#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-3
Book-7
Pages:879
நான் கண்ட காந்தி
-லூயி ஃபிசர்
காந்தி குறித்து பல்வேறு புத்தகங்கள் தமிழில் வெளிவந்திருந்தாலும் லூயி ஃபிஷர் எழுதிய நான் கண்ட காந்தி முக்கியமான புத்தகமாகும். பத்திரிக்கையாளரான லூயிஃபிஷர் தான் கண்டு கேட்ட காந்தியின் வரலாற்றை மிக நுணுக்கமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் பதிவு செய்துள்ளார். இதனை மொழிபெயர்ப்பு என்று உணராத வகையில் தி.ஜ.ர அழகிய வடிவில் மொழிபெயர்த்துள்ளார்.
முதல் அத்தியாயமே காந்தியின் மரணத்தின் இருந்து துவங்குகிறது. பல்வேறு புத்தகங்கள் அவரின் மரணச் செய்தியை உணர்ச்சிகரமாகவும் செய்தியாகவும் வெளியிட்டு இருப்பார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் முதல் அத்தியாயத்தில் உள்ளது உள்ளபடியே என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதை மிக நுணுக்கமாக பதிவு செய்துள்ளார். உதாரணத்திற்கு ஆபா கொண்டு வந்த காரட் கீரை சாறு பற்றி கிண்டல் செய்து எனக்கு நீ மாட்டுத் தீணியை கொடுத்துவிட்டாய் என்று கிண்டல் செய்து சிரிக்கிறார். அதற்கு குதிரைத்தீனி அல்லவா கொடுத்தேன் என விடை சொல்கிறார். அப்படியே செல்லும்போது மூன்று குண்டுகள் பாய்ந்தது .முதல் கொண்டு பாய்ந்த உடன் காந்தியின் கால் தரையில் பதிந்திருந்தது. ஆயினும் நின்று கொண்டிருந்தார். இரண்டாம் குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு கரை படுத்தியது அவருடைய முகம் சாம்பல் நிறத்தில் வெளிறிவிட்டது ஹேராம் என்று முணுமுணுத்தார். மூன்றாவது குண்டு வெடித்ததும் தரையில் விழுந்தார் என்று குறிப்பிட்டதோடு அவரின் அஸ்தி தாமிர செம்பில் வைத்து அடைக்கப்பட்ட தாக சொல்வது என ஒவ்வொன்றும் நேரில் நின்று பார்ப்பது போல நமக்குத் தெரிகிறது.
மருத்துவம் படிக்க ஆர்வமாய் இருந்தவர் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக சட்டம் படிக்க வெளிநாட்டுக்கு செல்கிறார். முடித்தவுடன் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் பணிக்கு செல்கையில் அவருடைய வாழ்வில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகிறது.1897&1900 ஆண்டில் மூன்றாவது மகன் ராமதாஸ் பிறந்த போதும் நான்காவது மகன் தேவதாஸ் பிறந்த போதும் அவரே மனைவிக்கே பிரசவம் பார்த்திருக்கிறார். காந்தியின் வீட்டில் ஓடும் குழாய் நீர் கிடையாது ஒவ்வொரு அறையிலும் சிறுநீர் கழிக்கும் கலயம் உண்டு. தீண்டத்தகாதவர்களான தோட்டிகளே அசுத்தமான வேலைகளை செய்வார்கள். ஆனால் காந்தியோ ஒருவரையும் பணிக்கு அமர்த்திக் கொள்ளாது அவரே தனது சிறுநீர் களையங்களை தூக்கி அப்புறப்படுத்துகிறார்.
உணவிலேயே தமது ஆசையை அடக்கவில்லையானால் அதைவிட வலுவான உணர்ச்சிகளான கோபம், டம்பம், காமம் இவற்றை எல்லாம் எப்படி அடக்க முடியும் என்று காந்தி தமக்குள்ளே வாதித்தார். சாதாரண இன்பங்களை எல்லாம் தனக்கு மறுத்துக் கொள்வதை மாஸக்கிஸிம் (பிறர் தரும் துன்பத்திலேயே இன்பம் காண்பது)என்று மேல் நாட்டவர் சொல்கிறார்கள்.
சிறைச்சாலையில் இருக்கும் போது அமெரிக்க ஆசிரியர் தோராவின் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தார் .அதில் உள்ள வாசகம் இவரை சிந்திக்க வைத்தது. அதில் "எனக்கும் என் நகரத்து மக்களுக்கும் இடையே ஒரு சுவர் இருக்கத்தான் இருந்தது .ஆயினும் நான் சுதந்திரமாகவே இருந்தேன். ஆனால் என்னை போல் தாங்களும் சுதந்திரமாய் இருக்க அவர்களுக்கு தடையாய் இருந்த மற்றொரு சுவரை நான் கண்டேன். ஏறியோ இடித்தோ கடக்க, இந்த சிறைச்சுவரை விட இன்னும் கஷ்டமானது அந்த சுவர் .சிறைக்குள் இருப்பதாக எனக்கு துளியும் தோன்றவில்லை. தோராவின் இந்த கட்டுரைகளை காந்தி மனம் கொண்டு போற்றினார். முழுக்கட்டுரையையும் படித்தார் .சத்தியாகிரகம் பற்றிய கருத்தை தோராவிடமிருந்து காந்தி பெற்றார் என்று சிலர் சொல்லுவார்கள்.
மற்றொரு முறை இந்தியாவில் கிறிஸ்தவ கூட்டம் ஒன்றில் ஷெல்லியின் கவிதை ஒன்றை படித்தார். "அதில் நில்லுங்கள்; அமைதியாய், உறுதியாய், செறிந்த காடு போல, வாய் பேசாது ,கட்டிய கைகளுடன், தோலாத போரின் ஆயுதமான தோற்றத்தோடு நில்லுங்கள் "என்று குறிப்பிடும் அந்த நீள் கவிதையை படிக்கிறார்.
நேருவைப் போலவே காந்தியும் சிறையிலிருந்து தன் மகன்களுக்கு கட்டுரை எழுதி உள்ளார். அதில் குடும்பத்தினை பற்றியும் வாழ்வினை பற்றியும் கூறியதோடு படிப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எமர்சனின் கட்டுரைகளை படிக்கும்படி சொல்கிறார் .அது டர்பன் நகரில் எங்கு கிடைக்கும் எனவும் சொல்லிவிட்டு, டால்ஸ்டாய் எழுதியுள்ள 'உனக்குள்ளே கடவுளின் ராஜ்ஜியம்' என்ற நூலையே படிக்க வேண்டும். கடைசியில் அல்ஜிப்ரா ஒன்று வேண்டும் எந்த பதிப்பாய் இருந்தாலும் பரவாயில்லை என்று காந்தி கேட்கிறார் இவ்வாறு கடிதம் எழுதியது இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது.
எரவாடா மத்திய சிறையில் இருந்த போது அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை நடத்த வேண்டிய கட்டாயம். அதற்கு சம்மதித்த காந்தி உறுதி மொழியில் கையெழுத்திட்டு மருத்துவரிடம் கூறிக்கிட்டு அறுவை சிகிச்சை துவங்கியது மயக்க மருந்து கொடுத்து விட்டு போட்டோ எடுத்தார்கள். ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தபோது புயல் அடித்து மின்னல் வீசி மின்சார சப்ளை துண்டித்தது. லில்லி அருகே இருந்த மூன்று நரசுகள் ஒருத்தி பிடித்திருந்த டார்ச் லைட்டும் அணைந்தது பிறகு மண்ணெண்ணெய் விளக்கு ஒன்றின் ஒளியிலேயே ஆபரேஷனை செய்து முடிக்க வேண்டியதாயிற்று
#ரசித்தவை
*அனுபவம் என்பது தனிமனிதனின் ஆத்மாவும் வெளி உலகமும் ஒன்றோடொன்று மோதுவதன் விளைவு
*ஒவ்வொருவரும் தம் தாய்மொழியைக் கற்பது முக்கியம்;இல்லாவிட்டால், மொழிக்கும் கருத்துக்கும் இடையே விழும் பள்ளத்துக்குப் பாலம் கட்டுவதிலேயே மனத்தைப் பெரிதும் சிரமப்படுத்த வேண்டியிருக்கும்
*வேண்டுகோள் என்பதுதான் காந்தியின் திறவுகோல்
*பொதுமக்களுக்கு பணிபுரியம் ஒருவன், விலை உயர்ந்த பரிசுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
*மனிதர்கள் மேலும் மேலும் செல்வப்பெருக்கை தேடக்கூடாது;எளிய சுகஙகளையே தேட வேண்டும்
*செயலற்ற சகிப்பே(பாஸிவ்) இருக்கக் கூடாது
*நாம் மட்டும் நமக்கு உண்மையாக நடந்து கொண்டோமானால், எந்தக் கோணல்தனமான கொள்கையும்காலக்கிரமத்தில் நேராகிவிடும்
*பாக் என்றால் தோட்டம். ஆனால் ஜாலியன் வாலாபாக்கில் தோட்டமே இல்லை.
*யாருக்காவது பிரிட்டிஷார் தீங்கிழைத்தால் அவர்களிடம் பிரெஞ்சுக்காரர் போய் காதல் புரிவார்கள். யாருக்காவது பிரெஞ்சுக்காரர் தீங்கிழைத்தால் அவர்களிடம் பிரிட்டிஷ்காரர் போய் காதல் புரிவார்கள்.
*சத்தியாகிரகம் சாந்தமானது. சொற்கள் எதிரியை வழிக்கு கொண்டு வராவிட்டால் தூய்மையான பணிவும் நாணயமும் ஒருவேளை அவனை வழிக்கு கொண்டு வரக்கூடும். எதிரியை பொறுமையாளும் அனுதாபத்தாலும் அவனுடைய பிழையில் இருந்து விடுபட செய்ய வேண்டும். நசுக்கக் கூடாது.
*தவறுகள் செய்யவும் சுதந்திரம் வேண்டும்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுவாரசியமான பல சுவையான தகவல்கள் வரலாற்றுச் சம்பவங்கள் என்று ஏராளமான தகவல்கள் அறியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காந்தியை பற்றி தெரிந்து கொள்பவர்கள் முதலில் படிக்க வேண்டியது இப் புத்தகத்தை தான். காலை 6 மணிக்கு படிக்க துவங்கிய புத்தகத்தை இப்போதுதான் படித்து முடிக்க நேர்ந்தது. இடைவேளையில் வேறு வேறு புத்தகங்கள் வாசிக்க நேர்ந்தாலும் இப் புத்தகத்தை இன்றே முடிக்க வேண்டும் என்று ஆவலாய் படித்து முடித்து இருக்கிறேன்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment