#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
புத்தகம்-2
பெயரற்ற யாத்ரீகன்
-யுவன் சந்திரசேகர்
பக்கங்கள்-232
ஜென் கவிதைகள் இறகின் மிருதுமும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும்போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்தி காட்ட இயல்கிறது என்பது ஜென்மார்க்கம் செய்யும் மாயம். மொழியின் தாழ்வாரம் எத்தனை அகலமானது; ஆனாலும் சூட்சமமானது என்பதை ஜென் கவிதைகள் அறிய தருகின்றன என்பதை படிக்கும் போது இதனை படிக்கும் ஆர்வம் வருகிறது.
அறிவார்த்தத்தின் அதீத ஆவலை திருப்தி செய்வது மட்டுமல்ல. நடைமுறை வாழ்வின் சிக்கல்களைத் தீர்ப்பதும்தான் ஜென்னின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. மென் உணர்வில் எழும் வார்த்தைகளை அழகிய வடிவமாக, ஒரு தருணத்தை உணர்த்துவது போல, வாசக மனதிற்கு விரும்பத்தக்க வகையில் எளிய முறையில் சொல்வது போல கற்பனையின் எல்லையை இன்னும் விரித்துக் காட்டுவது போல, எழுதுகிறவர்க்கும் வாசிக்கிறவர்க்கும் சமமான கற்பனை எண்ணத்தை தருகிறது ஜென்.
ஜென் கவிதையில் உருவாவது, மலைப்பாதைகளும் பனிப்பாறைகளும் மரங்களும் நதிகளும் காற்றும் பதிவுகொள்கிற, இவற்றை எதிர்கொள்ளும் ஒற்றைத் தனிமனிதனைத் தவிர பிற மனிதர்கள் யாருமற்ற, பிரபஞ்சம். கவிதை வாசித்த மறுகணம் அந்த கற்பனை பரிச்சயமானதாகவும் உறுதி பெற்றதாகவும் உடனடியாக நம் எண்ணத்தில் ஒரு உலகம் உருவாகிறது.. அவ்வாறு இத்தொகுப்பில் நான் ரசித்தவை..
"இறுதியில்,
இந்தச் சாலையில் தான்
வந்தாக வேண்டும் நான் என
நன்றாக தெரியும்.
ஆனால் ,
இன்று தான் அந்த நாள் என்று
எனக்குத் தெரியாது நேற்று."
*சந்தேகமில்லை,
எங்கோ
எவரோ
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,
இந்த் தீவை
இந்த நிலவை.
*புத்தாண்டு தினத்தில்
என் பெற்றோரை பார்க்க ஏங்குகிறேன்
நான் பிறக்கும் முன் அவர்கள்
இருந்த விதமாக
*நினைக்க வேண்டாம் அதை
என்றுதான் நினைக்கிறேன். ஆனாலும்
நினைத்து விடுகிறேன்.
அதை நினைக்கும்
போது
கண்ணீர் சிந்துகிறேன்.
*அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ஒரு
ஈயை அடித்துக்கொன்று
எறும்புக்கு வழங்குகிறேன்.
*புத்தானாது சுலபம்
பிரமைகளை களைவது தான் கடினம்
பனி உறைந்த
நிலவொளிரும் இரவுகள் பலவற்றில்
அமர்ந்த உணர்ந்திருக்கிறேன்
வைகறைக்கு முந்தைய குளிரை
*திருடன்
விட்டுச் சென்றிருக்கிறான்
ஜன்னலில் உள்ள நிலவை
*நெல் வயலில் தேங்கிய நீர்
வெளியேறுகிறது ஒரு
மீனும் திரும்புகிறது
தன் வீட்டுக்கு
மிகக் குறைந்தபட்ச வார்த்தைகளில் வெளியாகிறது ஜென் கவிதை. இறுக்கமான உருவ அமைப்போ வார்த்தைகளை விரயம் செய்வதாக இல்லை. முதல் வாசிப்புக்கு மர்மமாக தெரியும் சில கவிதைகள் உணர்ந்து பார்க்கும் போது மாபெரும் உண்மைகளையும் உவமைகளையும் உருவகங்களையும் நமக்கு காட்டுகிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமைமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment