லுகிறார்கள் ஒருவர் என்று கி.வா.ஜ வை பாராட்டி இருப்பார்.
புதுமைப்பித்தனின் காஞ்சனை, சாபவிமோசனம், தி.ஜா வின் கொட்டுமேளம், அழகிரிசாமி யின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார்,
கு.ப ராவின் கனகாம்பரம்,நூர் உன்னிஸா,லாசரான் ஜனனி, போன்ற கதைகளும் சுகுமாரன், பாரதிதாசன் ஆகியொரின் கவிதைகளையும் திறனாய்வு செய்து சொல்லியிருப்பார்.தமிழ் இலக்கிய விமர்சன காலகட்டங்களும் அதன் வளர்ச்சியையும் எடுத்து உரைத்திருப்பார்.இலக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் நல்ல இலக்கியத்திலிருந்து போலியைத் தரம் பிரித்து காண முயன்று வெற்றி பெற வேண்டும். தரமானதை தரமில்லாததிலிருந்து பிரித்துக் காண வேண்டிய அவசியத்தையும் உண்டாக்க விமர்சனம் தேவைப்படுகிறது என்கிறார்.
இலக்கிய விமர்சனத்தில் அறியாத தகவல்களையும் இலக்கியவாதிகளின் மற்றொரு பக்கத்தையும் சுவைபட தொகுத்துள்ளார்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment