#Reading_Marathon2025
#25RM055
Book No:2/100+
Pages:-78
வாழ்வியல் கையேடு
எபிக்டிடெஸ்
தமிழில் சந்தியா நடராஜன்
வாங்கக்கூடிய விலையில் இருக்கும் புத்தகங்கள் படிக்கும் நிலையில் இருக்காது. படிக்கக்கூடிய புத்தகங்கள் வாங்கும் விலையில் இருக்காது. ஆனால் இப் புத்தகம் மிகக் குறைந்த விலையில்.. குறைந்த பக்கங்களில், ஆனால் அடர்த்தியான மொழியில்.. நம்மை ஒவ்வொரு பக்கமும் சிந்திக்க வைத்து விட்டு தான் திருப்ப வைக்கிறது.
பொதுவாக கையேடு என்றால் புத்தகத்தில் உள்ள கடினமான பகுதிகளை எளிமையாக புரிந்து கொள்ளும் நோக்கோடு தான் கையேடு வடிவமைக்கப்படுகிறது. அதேபோலத்தான் இப்ப புத்தகம் வாழ்வியலுக்குரிய எளிய உண்மைகளை பேசும் புத்தகமாக மிளிர்கிறது. துருக்கி நாட்டில் பிறந்த எபிக்டிடெஸ் ரோமாபுரியில் அடிமையாய் இருந்தார். பின்பு விடுதலை கிடைத்ததும் தத்துவ ஆசனாக விளங்கியவர். அவரின் மாணவராக இருந்த எர்ரியன் தான் தன் குருவின் போதனைகளை தொகுத்து பதிப்பித்தார். 52 போதனைகளுடன் பின் இணைப்பாய் தனிமையின் வலி பகுதியும் இடம் பெற்றுள்ளது.
பொதுவாக மனிதர்கள் அதிகாரம் செலுத்துவதிலே மிகுந்த ஆர்வத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் பிறரை குற்றம் சுமத்தாமல் தன் மனதுக்கு மாறாக எதுவும் செய்யாமல் இருந்தாலே எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனின் தோற்றத் திறனையும் விருப்பு வெறுப்புகளையும் வேட்கையும் அடக்கி பழகினாலே தன்னலமின்றி இன்பமாய் வாழலாம் என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளையும் விளக்குகிறார்.
மனிதர்கள் சுயத்தை இழப்பதாலேயே பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நாம் நாமாக இருக்கும் போது தான் உண்மையாக இருக்க முடியும்.
உன்னைத் தவிர யாராலும் உனக்கு அமைதியை தர முடியாது எனும் பொன்மொழியின் பொழிப்புரையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் உனக்கு நீயே ஒளியாவாய் என்பதனை விளக்கும் வகையில் வாழ்வியல் கருத்துக்கள் உள்ளன.
பொதுவாக ஓஷோ புத்தகங்களில் ஒரு உண்மை கருத்தை விளக்குவதற்கு கதை அனுபவம் தத்துவம் என்ற பலவற்றை கலந்து இந்த உண்மை என்னும் மருந்தினை கொடுப்பார். ஆனால் இப் புத்தகத்தில் எந்தவித ஆடம்பரமும் அலங்காரமும் இன்றி, தத்துவார்த்த வாழ்வியல் கருத்துக்களை சாறு பிழிந்து கொடுத்தது போல ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளது.
மனித வாழ்வில் மனித ஏற்றுக் கொள்ள மாட்டாதது யதார்த்தம் என்பதுதான். அதனை எதிர்கொள்ள துணிவில்லாமல் எங்கெங்கு சுற்றி இறுதியில் அதை எதிர்கொள்வதை ஆரம்பத்திலேயே எதுர்கொண்டு திட்டமிட்டபடி, இன்பமான வாழ்வை அமைத்துக் கொள்வது பற்றிய விதிகள் தான் நூல் முழுக்க நுண்ணிய கருத்தை விளக்கும் விதத்தில் உள்ளது.
சாதாரண ஆர்வம் கொண்டவனுக்கு ஆசை மட்டும் இருக்கும். முடிந்த வரையில் முயல்வான். அது மேன்மை இல்லை .முற்றிலும் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் ஒலிம்பிக் போட்டியில் நீ பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் அந்த ஆசையோடு தொடர்ந்து அதற்கான தேவை உழைப்பு முயற்சி என்பதனை பற்றி கடுமையாக பயிற்சியும் செய்ய வேண்டும். உனது பயிற்சியாளரை மருத்துவர் போல கருதி அவருடைய வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்ற வேண்டும். நீ களத்தில் இறங்கிய பிறகு வெற்றியும் தோல்வியும் ஏற்படலாம். நீ தோற்றம் கூட போகலாம். ஆனால் ஒட்டு மொத்த விஷயங்களையும் சாதகமாக்கி முழு மனதிலும் போட்டியில் பங்கேற்க சென்று வெற்றி பெற வேண்டும் என உழைப்பின் மேன்மையை வெற்றி பெறுதலின் அவசியத்தையும் தொடர்பு படுத்தி கூறியுள்ளார்.
பழைய எதிர்நீச்சல் படத்தில் நாகேஷ் ஒரு காட்சியில் சொல்லுவார்.பால் சிந்திவிட்டால் வருந்தாதே.அதில் உள்ள தண்ணீர் சிந்திடுச்சேனு நினைச்சு லேசா விடுனு சொல்லுவார். வருத்தப்பட்டால் சிந்திய பால் வந்துவிடுமா என்று கேட்பார். அதுபோல் மனித வாழ்வின் துன்பங்களை நினைத்து உடைந்து போகாமல் மேலும் முன்னேற நமக்கு ஆலோசனையை சொல்கிறது.
*உண்மைக்கு ஆசைப்படு
*விருப்பம் என்பது நாம் நாடுவதை நோக்கி நம்மை ஓட வைக்கிறது வெறுப்பு என்பது நமக்கு ஒவ்வாததை தவிர்க்க வற்புறுத்துகிறது.
*நம்புவது என்பது கசப்புக்கும் குழப்பத்துக்கும் மருந்து.
*இது என் வெற்றி ,இது அவரது தவறு, இது என் மோசமான துரதிருஷ்டம் என்றெல்லாம் ஒரு நிகழ்வை தன்மையப்படுத்திக் கொள்ளாதே .அந்த நிகழ்வை எந்த அளவுக்கு வசப்படுத்தலாம் என்று மட்டும் பார்.
*முடிந்தவரை மௌனமாய் இரு அல்லது பேசுவது குறைவாக இருக்கட்டும். பெருமை பற்றி பேச தொடங்கினால் நாம் சிறு புத்தி கொண்டவர்களாகிவிடுகிறோம்.பிறரை குறை சொல்வதையும் பிறரோடு ஒப்பிடுவதையும் புகழ் பாடுவதையும் தவிர்த்து விடு.
எதிர்காலம் குறித்த அச்சப்படுவதை காட்டிலும் நிகழ்காலத்தில் செம்மையாக வாழ்வது எப்படி என்பதை கையேடு நமக்கு உணர்வுபூர்வமாக ஒவ்வொரு வரிகளிலும் சொல்லி விடுகிறது. நமது கட்டுப்பாட்டில் இருப்பவைக்கு மட்டுமே, நாம் கவனம் செலுத்த முடியும் இல்லாதவற்றை என்ன பயன் என்பதையே சொல்கிறார்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment