கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால்.. பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருந்த மனிதர்களும், பரபரப்பாய் இயங்கிய வாகனங்களும் ஜென் நிலைக்கு திரும்பியுள்ளன. இதில் தேவைக்கென வாங்கி.. தெருவில் நிற்கும் கார்களை பார்க்கும் போதெல்லாம் வாழ்ந்து கெட்ட மனிதரைப் போல தோற்றமளிக்கும்.
நம் குடும்ப உறுப்பினர் போல் உள்ள காரை கவனிக்க வேண்டியதும் நம் கடமையாகும். வீட்டின் முன் நிற்கும் கார் உரிமையாளர் கூட தினசரி பார்க்க வாய்ப்புள்ளது. கார் ஷெட்டில் நிறுத்தியுள்ளோர் நிலைமை இன்னும் மோசம். பக்கத்து வீட்டு நண்பர் அவசர தேவைக்கு சில மாதங்களுக்குப் பிறகு திடீரென கார் எடுத்துள்ளார். வண்டி ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிடவே விதியை நொந்து கொண்டு வாடகை காரில் ஊருக்கு சென்ற நிகழ்வுகளும் நடந்ததுண்டு.
#கார் பராமரிப்பு
இந்த ஊரடங்கு காலத்தில் கார்களை அடிக்கடி துடைத்து.. காரினுள் குப்பைகள் தங்காமல் பார்த்துக் கொள்வது கார் உரிமையாளரின் தலையாய கடமையாகும். நீண்ட நாள் ஒரே இடத்தில் நிற்பதால் கார்களை 15 நிமிடங்களுக்கு ஆன் செய்து வைக்க வேண்டும். அப்போது ஏ.சி -யையும் ஆன் செய்து ஓடவிடலாம். 15 நிமிடத்துக்குப் பின் கார்களை சிறிது தூரம் முன்னும் பின்னும் இயக்க வேண்டும். ஆக்சிலேட்டர், க்ளட்ச், ப்ரேக், ஹேண்ட் பிரேக் அனைத்தும் வேலை செய்கின்றனவா என சரிபார்க்க வேண்டும். இவ்வாறு இரு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ இப்படி செய்துபார்க்க வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் நிற்பது உறுதி என்று தெரிந்தால் பேட்டரியை துண்டித்துக் கொள்ளலாம் என்கின்றனர் மோட்டார் வாகன வல்லுநர்கள். இதில் பாசிட்டிவ்,நெகட்டிவ் ஒயர்களில் நெகட்டிவ் ஒயரை மட்டும் கழட்டி விட்டால் போதுமானது. பாசிட்டிவ் ஒயர் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஒயரை கழட்டி விட்டாலே வாகனத்திற்குள் செல்லும் பவரை நிறுத்திவிடலாம்.
மேலும் பவர் ஜன்னல்கள், ஏர் கண்டிஷனர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட காரின் மின்னணு செயல்பாடுகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை காரை தெருவிற்குள் அல்லது பார்க்கிங் ஏரியாவில் ஓட்டி பார்ப்பது நல்லது.இதனால் காரின் முக்கிய பாகங்கள் சீராக இயங்குகின்றவா என்பதை அறியலாம். பிரேக் டிஸ்க்குகள் மற்றும் காலிபர்ஸ் போன்ற பகுதிகள் துருப்பிடிப்பதை தவிர்க்கலாம்
ஒரே இடத்தில் கார் நின்று கொண்டிருப்பதால் டயர்களில் உள்ள காற்றை சரிபார்த்தல் மிகவும் அவசியம். கார் இயங்காமல் இருந்தாலும் டயர்கள் காற்றை இழக்கக்கூடும். மேலும் காரின் எடை டயரில் இருந்து காற்று வெளியேற காரணமாகிறது. அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் அல்லது ஒரு டயர் பிரஷர் கேஜை காற்று அழுத்த பம்புடன் சேர்த்து சரியான அளவில் நிரப்ப சொல்கிறார்கள். பரிந்துரைக்கப்பட்ட 30 முதல் 35 பிஎஸ்ஐ வரை இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திற்கும் இது மாறும். ஓட்டுநர் கதவில் காற்றழுத்தம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் படி சரிபார்த்துக் கொள்ளலாம்.
தெருவில், திறந்த வெளியில் கார் நிறுத்தியிருந்தால் அது எலிகளுக்கு கொண்டாட்டம். எனவே இதிலிருந்து பாதுகாக்க வழக்கம்போல் நாட்டுப்புகையிலை கட்டவேண்டும். அதுவும் 5 வாரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். வீட்டில் பார்க்கிங் இருந்தால் தரையில் பினாயில் இட்டு கழுவினால் எலி வராது என்கிறார்கள். எலி வலைகள், எலி விரட்டும் ஸ்ப்ரே மூலம் எலிப் பிரச்சனையிலிருந்து பாதுகாக்கலாம்.நாட்கணக்கில் காரை திறந்து பார்க்காமல் இருப்பதை விட அவ்வப்போது காரின் நலன் கருதி சோதனையிடலாம்.கார் கண்ணாடிகளை நிச்சயம் மூடி வைக்க வேண்டும்.
உங்கள் கார் செங்குத்தான மேற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தால் ஹேண்ட்பிரேக்கைப் பயன்படுத்தவும்.சமதளப்பரப்பில்
நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நிற்கும் என்றால் ஹேண்ட் பிரேக் போட்டு நிறுத்துவதை தவிர்க்கலாம்.
அதற்கு பதிலாக முதல் கியரில் நிறுத்தி வைத்து கூடுதல் பாதுகாப்பாக டயருக்கு கீழ் கட்டைகள், கற்களை வைக்கலாம். டயர் ஸ்டாப்பரை பயன்படுத்தலாம்.
காரை வெயிலில் நிறுத்தாதீர்கள். ஏனெனில் வெயில் பட்டால் கார் கண்ணாடிகள் தன்மையயை இழக்கக்கூடும். உங்கள் இல்லத்தில் கார் நிறுத்துமிடம் இல்லையென்றால், உங்கள் கார் தொடர்ந்து சூரிய ஒளியில் இல்லாமல் மர நிழலில் நிறுத்தி வைத்திருக்க பாருங்கள். தென்னை மரங்கள் போன்ற கார் சேதாரமாகும் மரத்தின் அடியில் நிறுத்துவதை தவிர்க்கவும்.
*பேட்டரியில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் அளவை சரிபார்க்கவும். தண்ணீரின் அளவு அதில் உள்ள அதிகபட்ச குறியீடு வரை நிரப்ப வேண்டும்.
மினிமம் அளவிற்கு கீழ் செல்லக்கூடாது.
*சீரான இடைவெளியில் என்ஜினை இயக்கினால் தான் பேட்டரியில் உள்ள மின்சக்தி குறையாமல் இருக்கும்.
*கார் ஸ்டார்ட் செய்தவுடன் முழு பலத்தையும் கொடுத்து ஆக்சிலேட்டரை இயக்காமல் மெதுவாக இயக்க வேண்டும்
*நீண்ட காலம் காரை பயன்படுத்தாமல் இருக்கும் சூழல் வந்தால் பேட்டரியின் பாசிட்டிவ், நெகட்டிவ் வயர்களை கழற்றி விடலாம்.இதனால் கார் பேட்டரி இழப்பு தவிர்க்கப்படும். ஊர் திரும்பியவுடன் பேட்டரியில் இணைத்து பயன்படுத்தலாம்.
*காரை வெயிலில் நிறுத்தும் போது முன்புற கண்ணாடி, வைப்பர் பிளேடுக்கு இடையில் 'தெர்மோ கூல்' வைக்கலாம் அல்லது வீட்டில் நிறுத்தியிருந்தால் வைப்பரை நிறுத்தி வைக்கலாம்.
*வெயிலில் நிறுத்திய காரை எடுக்கும் போது கார் கதவுகளை திறந்து விட்டு வெப்ப காற்று வெளியேறிய பின் ஏறி அமருங்கள்.
*கார் நிறுத்தி இயக்கும் போது தேவையில்லாத சத்தம் வருகிறதா, ஏதாவது ஒயர்கள் எரிவது போன்ற வாசனை வருகிறதா என கவனிக்க வேண்டும்.அவ்வாறு இருப்பின் மெக்கானிக் உதவியை நாடலாம்.
*கார் இயங்காதபோது காரினுள் விளக்கை எரியவிடுவது, கார் ஸ்டீரியோவில் பாட்டு கேட்பது போன்றவற்றை தவிர்த்தால் பேட்டரியின் ஆயுள் கூடும்.
*சம தளத்தில் காரை நிறுத்தி 'இன்ஜின் ஆயில்' சரியான அளவுக்கு இருக்கிறதா என்று பரிசோதித்து.. தேவையிருப்பின் நாமே ஆயிலை மாற்றலாம்.புதிய வாகனங்களில் சிந்தடிக் ஆயில் இருப்பதால் சர்வீஸ் விடும்போது சரிபார்த்து மாற்றலாம்.
*கீழ்நோக்கி நிறுத்தினாலும், மேல்நோக்கி நிறுத்தினாலும் வாகனத்தை தலைகீழ் கியரில் வைத்திருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.அதாவது வாகனம் பின்னோக்கி செல்லும் நிலை இருந்தால் முதல் கியரிலும், முன்னோக்கி செல்லும் நிலையிருந்தால் ரிவர்ஸ் கியாரிலும் நிறுத்தியிருக்க வேண்டும்
*கார் ஷாம்பு, தண்ணீர் மற்றும் மைக்ரோஃபைபர் துணி ஆகியவற்றினால் தந்தை மகற்காற்றும் உதவிபோல காரை சுத்தப்படுத்தி காருக்கு உதவ வேண்டும்.
*மெல்லிய துணியில் சானிடைசரை நனைத்து.. கியர், ஸ்டேரிங், பவர் விண்டோ என கைபடும் இடங்களிலெல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.
*இந்த ஊரடங்கு காலத்தில் நம்மைத் தவிர பிறர் நம் வாகனத்தை பயன்படுத்துவதாய் இருந்தால் use and throw- gear cover, seat cover, steering cover இருக்கிறது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசிவிடலாம். அச்சவுணர்வின்றி வாகனத்தை இயக்கலாம்
இவ்வாறு காரை நாம் பராமரித்தால் ஊரடங்கு முடிந்தவுடன் நாம் பணிக்கு செல்லவும், வெளி வேலையாக வெளியே செல்லும் போதும் கார் நம்மை கைவிடாது. இல்லையெனில் சேமித்த பணத்தையெல்லாம் வாகனங்களுக்கு செலவிட நேரிடலாம். உறவுகளைப் போலவே வாகனங்களையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே ஊரடங்கு நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம்.
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment