[05/11, 9:41 a.m.] SATHIS: கண்ணாடிச்சில்லு
கைதவறி உடைந்துவிட்டது
பெருக்கினாலும் முழுவதுமாக சுத்தமாகாது எனத் தெரிகிறது
சனியன் சில்லு சில்லாய் உடைந்திருக்கிறது
சர்க்கரையின் துகள்களைப் போல
தரையில் பரவியிருக்கிறது.
துடைத்தே ஆக வேண்டும்
பசுஞ்சாணமிருந்தால் துடைத்தெடுக்கலாம் என்பாள் அம்மா
எங்கே செல்வது பசுவிற்கும் சாணத்திற்கும்
ஈரத்துணியால் ஏலுமென பொறுமையாய் திரட்டுகிறேன்
எனினும்
வழியத்தான் செய்கிறது உன் வியர்வை வாசமொத்த குருதி
- தேவசீமா
மனப்பூட்டைத் திறக்கும் சாவி
மறைந்திருந்த வடுக்களை
மறுபடியும் கிளறி புண்ணாக்கிவிடுகிறது
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
அசாதாரணமாக நிகழ்ந்துவிட்ட
பிரிவின் நிமித்தம்
பாராதிருந்த நண்பனின் சந்திப்பு.
சுழித்தோடும் ஆற்றின்
சுழலொன்றில் சிக்கிக்கொண்ட துரும்பென
வெளியேற இயலாமல்
திணறித் தவிக்கின்றன குவியலாய்
தொண்டைக்குள் வார்த்தைகள்.
வலைக்குள் சிக்கினாலும்
வாழ்தல் வேண்டி துள்ளலோடு
தப்பிக்க முயலும் மீனாக
மனக்கசப்பிலிருந்து விடுபட்டுவிட
இதழோரம் அரும்பத் துடிக்கிறது ஆவலோடு
பழைய சிநேகப் புன்னகை.
பால் கிரண நிலவை
பார்வையிலிருந்து மறைக்கும்
மேகத்திரையை லாகவமாய் விலக்கும்
அரூபக் காற்றென
பூசலைத் துடைக்கத் துவங்குகிறது
முகிழ்க்கும் மெல்லிய விசும்பல்.
துருவேறிய மனப்பூட்டைத் திறக்கும்
சாவியாய் வழிகிறது
கனத்த மௌனம் சுமந்த கண்ணீர்.
- பாப்பனப்பட்டு வ.முருகன்
No comments:
Post a Comment