Saturday, 18 January 2025

புத்தகம்-9


#Reading_Marathon2025
#25RM055

Book No:9/100+
Pages:-353

கையறுநதி
-வறீதையா கான்ஸ்தந்தின்

உன் துயர் இறப்பவளைக் குறித்ததா, அல்லது என்னைக் குறித்ததா?

(சகோதரனை இழந்தபோது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தன்னையே கேட்டுக் கொண்டது)

மனச்சிதைவுக்கு ஆட்பட்ட மகளைப் பராமரித்துவரும் தந்தையின் மனவோட்டத்தின் பதிவு இந்த நூல்.
மூளை சுரப்பிகளின் அதிசெயல்பாட்டால் ஒரு சராசரி வாழ்வை வாழ முடியாத மகளைப் பேணும் ஒரு தந்தையின் கதை இது.
புற்று நோயால் மனைவியை இழந்த பேராசிரியர் அவரின் மகளும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்படுகிறார். இது மனசிதைவுதான் என்பதை அறிவதே பெரும் போராட்டமாய் இருக்கிறது.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனும் அலைக்கழிப்பில்
ஜூலி எனும் தன் மகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெளியே காத்திருக்கும் தகப்பனின் மனதில் எழும் மனவோட்டம் நூல் முழுக்க நம்மையும் இழுத்துக் கொண்டு செல்கிறது.

மனநோய்களிலேயே மிகவும் கொடுமையான ஸ்கிசோஃப்ரீனியா என்கிற மனச்சிதைவு நோய், பதின்வயதுப் பருவத்தில் வெளிப்படத் தொடங்கி, கண்காணிப்பற்ற நிலையில் மேலும் தீவிரப்படுகிறது. மரபியல் ரீதியாக வருகிற பட்சத்தில் அதற்கு முன்பாகவே தொடங்குவதும் உண்டு. எவ்வளவு முன்னதாக அடையாளம் காண்கிறோமோ அவ்வளவுக்கு சிகிச்சையை எளிதாக வகுக்க முடியும். அந்தச் சிகிச்சை குணப்படுத்துவதற்கல்ல, கோளாறைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குத்தான்.

முதல் 14 வரையிலான இயல்கள் கதைசொல்லியின் மகள் ஜூலியாவுக்கு நேர்ந்த மனச்சிதைவை மையமாகக் கொண்டுள்ளவை. மகளுக்கு வாய்த்துப்போன நோயைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட காலதாமதம், மருத்துவ உதவியை நாடிச் சென்றதால் ஏற்பட்ட அனுகூலங்கள், இவ்விஷயங்களை அசைபோட்டு எழுதும்போது ஏற்படும் மனத்தாங்கல், குற்றவுணர்வு, உளவியல் நெருடல்கள், நோய் பற்றிய புரிதலானது எவ்வாறு ஒருவரின் மானுடம் பற்றி ஒருவரை யோசிக்க வைக்கிறது.அவளின் பராமரிப்பை ஏற்க தயாராகும் தந்தைக்குள் எழும் கேள்விகள் அவரின் தேடலையும் விடையையும் தந்து கொண்டே இருக்கிறது.

தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறார் அவருக்கேயுரிய விதத்தில் விடைகளையும் கண்டடைகிறார். ஆய்வுத்தன்மை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உடன் வந்து கொண்டே இருக்கிறது.

நான் வீழ்ந்துவிடக் கூடாது. என்னதான் காயமுற்றாலும், பலவீனப்பட்டுப் போனாலும் கம்பீரத்தோடு நடை பயில வேண்டும் எனக் கங்கணம் செய்து கொள்கிறேன். தொடங்கிய பயணத்தில் தோற்றுவிடக் கூடாது என்று எனக்கு நானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அனுதாபத்துக்குரிய ஆளாக நான் தோற்றமளித்துவிடக் கூடாது, கழிவிரக்கம் என்பது தனக்குத் தானே பெய்துகொள்ளும் நஞ்சு என ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்.

இறிதியில் இவ்வாறு முடிக்கிறார்..

தொலையாத தூரம் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. என்னைத் தேடிக் கண்டடையும் முயற்சியைத் தொடர்கிறேன். அதோடு, ஜூலியா தன் வாழ்வின் பொருளைக் கண்டடையவும் நான் துணை நிற்கவேண்டும். காலமென்னும் வர்மக் கலைஞன் அவளுக்கு இன்னும் என்னென்ன விதித்திருக்கிறானோ, அறியேன். அவளது பசுமையான நினைவுகளில் அசைபோட்டு அனுபவிக்கச் சில நல்ல அனுபவங்களையாவது அவளுக்குத் தந்துவிட வேண்டும். எவ்வளவு சீக்கிரமாய் முடியுமோ, அவ்வளவு.

#ரசித்தவை

*சில நம்பிக்கைகள் எவ்வளவு அழகானவை

*தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, நம்பிக்கையான நட்பிடம் ஒரு சுமையை இறக்கி வைத்த நிவாரணம் கிடைத்தது.

*மூளையில் சுரக்கும் நாளமில்லாச் சுரப்புகளில் ஒன்று டோப்பமைன். நாளமில்லாச் சுரப்புகளின் தனித்தன்மை என்பது, அவற்றின் உற்பத்தியிலும் செயல் இலக்கிலும் வெளிப்படும் துல்லியம். மனித உடலின் இயல்பான இயக்கத்துக்கு இச்சுரப்புகள் இன்றியமையாதவை. டோப்பமைன் சுரப்பின் அளவு குறைந்துபோனால் பார்க்கின்ஸன் கோளாறு உண்டாகிறது.

*கேட்பவனுக்கு இது வெறும் செய்தி; அனுபவிப்பவனுக்கு அல்ல

*சாதித்துவிட்டோம் என்கிற நினைப்பே பல சமயங்களில் நம் பார்வையை மறைத்துவிடுகிறது. 

*இறப்புக்கும் இருப்புக்கும் இடையில் சிறுசிறு தழுவலும் நழுவலும். வாழ்க்கை நெடுக சிறுசிறு விபத்துகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதும், ஒவ்வொன்றிலும் எப்படியோ பெரிய இழப்புகள் இல்லாமல் தப்பித்துக் கொள்வதும் தற்செயலாய்த் தோன்றவில்லை. 

"*மனம் கழிவிரக்கத்தால் துடித்துத் திக்கற்று நின்றது.

*நரை தோன்றுமுன்னே உத்வேகம் கரைந்துவிடுகிறது, எதிலும் சீக்கிரமாய்ச் சலிப்புத் தட்டிவிடுகிறது; காலாவதியான வீசாவை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாய்த் தங்கியிருப்பது போல

*துயரம் எனக்குத் தந்துசென்ற தங்கக் கோப்பை மறதி. 

*உடல் எதார்த்த உலகத்தை எதிர்கொள்ளும் நேரத்தில் மனம் மற்றோர் உலகத்தில் உலவிக் கொண்டிருக்கும் விசித்திர நிலை அது. மனித வாழ்வு தீர்மானங்களின் தொகுப்பு.

*கவலைகளின் மொத்த உருவமாய்த் தெரிகிறேன். கவலைகளும் பயங்களுமே என் முடிவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கை நெடுக அவைதான் என்னை வழிநடத்தி வந்திருக்கின்றன.

*வாழ்வு தேடி ஓடியது ஒரு காலம். பிறகு கிடைத்த வாழ்க்கையைக் காத்துக் கொள்வதற்கு ஓடினேன்.

*நினைவுகளின் சுமையிலிருந்து விடுபட மனிதனின் மனம் போதைப் பொருட்களை நாடுகிறது. நாளையைப் பற்றிய பயங்கள் வலுப்பெற்று, சமயங்களில் உயிரை மாய்த்துக் கொள்ளவும் தூண்டுகிறது

*வாழ்க்கையில் என்னதான் மிச்சம்? கொஞ்சம் சுமை, அந்தச் சுமையின் சுகம்- அவ்வளவும்தான்

*மனிதர்கள் இழப்பின் துக்கத்தை வெளிப்படுத்தியே தீர வேண்டும்; இயல்பு வாழ்க்கைக்கு மீள்வதற்கு அது தேவை.

*நிகழ் துயரம் ஒன்றை நெஞ்சில் சுமந்து நடப்பவனின் மனம் புதிய துயரத்துக்குப் பல விதங்களில் பிரதிவினை ஆற்றும். என் நிலைமை அதுதான். 

*“துயரம் பகாசுர வலிமை வாய்ந்தது. இரையை எதிர்நோக்கிப் புதரில் ஒளிந்திருக்கும் பசித்த சிறுத்தை போல, எதிர்பாராத தருணத்தில் அது உங்களை அடித்து வீழ்த்திவிடப் பார்க்கும்; மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னோக்கி நகருங்கள் தோழர்…”

*மனநல மாற்றுத்திறனாளி அக்கறையாளனாக நான் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் பாதிக்கப்பட்டவரின் புறச்சூழலைப் பராமரிப்பது.

*கடலைப் போலவே, மந்தணங்களின் சேகரமான மனம், சிதைவுறும்போது கடலின் ஆக்ரோஷத்தோடு சில சமயங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது.

நாவலின் பெரும்பலம் வார்த்தைகள். புத்தகம்.முழுக்க அடிக்கோடிட்டு ரூல்ட் நோட் போல ஆகிவிட்டது. தத்துவார்த்த வார்த்தைகளை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.
ஒரே ஒரு ஒன்லைனரில் நாவல் முழுக்க அயர்வின்றி சொல்லாற்றலால் கட்டிப் போட்டுளார்.

ஒரு பத்து நாளாகவே நானும் ஜீலியுடனும் பேராசிருயருடனும் இருந்த உணர்வு.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment