Saturday, 25 March 2023

book-3


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

புத்தகம்-3
பக்கங்கள்-608

வேள்பாரி முதல் பாகம்
-சு.வெங்கடேசன்

வார வாரம் அவ்வப்போது ஆனந்தவிகடனில் படித்தாலும் தொடராக புத்தகத்தில் படிக்கும் போது பிரம்மாண்ட காட்டினை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.பாரியை தேடிச் செல்லும் கபிலர் பறம்பு நாட்டில் பயணிக்கிறார். வழிகாட்டி செல்லும் ஒருவன் கூறும் பாரியை பற்றிய உருவகம் காட்டினைப் போல் அளவிட முடியாதது பாரியின் புகழ் என நினைக்கிறார் கபிலர். கேப்டன் பிரபாகரன் கொஞ்ச நேரத்துக்குப் பின் எண்ட் ரி ஆகும் விஜயகாந்தைப் போல் தாமதமான மாஸான எண்ட் ரி கொடுக்கும் பாரி செம க்ளாஸ்.பாரியின் திறமை வீரம் போன்றவற்றை கேட்டு சிலாகிக்கும் கபிலர் பாரியின் மீது மரியாதை கலந்த அன்பு செலுத்துகிறார்..நாமும் தான்.

காட்டிலிருக்கும் செடி, கொடி, பறவை, விலங்கு, வானியல் அறிவு போன்றவை ஒவ்வொரு அத்தியாத்திலும் வரும் போது பறம்பு குறித்த பார்வையை நம் அகக்கண்ணுக்குள் செல்கிறது.

ஒரு இடத்தில் நாகங்கள் புணர்கையில் அவற்றின் மீது போர்த்தப்பட்ட துணியால் மனிதனுக்கு நீடித்த ஆயுளும் நன்மையும் கைவிடும் என்று கூறுகிறார் ஒருவர். ஆனால் நாகர்குல தலைவன் அதனை மறுத்து நாகங்கள் புணர்வதை கண்டவர் யாருமில்லை. நாகங்கள் பின்னி கிடப்பதை மக்கள் பார்த்திருப்பார்கள் அது காதல் விளையாட்டு. அதை எல்லாம் பார்க்கலாம். ஆனால் நாங்கள் புணர்வது யாரும் பார்க்க முடியாது. ஏனெனில் நாகத்துக்கு காமம் பெருகும் காலங்களில் மெல்லிய நீர் ஒன்று உடலெங்கும் ஊறி, அதன் கண்களை மறைக்கும்.
அதற்குரிய மூலிகையை தின்ற பிறகு நாகம் தனது மூக்கு நுனியின் வழியே அந்த நீர் தோலைக் கழற்ற தொடங்கும். கண்களின் மேல் படர்ந்த காமத்திரையை அகற்றும். அதன் பிறகு அது எட்டு நாட்களுக்கு வெளியே வராது யாரும் அதனை அறியவும் முடியாது.

புத்துடல் கொண்ட கணத்தில் தொடங்கும் இணையின் ஒவ்வொரு செதிலுடன் கலந்து மேலும் திருகி பிரண்டு இறுகி தோல்  கனிந்து முதிர்ந்த பிறகு தான் இணையை பிரிந்து வெளியே வரும் .தன் பழைய உடலின் வழியே இணை கூடாத ஒரே உயிரினம் அது மட்டும் தான் என சொல்லும் போது நமக்கு வாசிப்பின் ஆச்சரியம் நம் புருவத்தை உயர்த்துகிறது.

இரண்டாம் பகுதியான தேவ வாக்கு பகுதியில் பாண்டியர் குறித்த கதைகள் ..பாண்டிய மன்னன் பறம்பின் பாரியினால் பாதிக்கப்பட்ட கதையை சொல்கிறது. பறம்பிலிருக்கும் கொற்றவை வரலாறு திருவிழா கிராம வினாக்கள் குறித்து செவி வழி செய்தியாக வந்த கதைகளும் அவ்வப்போது நமக்கு வியப்பை தருகிறது.

பாரியின் வீரத்தைப் போலவே அவரின் நிதானமும் நம்மை மெய்மறக்க செய்கிறது. பாரி மீது படையெடுக்கும் பொருட்டு பரம்பு நாட்டை நோக்கி முன்னேறி வருகின்றனர்.படைத் திறத்தை மட்டும் நம்பியிராது தன் மதியூகத்தின் மூலம், காட்டின் இருக்கும் கானுயிர் முதல் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக உணர்ந்து ஒவ்வொரு சிறு படைகளையும் முன்னேறி விடாமல் எவ்வாறு தடுக்கிறார் என்பதோடு பல்வேறு கிளைக்கதைகளோடும், பல்வேறு அரிய செய்திகளோடும்
 முன்னேறி வருவோரை எவ்வாறு முறியடிக்கிறார் என்பதுதான் முதல் பாகம்

#ரசித்தவை

*ஆணின் பார்வை பெண்ணின் பார்வையைப் போல் நயமிக்கது இல்லை.ஆணின் கண்கள் காதல் கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல. அவன் பார்வையால் பற்றி இழுத்தாலும், அவள் கண்களால் கைம்மாறு செய்து கொண்டிருந்தாள்

*மனமும் கண்களும் சலிப்படையும் வரை பார்த்தான்

*பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக் கொள்ள மாட்டாள். அவள் சிக்கிகொள்வது அவளிடம் மட்டும்தான்.. விடுவிக்கும் ஆற்றலும் அவளிடமே உள்ளது.

நீலம் என்பது வானத்தின் விதியல்ல இயல்பு.விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும்.இயல்பாக இருந்தால்?"

*கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப் போல படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத் தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன

*விடையை யாரும் சொல்லிவிடலாம். வினாக்கள் உருத்திரள்வது தான் முக்கியம். பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான் வெளிவருகின்றன

*மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும்தான் இயற்கையின் அமைப்பு

*பகிர்ந்து உண்பதும், பரிமாறி வாழ்வதும், இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்தவை

*யானைக்கூட்டத்தைக்கூட எளிதில் விரட்டிவிடலாம். ஆனால்,பன்றிக்கூட்டத்தை
விரட்டிச்செல்வது எளிதல்ல. புதருக்குள் ஒளிந்துகொள்ளும்; திசைமாற்றி நம்மை ஏமாற்றும்; எளிதில் ஓடாது.தனது உயிருக்கு ஆபத்து என அது உணர்ந்தால் மட்டுமே தப்பியோட ஆரம்பிக்கும்.இல்லையென்றால், அதை நகர்த்தமுடியாது!

*நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்.

*மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கடலைப் பார்க்க வேண்டும்.ஏன்?அது அவ்வளவு விரிந்தது பரந்தது எல்லையற்றது.
நீலன் சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான்.
எங்கள் பாரியின் கருணையை விடவா?

*மண்ணில் கால் படாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும் தான்...

*காதல், தேடலில் தொடங்கி தொலைவதில் முடிவடையும்!

*குழந்தைகளிடம் விட்டுக் கொடுக்கும் போதும், தோற்கும் போதும் தான் ஒரு ஆண் தாய்மையை அடைகிறான்

*இவ்வளவு ஆற்றலும் அழகும் கொண்ட காதலனை பார்த்துக்கொண்டே விலகி நடப்பதை விட பார்க்காமல் திரும்பி நடப்பதே உயிர் வாழ்வதற்கான சிறந்த வழி!

*சூரிய காந்திப் பூ மட்டும்தான் சூரியனைச் சுற்றுகிறது என்று தெரியும். ஆனால் குட்டியாய் தரையில் படர்ந்திருக்கும் நெருஞ்சிப் பூவும் சூரியனைச் சுற்றும்.நெருஞ்சிப்பூவின் இன்னொரு பெயர் ஞாயிறு திரும்பி.சூரியனை பார்த்த படியே காலை முதல் மாலை வரை இருக்கும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment