Wednesday, 22 January 2025

புத்தகம்-11


Reading_Marathon2025
#25RM055

Book No:11/100+
Pages:-188

மந்தை மனிதர்கள்
-லதா

இந்த ஆண்டு புத்தகத் திருவிழா வாங்கிய புத்தகம்.
கழிவறை இருக்கை ஆசிரியரிடமிருந்து வந்துள்ள மற்றுமொரு கவனிக்கத்தக்க நூல். பொதுவாக மந்தை என்பது ஆடு மாடுகள் சேர்ந்து வாழும் இடமாக சொல்லப்படுகிறது. சமூகச் சூழலில் தனித்துவம் இன்றி பிறர் சொல்வதை எந்த விதத்திலும் அலசி ஆராயாமல் மந்தை மனப்பான்மையுடன் தனித்துவமான சிந்தனை இல்லாமல் கூட்டத்தைப் போல் பின்பற்ற வேண்டாம் என்பது அதன் உட்கருத்தாகும். தனித்துவ அடையாளம் இல்லாமல் "நாம் கூட்டுப் பயணத்தை பிணங்களின் ஊர்வலமாக மாற்றி விட்டோம் எனக் கூறும் போது நெற்றி பொட்டில் அடித்தது போல் உள்ளது.

பொதுவாக தனியாக சிந்திப்போரை மட்டுப்படுத்துவதற்கு சொல்லும் வார்த்தை தனி மரம் தோப்பாகாது. பிறர் சிந்தனையின் நிழலில் வாழும் போது நம்முடைய சிந்தனை மட்டு படுகிறது என்பது உண்மை. நூலில் இடம் பெற்றுள்ள 23 கட்டுரைகளும் தனிமனித பார்வை குறித்தும், சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் எவ்வாறு உள்ளன என்பதை குறித்தும், மனிதனின் சுய சிந்தனை வளர்க்கும் தேவையை முன்வைத்தும் இந்த நூல் பேசப்படுகிறது. ஒருவரை கண்மூடித்தனமாக பின்பற்றும் போது அவரின் தவறுகளையும் ஏற்றுக் கொள்கிறோம். சரியான விஷயத்தை அவரிடம் சொல்ல தயங்குகிறோம். நாம் கற்றவர்கள் அல்ல கற்பிக்கப்பட்டவர்கள் என்பதனை அழுத்தமாக சொல்லி நாம் பாதை மாறி செல்கிறோம் என்பதனையும் எச்சரிக்கிறது.

எல்லோருக்கும் நல்லவனாக இருக்க ஆண்டவனாலும் முடியாது. ஆனால் மனிதன் ஒரு படிக்கு மேலே சென்று மற்றவர்களுக்காகவே பேசுகிறான், வாழ்கிறான் ,இயங்குகிறான். கருத்து முரண் வந்தாலும் அதனை விவாதிக்காமல் தவறாக எண்ணுவார்களோ என்று நினைத்து அப்படியே கடந்து செல்கிறான். இதே பழக்கத்தை தம் குழந்தைகளுக்கும் கற்பித்து அவர்களுடைய சுயத்தையும் அழிக்கிறோம் என்ற குற்றச்சாட்டையும் சொல்கிறார். தயக்கமே நம்முடைய எண்ணங்களை குழி தோண்டி புதைத்து விடுகிறது.

நிதர்சனத்தின் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்கள் போல சொற்கள் நம் சுயத்தை நோக்கிப் பாய்கின்றன. கூட்டம் என்றாவது நல்லது செய்து இருக்கிறதா? தனி மனிதருக்கு என்றால் இல்லவே இல்லை. மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியாளர்களும் சரி தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவரின் சுயலாபத்துக்காகதான் ஆண்டாண்டு காலமாக இங்கு ஆட்சி நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்டி விட்டு நமக்கென ஒரு அறிவு இருக்கிறது அதை உபயோகிக்காவிட்டால் நாம் மற்றவர்கள் வாழ உபயோகப்படுவோம் என்று குட்டுகிறார்.

தலைவர்களை வாழவைக்கும் தொண்டர்கள் தான் நாட்டில் அதிகம்.அவர்களின் குடும்பம் பற்றி கூட கவலைப்படாமல் தலைவர்களின் குடும்பங்களை பற்றி எண்ணிக் கொள்கிறார்கள்‌. ஆனால் தொண்டர்களின் குடும்பங்களின் நிலைதான் மிகவும் கவலைக்குரியது. சில விஷயங்களில் சுயநலத்தோடு இருந்தால் மட்டுமே நம்முடைய சுய சிந்தனை, சுயமதிப்புடன் வாழலாம் என்பதை பல இடங்களில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்

தன்னிடம் பதில் இல்லாதவன் தான் பிறரிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான் என்று  நான் எழுதிய வரி நினைவுக்கு வருகிறது சமுதாயத்திலும் இதை பலர் செய்வதாக கட்டுரையாளர் தெரிவிக்கிறார் உதாரணத்துடன்.

தியாகமே உன்னை வழிநடத்தும் என்பது பிரபல சினிமா வசனம்.ஆனால் தியாகத்தினால் சொந்த விருப்பு வெறுப்பு இயல்பாய் அழித்தொழிக்கப்படுகிறது.அன்பே தலையெழுத்தாக்கப்பட்டு மனிதர்களின் ஆசைகள் நிர்மூலமாக்கப்படுகிறது.நம் ஆசைகளும் விருப்பங்களும் மற்றவர்களை சார்ந்திருக்கும் போது நிச்சயம் நிறைவேறாது என்பதை திருமண பந்தத்தில் நடக்கும் சிக்கல்களை குறித்தும் விளக்குகிறார்.சுயசிந்தனையை மீட்டுருவாக்கம் செய்வதற்கு நண்பர்களும் உரையாடல்களும் புத்தகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தன்னிச்சையாக ஒருவர் அலுவலகத்திலோ வீட்டிலோ யாரையும் கலந்தாலோசிக்காமல் அவருடைய இயல்பில் தனக்கு இருக்கும் அறிவில் ஒரு முடிவை எடுத்து விட்டால்.. அவர் யாரையும் கலந்தாலோசிக்க மாட்டார். திமிர் பிடித்தவர் என்ற ஒரு முத்திரையை நாம் எப்போதும் வைத்துக் கொண்டு அலைகிறோம்.அதாவது தம்மை விட பிறர் அறிவில் மேம்பட்டவராக இருக்கக் கூடாது என்பது நம் எண்ணம். நாம் ஊருடன் ஒன்றி வாழ்கிறோம் அவர் மட்டும் தனித்து இருப்பதா? அதற்கு உதாரணமாக புத்தகத்தில் மேற்கோள் கதைகளையும் சம்பவங்களையும் தொகுத்து இந்த வரிகளுக்கு மேலும் உண்மை சேர்க்கும் விதத்தில் பல எடுத்துக்காட்டுகளையும் கூறியுள்ளார்.

சம்பவங்களை பொதுமைப்படுத்துவது, நாளைய வாழ்வுக்கு எதிர்கால வாழ்வுக்கு இன்றே நம்மை இரையாக்கிக் கொள்வது, அவசர உலகில் அன்பாய் இருக்க நாம் தவறுவது. சினிமாவில் பார்த்து ரசிக்கும் அன்பினை நம்முடைய வீட்டில் காட்டாதது. ஆக ரசிப்பதற்கு ஒன்றும் வாழ்வதற்கு ஒன்றுமாய் இரு வேறு வாழ்க்கையை மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று சாடுகிறார்.

இறுதியாக உண்மைகள் உண்மைகள் மட்டுமே. யார் விருப்பத்திற்கும் அவற்றை வளைக்க இயலாது. உண்மைகளை நாம் தான் நம் 
 அபிப்பிராயங்களால் பொய்களாக்க முயல்கிறோம். நாம் உணர தவறினாலும் உண்மைகள் மட்டுமே வாழும் என்ற எதார்த்த வெளிச்சத்தில் உண்மை மிளிர்கிறது..

*சிலர் பாதி வழியிலேயே தெளிகிறார்கள். இன்னும் சிலர் தன்னைப் போலவே சிந்திக்காத இன்னும் சில மனிதர்களை உருவாக்கி விட்டு செல்கிறார்கள்

*கூட்டமாக சேர்ந்து கோஷம் போடும் குரல் தனக்கு என்ன தேவை என்பது குரல் கொடுப்பதில்லை.

சில புத்தகங்கள் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும். சில புத்தகங்கள் சிந்திக்கும் அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில் இந்த புத்தகம் தனி மனிதர்களை உளவியல் ரீதியாக பார்ப்பதுடனும் தனிமனிதர்கள் செய்யும் தவறுகள், கூட்டமாக சேரும்போது நாம் தவறவிடும் கணங்கள், வாழ்வின் மீதான படிப்பினையை எவ்வாறு நாம் மீட்டுருவாக்கம் செய்து கொள்வது என ஒரு உளவியல் அறிஞரைப் போல நமக்கு இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் பாடம் எடுக்கின்றன 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment