#Reading_Marathon2025
#25RM055
Book No:7/100+
Pages:-227
காதற்கள்
-செளம்யா
அரட்டை கேர்ள் எனும் சௌமியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு முதல் டுவிட்டரில் அவருடைய எழுத்தை வாசித்து வருகிறேன். மிக நுட்பமான அவருடைய பதிவும் ,தமிழின் மொழி விளையாட்டும் அவருக்கு கை வந்த கலையாக இருக்கிறது. இந்த குறு நாவல்கள் இரண்டும் அவருடைய முகநூலில் வெளிவந்து அன்றாடம் பலரின் பாராட்டையும் பெற்றவை.
ஆங்கிலம் பேசுவோரை வியந்து பார்ப்பது அவர் ஆங்கிலம் பேசுவதால் அல்ல.. நமக்குத் தெரிந்த அத்தனை சிறிய வார்த்தைகளையும் எவ்வாறு அழகாய் கோர்த்து பேசுகிறார் என வியப்பாய் இருக்கும். அதே போல் தான் இந் நூலாசிரியரும் கேட்ட கதை தெரிந்த வார்த்தைகள் எவ்வாறு நுட்பமாய் கோர்த்து நமக்கு அழகிய மாலையை தருகிறார் என்பதும் இவருடைய எழுத்தை பார்த்து எப்போதும் வியப்பது ஆகும்.
பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் எனும் பொருளில் இவர் தொட்டிருக்கும் கதைக்களம் சற்று பிசகினாலும் விமர்சனத்திறகு உள்ளாக நேரிடலாம். ஆனாலும் தன் எழுத்து வன்மையால்
அதனை சமப்படுத்தி ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்.
#கூர் ஏரி
காதல் என்பது எளிதான உணர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு ஒழுக்கமும் பொறுப்பும் கலந்த உரிமை என்பதை இந் நாவல் பேசுகிறது. டீக்கடை நடத்தும் ராமனின் மனைவி சரஸ்வதி அவனைவிட 15 வயது இளையவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சந்தேக புத்தி உள்ள ராமன், மனைவியை சந்தேகப்படுவதால் அவளும் கணவரின் நிலை அறிந்து கவனமுடன் இருக்கிறார்.அவர்களின் வாழ்வில் சரஸ்வதி விட ஆறு வயது இளைய மெக்கானிக் ஷாப் இளைஞன் புஷ்பராஜ் சரஸ்வதியின் மீது காதல் கொள்கிறான். இது வரம்பு மீறிய காதலை நியாயப்படுத்தும் முயற்சி அல்ல, அவர்களை அறியும் முயற்சியே என்பதை ஆசிரியர் முன்னுரையிலேயே சொல்லி விடுவதால் நாமும் கதையில் ஒன்றி பயணிக்க முடிகிறது.
புஷ்பராஜின் காதலை ஏற்றும் ஏற்க முடியாமலும் சரஸ்வதி தவிக்கிறாள். புஷ்பராஜ் எதற்கும் துணிந்தவனாக மாறிவிடுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த குறுநாவலின் கதை. 14 பகுதிக்குள் இந்த குறுநாவல் வேகமாய் தன்னுடைய வார்த்தை ஜாலத்தை காட்டிக் கொண்டு பறக்கிறது.
கதாபாத்திரங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளில் காதலின் வலிமை, பிரிவின் வேதனை, மற்றும் மனதின் நுட்பமான போராட்டங்கள் செழுமையாக அலசுகிறது. இறுதியில் வரும் ட்விஸ்ட் அடுத்த கதைக்கான ஆரம்பமாகவும் அமைகிறது.
#காதற்கள்
கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு வேலை தேடி வரும் இந்திராணியின் அறிமுகத்திலிருந்து இந்த குறு நாவல் துவங்குகிறது. மறுநாள் வந்து பார் என மேலாளர் சொன்னவுடன் வீட்டிற்கு போகிறாள். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை எண்ணி பார்க்கிறாள். இளமை முதலே வேலைக்குச் செல்லும் இந்திராணி திருமணமானவுடன் வேலைக்கே செல்லாமல் இல்லத்தரசியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளின் ஆசை. அவள் பணி செய்யும் துணிக்கடையில் அறிமுகமாகும் அழகப்பனுடன் அவளுக்கு சூழ்நிலையால் காதல் மலர்கிறது என்பதை அழகாக அந்த இடத்தில் சொல்லி இருப்பார்.
அதன் பிறகு காதல் திருமணம் செய்து கொண்டு 14 ஆண்டுகள் யாழினி என்னும் மகளுடன் இயல்பாக செல்லும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அந்த திருப்பத்தினால் இந்திராணிக்கு என்ன ஆனது இந்திராணி எவ்வாறு குடும்பத்தை நடத்துகிறாள், இந்திராணியின் மனதில் ஏற்படும் சஞ்சலம் என்ன, அதற்கு தீர்வு என்ன என்பதுதான் காதற்கள் கதை.
இந்நாவலில் யாழினி சந்தோஷ் இரண்டு கதாபாத்திரங்களும் இந்திராணிக்கு பக்க பலமாக இருக்கின்றன. அவர்களின் அன்பின் வழியே இந்திராணி உணர்வது பெரும் வாழ்க்கை தரிசனமாக ஆசிரியர் கூறுகிறார். 'எங்கேயும் தேங்காதிங்க எனும் சந்தோஷம் குரல் காதில் ஒலித்த போது, கற்றுத் தருவது காதல் மட்டுமல்ல காதலனும் தான்'என நினைத்து சிரிக்கும் இந்திராணி.. புதிய வாழ்க்கை புதிய அனுபவம் அவள் கண்களில் பிரகாசிப்பதை நாம் எழுத்துக்களின் மூலம் காண முடிகிறது.
எழுத்தில் விவரிக்கும்..மொழி மிக நேர்த்தியானது. குறிப்பாக காதல் பற்றிய உள்ளார்ந்த கவிதைமிகு வரிகள், உரையாடல்கள் வாசகர்களின் மனதில் நிற்கும் படி உள்ளது.
*ஒவ்வொரு முறை மனம் வெறுக்கும் போதும் அவன் தன்னிடம் அன்பாய் இருந்த தருணங்களை வலுக்கட்டாயமாக நினைவுக்கு கொணர்ந்து தேற்றிக் கொள்வாள்.
*ஒருமைல கூப்பிடறதுதான் நெருக்கத்தோட முதல் படி.
*என்ன திடீர்னு இந்த பக்கம் காத்து வீசுது?
உன் பக்கமாக இருந்துடனும்னு தான்
*தனக்கான பெண்ணின் மகிழ்ச்சிக்கு காரணம் தெரியவில்லை என்றாலோ தான் காரணம் இல்லை என்றாலோ ஆண் அஞ்சுகிறான்.
*அழுகையை விட சிறந்த ஆறுதல் எதுவும் இல்லை
காதல் என்பது ஒரு தனிநபரின் உரிமை என்பதையும், அதற்குள் இருக்கும் சமூக தடைகள் மற்றும் சவால்களையும் புத்தகம் கவனமாக விவரிக்கிறது.காதல், துயரம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை மிக ஆழமாக கையாளும் விதம் வாசகர்களை புனைவுலகத்தில் மூழ்கடிக்கிறது.
காதலின் மிக நுணுக்கமான தருணங்களையும், வாழ்க்கையின் சிக்கலான உண்மைகளையும் எளிமையாகவும் அழகாகவும் விவரிக்கிறார்.சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், அதன் மனமூட்டம் அனைத்தையும் சரி செய்கிறது.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment