Friday, 25 June 2021

வதந்திகள் பரவுமிடம்..! - 2021 டிஜிட்டல் செய்திகள் ரிப்போர்ட் #MyVikatan


பஞ்சாயத்து டி.வி வந்தபோது மக்களை ஊர் ஊராக பிரித்தது வீட்டிற்குள் டிவி வந்த போது மக்களை குடும்பம் குடும்பமாக பிரித்தது மொபைல் போன் வந்த பிறகு மக்களை தனிமனிதர்களாக பிரித்தது.

உன் கையில் மொபைலா? இல்லை மொபைலின் கையில் நீயா? எனக் கேட்கும் அளவிற்கு மொபைல் போனிற்கு அடிமையாகிவிட்டோம். பதினைந்து நிமிடத்திற்கு மேல் மொபைல் பார்க்காமல் இருந்தால் நீங்கள் மொபைல் போனிற்கு இன்னும் அடிமையாகவில்லை என அர்த்தம் என்று நவீன ஆய்வு சொல்கிறது. மற்ற நாட்களில் வேலைக்கு நடுவில் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். தற்போது கொரொனா காலகட்டத்தில் தனிமையில் இருப்பதால் பயன்படுத்துவதே வேலை என்றாகிவிட்டது. பிரபல ராய்ட்டர்ஸ் நிறுனத்தின் 2021ம் ஆண்டிற்கான டிஜிட்டல் செய்தி அறிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் உலகளாவிய அளவில் மொபைல் பயன்பாடும், சமூக ஊடகங்களின் தாக்கமும் குறித்த அறிக்கைவெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் சுருக்கத்தைப் பார்க்கலாம்


#டிஜிட்டல் செய்தி அறிக்கை 2021


ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது போல இந்த ஆண்டு டிஜிட்டல் செய்தி அறிக்கை ஜூன் 23 புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த கணக்கெடுப்பு 46 நாடுகளில் 92,000- க்கும் மேற்பட்டு பதிலளித்தவர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பாகும். இந்த ஆண்டு இதில் இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நைஜீரியா, கொலம்பியா மற்றும் பெரு ஆகிய ஆறு புதிய நாடுகள் இணைக்கப்பட்டன.

2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தாக்கிய காலக்கட்டத்திலிருந்து செய்தி ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாய் இருந்தது. முதலில் செய்தித்தாள்கள் மீது தொற்று அச்சம் இருந்ததால் செய்தித்தாள்களின் விற்பனை சரிந்தது. இந்த சவாலை எதிர்கொண்ட செய்தித்தாள்கள் விழிப்புணர்வூட்டி மக்களிடம் கொண்டு சேர்த்தன.

வாசிப்பாளர்கள் துல்லியமான நம்பகத்தனமான செய்திகளை நாட அச்சு ஊடகங்களையே அதிகம் நம்பினர். இதில் அதிகபட்சமாக பின்லாந்தில் 65% பேரும் அமெரிக்காவில் 29% பேரும் நாடினர். செய்தித்தாள்களை பின்னுக்கு தள்ளி பல நாடுகளில் தொலைக்காட்சிகள் முன்னணி வகித்தன. செய்திகளை பகிர்வதில் வாட்ஸ் அப், டெலிகிராமில் அதிகம் செய்திகள் பரவின. குறிப்பாக தவறான செய்திகளை பரப்பியதிலும் சமூக ஊடகங்கள் முன்னணி வகித்தன.இதில் அதிகபட்சமாக பிரேசிலில் 82%ம், குறைவாக ஜெர்மனியில் 37%ம் பரப்பினர். கொரொனாவுக்கு விழிப்புணர்வு தருகிறேன் என நினைத்து பலர் தவறான தகவல்களை பரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


#உலகளாவிய அளவில் ஆய்வு

உலகளாவிய அளவில் இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்கள்.

*கொரோனா காலகட்டம் எல்லாத் துறைகளையும் போல அச்சுத்துறையையும் அச்சுறுத்தியது.

விளம்பரதாரர் மற்றும் வாசகர்கள் சந்தா குறைந்தது. இதனையும் எதிர்கொண்டு செய்திகளை மக்களிடம் சேர்த்தனர்.

*தொற்றுக் காலத்தில் வீட்டிலேயே இருந்ததால் அச்சு ஊடகங்களை விட தொலைகாட்சிகள் வலுவாக செயல்பட்டன. இதனால் டிஜிட்டல் யுகத்தை நோக்கி மக்களைக் கொண்டு சென்றது.

*மக்கள் ஒரு சார்பு செய்திகளை விரும்பாமல்.. நடுத்தர நிலையை பிரதிபலிக்கும் செய்திகளை இக்காலகட்டத்தில் அதிகம் விரும்பினர்.


*பெரும்பாலான நாடுகளில் தவறான தகவல்களை பேஸ்புக்கில் மக்கள் அதிகம் பகிர்ந்தனர். பிரேசில் மற்றும் இந்தோனேசியா நாடுகளில் வாட்ஸ்அப்பில் அதிகம் பகிர்ந்துள்ளனர்.


*பிரதான செய்தி நிறுவனங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இரண்டிலும் செய்திகளை பதிவிட்டு அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.


*18முதல் 24 வயதுடையோர் சமூக ஊடகங்களில் செய்திகளை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வமின்றி இருந்தனர்.


*இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் டிவி சேனல்களின் செல்வாக்கு இந்த ஊரடங்கு காலத்தில் அதிகரித்திருந்தது.


*ஸ்மார்ட் போன்களின் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வது 2020ம் ஆண்டு 69% ஆகவும் தற்போது 2021ம் ஆண்டு 73% ஆக உயர்ந்துள்ளது.

*இணையத்தை பொழுதுபோக்கு மற்றும் கவனச்சிதறலுக்காக தழுவி, பின்னர் தங்கள் அரசியல் கோபத்தை வெளிப்படுத்த அதிகம் பயன்படுத்தினர்.

*ஒவ்வொரு செய்தி நிறுவனமும் குறிப்பிட்ட சதவீத மக்களின் நம்பிக்கையை பெறவும் தக்க வைக்கவும் செய்திகளை நல்ல முறையில் தந்தன

இந்த அறிக்கையில் ஒவ்வொரு நாட்டினையும் வகைப்படுத்தி தெளிவான படங்களின் மூலம் குறிப்பிட்டிருந்தனர்.


#இந்தியாவில்


இந்தியாவில் செய்திகளை தெரிந்து கொள்ளவும்,பகிரவும் மக்கள் ஆர்வமுடன் இருந்தனர். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தொலைக்காட்சிகளை பின்னுக்கு தள்ளி வாட்ஸ் அப்,யூ ட்யூப், பேஸ்புக் செய்திகளே அதிகம் பகிரப்பட்டு பார்க்கப்பட்டன். உலகளாவிய கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மொபைல் போனுக்கான சந்தை கடந்த ஆண்டு வலுவாக இருந்தது.

இங்கு 73% பேர் ஸ்மார்ட் போன்களின் செய்திகளை வாட்ஸ் அப், யூ ட்யூப் மூலம் பார்க்கின்றனர்.


37% பேர் கணினியை பயன்படுத்தினாலும் ஒப்பீட்டளவில் கைக்கு அடக்கமான எங்கேயும் எடுத்துச்செல்லும் வகையில் இருப்பதால் ஸ்மார்ட் போன்களே முன்னணியில் இருக்கின்றன. தவறான தகவல்களை இந்தியாவிலும் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலமே அதிகம் பரவின.

செய்திச்சேனல்கள் தந்த தகவல்களை விட செய்தித்தாள்கள் மீது இந்தியர்கள் அதிக நம்பகத்தன்மை வைத்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. செய்திகளை தொலைகாட்சியின் மூலம் 50% பேரும், செய்தித்தாள் மூலம் 59% பேரும், ஆன்லைனில் 82% பேரும், சமூக வலைதளங்களில் 63% பேரும் பார்ப்பதாய் கருத்து தெரிவித்துள்ளனர். செய்திச் சேனல்கள் செய்திகளுக்கான கவரேஜ் மற்றும் செய்தியாக்கத்தில் மக்களிடன் குறைந்த நம்பிக்கையையே பெற்றிருப்பதாய் கூறுகிறது


ஊரடங்கு, பொருளாதார நிலை பாதிப்பால் செய்தித்தாள்களின் விளம்பர பிரிவில் அரசு மற்றும் வணிக விளபரங்கள் இல்லாததால் நிதிச்சுமை கூடியது. பல வார இதழ்கள் நிறுத்தப்பட்டது. நாளிதழ்களும் நிலைமையை சமாளிக்க விலை ஏற்றம், பக்கங்கள் குறைப்பு நடவடிக்கைளை எடுத்தன.

இந்தியவில் 24*7 செய்திச் சேனல்கள் முக்கியச்செய்தி மற்றும் விவாத மேடையில் செய்திகளை சிதைத்து பரபரப்பை ஏற்படுத்துவதாக இந்த அறிக்கை சொல்கிறது தொலைக்காட்சிக்கான டி ஆர்.பி ரேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளாகின.மொபைல் வந்த பிறகு கேட்பாறற்று போய்விட்டன டி.வி ரிமோட்டுகள் எனும் நிலை ஆகின.


OTT தளங்கள் போன்றவை மொபைல் போனின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களை குறிப்பாக இளைஞர்களை அதிகளவில் ஈர்த்துள்ளது.சமூக ஊடகங்களில் வாட்ஸ் அப்பில் செய்திகளை பகிர 53%ம், மற்ற உபயோகங்களுக்கு 80% பயன்படுத்தி பெரும்பான்மை வகிக்கிறது. வாட்ஸ் அப்பை தொடர்ந்து யூ ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் அடுத்தடுத்து உள்ளது. குறைவான உபயோகத்தில் டெலிகிராம் பயன்படுத்துவோர் உள்ளனர்.


முன்பெல்லாம் சமூக ஊடகங்களை பயன்படுத்தினால் கெட்டு விடுவாய் என பயமுறுத்தினர்.ஆனால் இன்று எல்லாரும் தங்கள் விருப்பப்படி பயன்படுத்தி சமூக ஊடகங்களையே கெடுத்துவிட்டனர். செய்திகளின் உண்மைத்தன்மை ஆராயமல் திட்டமிட்ட தூற்றுதலுடன் முதலில் பகிர்கிறார்கள்.பின்னர் வருவோரெல்லாம் செய்தியை சீர்தூக்கிப் பாராமல் பகிர்கின்றனர். பிறகு அதுவே உண்மையென மக்கள் மனதில் பதிகிறது. ஒரு பரப்பரப்பு செய்தியின் வாழ்நாள் ஐந்து நிமிடம் மட்டுமே. அடுத்த செய்தி வந்தவுடன் இதனை கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.

செய்திகளை அடுத்து அடுத்து மெருகேற்றும் போது சில இடங்களில் நம்பகமற்ற தகவலும் உடன் பயணித்துவிடுகிறது. ஆகவே உண்மைச் செய்திகளை பகிர்வதிலேயே முழு முயற்சி கொள்வோம். செய்தி நிறுவனங்களை போல் தனிநபரும் செய்தியின் உண்மையையும் உறுதித்தன்மையையும் பெற்ற பின்னரே பகிர வேண்டும். தனி நபர் தாக்குதல் அதிகரிக்கும் சமூக வலைதளத்தில் கண்ணியத்துடன் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். இது தனிநபரின் கடமையும் கூட.


புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் இறக்கும் தருவாயில்.. அமெரிக்காவின் செய்தி ஊடகங்கள் அவருடைய மரணச் செய்தியை யார் முதலில் வெளியிடுவது என்ற போட்டா போட்டி நிலவியது. ஒரு பத்திரிக்கையாளர் அவர் இறக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்தது. இதை அறிந்த மார்க் ட்வைன் ஓர் அறிக்கை விட்டார். 'நான் இறந்து போன செய்தி மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது' என்று.

"செய்திகளை யாரும் முந்தித் தர வேண்டாம். செய்தியாகும் போது தருக.அ துவே போதும்" எனும் மகுடேசுவரனின் வரி நினைவுக்கு வருகிறது.


-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment