Sunday, 26 March 2023

book-6


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-2
Book-6
Pages:168

குளம் போல் நடிக்கும் கடல் 
-போகன் சங்கர்

இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் தன்னறம் நூல்வெளி வெளியிட்டுள்ளது. மனித துக்கத்தின் மொத்த சரித்திரங்களிலிருந்து ஒரு நல்ல கவிதை ஒருபோதும் கசப்பை மட்டும் ஏந்திக் கொள்வதில்லை. அது எடுத்துக் கொள்வது கருணையை ;நம்பிக்கையின் உணர்ச்சியற்ற உறுதிப்பாட்டை ..எனும் வில்லியம் ராடிஸே வின் வரிகளை பொருத்திக் கொண்டு பார்த்தபோது நிதர்சனம் உணர முடிந்தது. ஏற்கனவே இருக்கக்கூடிய அர்த்தங்கள் வழியாக பேசுவதில்லை கவிதை. புதிய அர்த்தங்களை உருவாக்கி கொண்டே இருக்கக்கூடியது. மொழி ஒரு கட்டுமானமாக உறைந்து கொண்டே இருக்கிறது. மறுபக்கம் அதன் ஒரு பக்கம் உயிர்த்துடிப்புடன் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்ற ஜெயமோகன் வரி இன்னும் எதிர்பார்ப்பை தந்தது.

/ஒரு நீள் கவிதைக்கு 
இலவச இணைப்பாய் 
வந்த 
குட்டிக் கவிதை தான் 
கடைசியில் 
புவியை ஆண்டது/

உண்மையில் நீள் கவிதைகளை விட குட்டிக் கவிதைகள் உண்மையை மிகவும் உரக்கச் சொல்லிவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பது போல

காதலிப்பவன் நெருப்பாற்றில் நீந்துவது போல மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாம்பூச்சி இருக்க பிடித்தால் செத்துவிடும் வெறுமனே பிடித்தால் பறந்து விடும் என்பதைப் போல அதனை சொல்வது போல் கவிதை

/அதிகம் கட்டுப்படுத்திக் கொள்கிறேனா 
அதிகம் வெளிக்காட்டி விடுகிறேனா 
தெரியவில்லை 
காதலில் 
இரண்டும் ஒன்று போலவே உள்ளது/

காற்றின் வடிவம் குறித்து ஒரு கவிதை

/காற்றும் தெரு நாய் ஒன்று.
 ஒன்று ஒரே உறக்கம்.
 இல்லையேல்
 ஒரே ஊளை/

அமைதி ஒரு புல் போல் வளர்கிறது என ஜென் கவிதைகளில் வாசித்திருப்போம். ஆனால் இதில் அமைதி ஒன்றும் அவ்வளவு அமைதியாய் இல்லை.புல் வளரும்போது பக்கத்தில் உள்ள பூக்களுடன் பேசுகிறது. பிரித்தெடுத்து அறுக்க வரும் போது அழுகிறது. ஏதோ ஒரு மாட்டின் வாய்க்குள் போகும்போது கூட அரற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அமைதி பிரபஞ்சத்தில் எங்கும் இல்லை என ஒரு புல்லின் பார்வையில் இருந்து கவிதையை விமர்சிக்கிறார்.

ஒரு நல்ல எதார்த்த கவிதை பின்வரும் வரிகளை உள்ளடக்கியது போல் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய்

/மனிதர்கள் விசித்திரமானவர்கள். 
மலிவாக கிடைத்த பொருளைத் 
தொலைத்து விடுவதன் மூலம் 
விலை உயர்ந்ததாய் மாற்றி விடுகிறவர்கள்/

நிலையாமை வாழ்வின் அர்த்தத்தையும் எதிர்காலத்தில் இது கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வியையும் தாங்கி நிற்கும் நேரத்தில் இது போன்ற ஒரு வரிகள் கடமை செய் என்பது போல் நெற்றிப்பொட்டில் அடிக்கிறது

/வாடித்தான் போகிறோம் 
உதிரத்தான் போகிறோம் 
ஆயினும் 
மலராமல் இருக்க வேண்டியதில்லை/

கவிதை வரிகள் மட்டும் நாம் ஒன்று நினைப்போம் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை போல..நம் சிந்தனை ஒன்று நினைக்கும் வந்துவிடும் கற்பனை வேறு ஒன்றை உருவாக்கும். அதுபோல் நகைச்சுவையாய் கவிதை

/ஒரு கவிதைக்குள்,
 எப்படியும் 
லிப்டில் 
முண்டியடித்துக் கொண்டு 
கடைசியில் ஏறிவிடும்
குண்டான நபர் போல 
நுழைந்து விடும் 
ஒரு உத்தேசிக்காத வரி/

இணையத்திலே போராடிக் கொண்டிருக்கும் புரட்சியாளர்களுக்கும் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் புரட்சியாளர்களையும் ஒப்பிட்டு ஒரு எள்ளல் கவிதை

/எனக்கான புரட்சிகளை 
நீ செய் 
உனக்கான கவிதைகளை 
நான் எழுதுகிறேன் 
இது ஒரு நியாயமான ஒப்பந்தம் 
என்றே நான் எண்ணுகிறேன்/

 இயல்பாக நடக்கும் செயல்களில் தன் கற்பனை ஏற்றிக் கூறும் போது அந்த செயல்களும் சொற்களும் அலகுணர்வில் கிடைக்கும் .அது போல

/ விலகிப் போகும்போது 
வெறுப்பாகவும் 
அருகில் வரும் போது 
அன்பாகவும் 
மாறிக் கொள்கிறது 
இந்த ஊஞ்சல்/

என்று அன்பு வைத்த இதயத்தையும் ஊஞ்சலையும் ஒப்பிட்டு காட்டுகிறார்.

எழுது அதுவே எழுத்தின் ரகசியம் என்பதைப் போல

/ மிக கரகரப்பான குரலாக 
இருந்தாலும் 
உன் பாடலை நீ பாடு/ என்கிறார்

இறுதியில் போகன் ஷங்கரின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment