*தமிழ் ஹைக்கூ 1⃣0⃣1⃣ ஆண்டு*
பகுதி - 26
ஹைக்கூ படைப்பாக்கத்தில் உள்ள 13 மனநிலைகளில் இன்று 6 வது மனநிலை..
முரண்கள் ..
நிலையாமைக்குள் நிலைத்தவற்றை தேடுதல் ஸென் ஆகும்.
உலகில் எல்லாம் மாறுகின்றன. ஆனால் உலகம் மாறாமல் உள்ளது..
இத்தகைய தத்துவ தேடல்களின் முரண்கள் ஸென்னை ஆட்கொள்ள அதன் விளைவாக ஹைக்கூவிலும் முரண்கள் நாற்காலி போட்டு உட்கார்ந்தன...
சைகோ பாடுவார் :
எல்லாவற்றையும் துறந்தபின்
இன்னும் உள்ளது இதயம்
பூ வண்ணம் தீட்டியதாய்..
முறவு மேற்கொண்டாலும் இதயத்தை துறக்க முடியாத வாழ்வியல் முரண் கவிதையில் வெளிப்பட்டது..
பழமையும், புதுமையும் காட்டும் கவிதையை ஒனிட்சா படைக்கிறார் :
மகத்தான புத்தாண்டுக் காலை
பைன் மரத்தினூடே வரும்
பழங்கால காற்றின் ஓசை
" காற்றடிக்கும். நிலவு அசைவதில்லை " - பிரபஞ்ச முரணை வெளிப்படுத்தும் ஸென் உரை இது..
பாஷோ சொல்வார் :
கலந்து ஒலிக்கின்றன
மீன் விற்பவளின் குரலும்
குயிலின் இசையும்
ஷிகியின் கவிதையை கேளுங்களேன்..
வண்ண விசிறி வியாபாரி
காற்றை சுமந்து செல்கிறான்
மூச்சுத் திணறும் புழுக்கம்
ஆங்கில ஹைக்கூ கவிதைகளிலும் முரண் நிறைந்துள்ளது..
மெல்லிய மழை -
புதிய கல்லறை
பழசாய் தெரியும்.
- வில்லியம் கல்லென்
எரிந்து மடியும் இலைகள்
எழுந்து நிற்கும்
புகையின் நிழல்
- பால் . ஓ. வில்லியம்ஸ்
தொடுவான விளிம்பில்
மேல்நோக்கி விரையும்
நட்சத்திரம் !
- ஜெர்ரி கில்பிரைட்
இப்படி முரண் என்பது தத்துவ நிலையிலும், கவிதை அழகிலும் ஹைக்கூவிற்கு அழகு சேர்க்கிறது..
நாளை..
நகைச்சுவை..
*பெருநதி 2018 அக்டோபர் 16 வரை உங்களை நனைக்கும்*
ஸ்ரீதர்
🍀 திண்டுக்கல் 🍀
No comments:
Post a Comment