Wednesday, 15 January 2025

புத்தகம் -6


#Reading_Marathon2025
#25RM055

Book No:6/100+
Pages:-123

நூலகாலஜி
-ஆயிஷா நடராஜன்

புத்தகத் திருவிழா மாதம் மட்டும் புத்தகங்களை கொண்டாடிவிட்டு விட்டுவிடுகிறோம் அல்லது வாசிப்பை குறைத்துக் கொள்கிறோம். ஒருவர் திறமட வாசிக்க வேண்டும் எனில் அவர் நூலகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

ஏனெனில் நூலகத்தின் மூலம் தான் நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் பழக்கம் வரும். அட்டையை பார்த்தோ ஆயில் பிரிண்ட் பார்த்தோ யாரேனும் ஒருவர் சொல்லியதை காதால் கேட்டோ புத்தகத்தை எடுத்து பயிற்சி செய்து பார்க்கலாம்.15 நாட்களுக்கு ஒரு முறை புத்தகத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை நம்மை வாசிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கும். மேலும் அச்சில் இல்லாத அல்லது மீண்டும் பதிப்பிக்காத புத்தகங்களும் அந்த ஞானக்கிடங்கில் தான் ஒளிந்துள்ளது. அந்த நூலகம் குறித்தும் உலகளாவிய நூலகம் குறித்து தான் இந்த புத்தகத்தில் ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதியுள்ளார்.

நூலகம் ஒருவரை எவ்வாறு மாற்றும் என்பதற்கு உதாரணமாக ஓக் மாண்டினோ எனும் எழுத்தாளரை பற்றி குறிப்பிடுகிறார். இளம் வயதில் அமெரிக்க படையில் ராணுவத்தில் சேரும் இவர் ஜெர்மனியின் மீது போர் தொடுத்த போது ஜெர்மனி வீரர்களை சுட்டுக் கொண்டதை நினைத்து குறற உணர்வில் மனம் வருந்துகிறார்
 அது தற்கொலை எண்ணம் வரை செல்கிறது அந்த நேரத்தில் அருகிலுள்ள நூலகத்துக்குச் சென்று இதனை செய்து முடிக்க திட்டமிடுகிறார் அவர் அமர்ந்திருந்த மேசையில் இருந்த ஒரு புத்தகம்
‘நான் இறந்து போவதற்கு முன்… (Before I die) என்கிற அந்தப் புத்தகத் தலைப்பு அவரைக் கவர்ந்திழுத்தது. துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அந்தப் புத்தகத்தை எழுதியவர் கிளமெண்ட் ஸ்டோன். இந்த புத்தகம் அவரை எந்த விதத்தில் மாற்றியது என்பதை பற்றி தான் முதல் கட்டுரை துவங்குகிறது.

ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெண்கள் படிப்பதற்காக நூலகத்துக்கு நுழைய போராட்டங்கள் நடத்திய வரலாறும் உள்ளது. சொல்லப்போனால் பெண்கள் நூலகத்துக்குள் நுழைய 500 ஆண்டுகள் தேவைப்பட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
சோவியத் நாட்டில் இருந்த நூலகங்களை பற்றி சிங்காரவேலர் பதிவு செய்ததையும் கூறியிருப்பார் அதில் வாசிப்பே கற்றல் என்று குரூப்ஸ்கயாவின் தீவிர இயக்கப்படி, 1924ல் தலைவர் லெனின் மறைவிற்குப் பிறகும் அயராது மேலும் தீவிரமடைந்த அவரது நூலகப் புரட்சி மூன்று லட்சம் நூலகர்களை கற்றல்- தேவதைகளாக சோவியத் முழுதும் பயிற்சி தந்து நியமித்து 1939 வரை தொடர்ந்தது.

காமிக் புத்தக உலகம்தான் இன்றைய சர்வதேச நூலகங்களின் ரத்த ஓட்டமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. காமிக்ஸ் புத்தகங்கள் நூலகங்களில் நுழைந்த வரலாறும் மக்களிடம் அது ஏற்படுத்திய அதிர்வு குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தது.

1915ல் டெஸ்லாவும் எடிசனும் இயற்பியல் நோபல் பரிசை பகிர்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது பரிசைப் பெற உடனடியாக மறுப்பை வெளியிட்டார் டெஸ்லா. ஆனால் பிரான்ஸ், யுகோஸ்லேவியா உட்பட 17 நாடுகளின் உயரிய விருதுகள் பெற்றவர் அவர். தனது ஆய்வகங்கள் தீயிடப்பட்ட பிறகு கடும் வறுமையில் அடுத்தடுத்து விடுதிகளில் அறை எடுத்துத் தங்கிட... 1922 முதல் அவர் வாழ்வு அவரைப் பணித்தது. பசியும் பிணியும் வாட்டி எடுத்தன. அறிவியலுக்காக திருமணம்கூடசெய்து கொள்ளாமல் வாழ்ந்த டெஸ்லா இறுதிவரை இரண்டு பழக்கங்களை கைவிடவில்லை. பூங்காக்களில் புறாக்களுக்குத் தீனி போடுதல்... தேடித் தேடி நூலகங்களில் வாசிப்பு என்ன வரலாற்றுச் செய்தியும் இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் நூலகம் கேள்விப்பட்டோம் ஆனால் நடக்கும் நூலகத்தை அறிவீர்கள் என்ற கேள்வியுடன் தொடங்கும் கட்டுரையில் போலன் சர்க்கார் அங்கத்தின் விடுதலையில் முக்கிய பங்கு வைத்த நட்சத்திரம் அவர் என்ன செய்தார் தெரியுமா? 

1970ல் சட்டென்று ஒருநாள் அவர் இரு தோள்களிலும் தோள்பைகளில் வங்க- விடுதலையின் எழுச்சி நூல்களை எடுத்துக்கொண்டு தனது நடைப்பயணங்களைத் தொடங்கினார். அவரிடம் அவரது நடையின்போது இருநூறு புத்தகங்கள் இருந்தன. ராஜ்ஷஷி மாகாணத்தின் முப்பத்தாறு கிராமங்களில், தானே நேரில் நடந்து சென்று மக்கள் வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு நான்கு கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை, தானே நேரில் நடந்து சென்று மக்கள வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு 4கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை தனது புத்தக நடைப்பயணத்தில் முடித்தபின் ஒன்பது நாட்கள் கழித்து மீண்டும் அதே கிராமத்திற்கு வருவார். ஊர் மக்கள் முதலில் அவரது நூல் – அறிமுகத்தைக் கேட்டார்கள். பிறகு தங்களது விருப்ப நூலை தேர்வு செய்வார்கள். ஒன்பது நாட்களில் மறுமுறை அவர் வரும்போது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த நூலை பெற்றுக்கொள்ளலாம்.

*டார்வினின் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வெர்னாட்ஸ்கியின் ‘பயோஸ்பியர்’ நூலும் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அந்த இரண்டு புத்தகங்களுமே சிங்காரவேலரிடம் இருந்தது மட்டுமல்ல... மேலும் இரண்டு பிரதிகளை ‘எப்படியோ’ வரவழைத்து அவர் பெரியாருக்கு ஒரு செட் மற்றும்  வீரத்துறவி விவேகானந்தருக்கு ஒரு செட் (இருவரின் நூலையும்) வழங்கி வாசிப்பு ஓர் அரசியல் செயல்பாடு என்பதை செயலில் காட்டியதை வரலாறு பதிவுசெய்துள்ளார்.

*படகு நூலகங்கள் பற்றி நமக்குத் தமிழில் முதலில் எழுதியவர் தோழர் சிங்காரவேலர். மகா கவிசுப்பிரமணிய பாரதி நடத்திய 'யங்- இண்டியா' இதழ் பற்றி ஒரு தனிக்கட்டுரையில் குறிப்பிடும் அவர் அது ஆந்திராவில் விஜயவாடா படகு நூலகங்கள் வரை பிரபலமாக வாசிக்கப்படுகிறது என்று ஒரு வரி எழுதுகிறார். இக்கட்டுரை 1941ல் எழுதப்பட்டது.

இந்த புத்தகத்தின் மூலம் நூலகம் குறித்த உலகெங்கிலும் உள்ள வரலாற்றினை அறிய முடிகிறது.நூலகத்தை பயன்படுத்திய அறிஞர்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு உலகம் முழுவதும் நூலகம் குறித்த பல்வேறு தகவல்கள். இந்த சிறிய புத்தகத்தில் சிந்திக்கும் விதத்தில் அமைந்துள்ளது. நூலகம் நம் ஊரில் இருந்தாலும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று செல்போனுக்கு அடிமையான இளம் தலைமுறையை மடைமாற்றும் விதத்தில் நூலகத்தை பயன்படுத்துவது மிகச் சரியான தீர்வாக இருக்கும். ஏதேன்ஸ் நகரத்தில் முதலில் வந்தவை பள்ளிகள் அல்ல நூலகங்களே என்னும் செய்தியும் நமக்கு அறிய முடிகிறது. இன்று ஊடகத்தில் முன்வைக்கப்படும் புத்தகங்களை மட்டுமே வாங்கும் பழக்கத்தை நாம் கொண்டுள்ளோம். மாறாக புத்தகங்களை நாமே தேர்ந்தெடுக்கும் ரசனையை வளர்த்தெடுப்பதில் நூலகம் முக்கிய பங்கு வைக்கிறது. ஆகவே நூலகத்தில் நாம் உறுப்பினராகி வாசிப்பை மேம்படுத்துவோம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment