எத்தனை தேர்தல்கள் நாம் நடத்தியிருக்கிறோம் என்பதைக் கொண்டு எதிர்காலச் சந்ததியினர் நம்மை எடைபோடப் போவதில்லை. எத்தனை முன்னேற்றத்தை நாம் அடைந்திருக்கிறோம் என்பதைக் கொண்டுதான்சஞ்சய் காந்தி
இந்திராவின் மனசாட்சியாகவும், இந்தியாவின் அடுத்த அரசியல் தலைவராகவும் மிளிர இருந்தவர் சஞ்சய் காந்தி. குறைவாக படித்திருந்தாலும் தாயிடம் அரசியல் கற்றதுடன் இறுதிவரை இந்திராவின் ஊன்றுகோலாக இருந்தவர். எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் அப்போதைய கவனிக்கத்தகுந்த ஆளுமையாக இருந்தார். குடும்பத்தில் அண்ணன் ராஜிவ் காந்திக்கு நேர் எதிரான தம்பி இவர். படிப்பில் சோபிக்கத் தவறினாலும் இப்போதிருக்கும் பிள்ளைகள் போல கார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மீதுதான் கொள்ளைப் பிரியம் இருந்தது. எந்தப் பொருளையும் பிரித்து மாட்டும் டெக்னிக்கல் மூளை.
குடும்பத்தில் மற்றவர்களைப் போல் டூன் பள்ளியில் படித்தாலும், அங்கு படிக்க பிடிக்காததால் டெல்லி கொலம்பஸ் பள்ளிக்கு மாறினார், பள்ளி வாழ்க்கை இவருக்கு சீக்கிரம் வெறுத்தது. தன் 14ம் வயதில் தந்தையை இழந்த போது பொறுப்பு கூடியது.
கார்களின் மீதிருந்த காதலால் இங்கிலாந்தில் க்ரூ என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு இரு ஆண்டுகள் பணியின் போது அங்கும் வேகமாய் கார் ஓட்டி கண்டிக்கப்பட்டார். அதன் பின் பாதிப்படிப்பிலேயே இடைநின்று நாடு திரும்பி தாய்க்கு உதவியாக அரசியலில் நிழலாய் வந்தார். எந்த பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படாத போதும் எல்லா முடிவுகளுக்கு பின்னாலும் இருந்தார். நெருக்கடி நிலை கால கட்டத்தில் இந்திராவை அறிந்தவர்கள், நிச்சயம் சஞ்சய் காந்தியையும் அறிவார்கள். தாயின் ஆணைக்கு கட்டுப்பட்டு தீரத்துடன் அதனை செயல்படுத்துபவராக இருந்தார். எடுத்துக்காட்டாக இவரின் அரசியல் தலையீடுகளை பொறுக்க முடியாமல் அப்போதைய அமைச்சர் ஐ.கே.குஜ்ரால் பதவி விலகியதை கூறுவார்கள்.
#மாருதி கார்
ஏழைகளின் ஆடி கார் என இன்றளவும் எளிய மக்கள் புழங்கும் மாருதி கார் சஞ்சய் காந்தியின் கனவுத்திட்டம் ஆகும். குறைந்த விலையில் கார் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் சரியானதாக இருந்தது. அதற்கான பயிற்சிக்காகவே அப்போது இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டார். பாதியிலேயே தாயகம் திரும்பி அரசியலில் ஈடுபட்டாலும் குறைந்த விலையில் கார் தயாரிக்கும் கனவு மாருதி மூலம் இந்தியாவில் நனவானது. மத்திய அரசு சிறியரக கார்கள் தயாரிக்க சஞ்சயின் மாருதி நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததில் அரசியல் சர்ச்சையானது.
ஹரியானா முதல்வர் பன்சிலால் சலுகை விலையில் ராணுவ தளத்துக்கு அருகாமையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் கார் தயாரிக்க இடம் கொடுத்ததும், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் பெருந்தொகை கடன்வாங்கி 1971 உற்பத்தியை துவக்கினார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
கார்கள் உற்பத்தியாகவில்லை, இஞ்சின் குளறுபடி, திட்டமிட்ட முறையில் கார் வெளிவராதது என நாடு முழுவதும் டீலர்கள் ஏமாற்றமடைந்தனர். மொத்தத்தில் இத்திட்டம் தோல்வியை தழுவியது
இத்திட்டம் வெளிப்படையான உறவுச்சலுகை எனவும், இந்திராவின் வாட்டர் கேட் எனவும் பத்திரிக்கையாளர்கள் கூறினர். நெருக்கடி நிலை வந்தபிறகு கார் பிரச்சனைகளை ஓரங்கட்டிவிட்டு அரசியலில் அம்மாவுக்கு உதவியாய் வந்தார்.
#நெருக்கடி நிலையும் சஞ்சய் காந்தியும்
1975ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி சண்டிகர் நடைபெற்ற கோமகட்டாறு கூட்டத்தில் சஞ்சய் காந்தி இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். இந்திராவின் அரசியல் கேடயம் என வர்ணிக்கப்பட்டார்.கிராமங்கள் தோறும் இளைஞர் அமைப்பினர் நியமிக்கப்பட்டனர்.1976ல் நெருக்கடி நிலையில் ஐந்து அம்சத்திட்டத்தை அறிமுகம் செய்தார்.குடும்பக் கட்டுப்பாடு,மரம் நடுதலும் குடிசை ஒழிப்பும்,வரதட்சணை ஒழிப்பு, ஒருவர் மற்றவருக்கு கற்பித்தல், சாதிமுறை ஒழித்தல் என்று நல்ல திட்டமாக இருந்தாலும் செயல்படுத்தியதில் மோசமான எதிர்விளைவு ஏற்பட்டது.
மக்கள் தொகை இந்தியாவின் வளர்ச்சிக்கு பின்னடைவாக இருப்பது கருதி குடும்பக்கட்டுப்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக கிராமங்களில் திணிக்கப்பட்டது. கட்டாய அறுவை சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.பல மாநிலங்களில் இதன் மூலம் அதிருப்தியும் கிளர்ச்சியும் ஏற்பட்டது.
இரவில் சுற்றி திரிவோர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அனுப்பி வைத்தனர் போலீசார். அடுத்து டெல்லியில் அழகு படுத்தும் நோக்கில் 'டர்க்மன் கேட்' பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்களின் குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டது. கிளர்ச்சி செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினர்.
இதற்குப் பின் நடைபெற்ற தேர்தலில் ஜனதா அரசு வெற்றி பெற்றது. ஷா கமிஷன் விசாரணை இந்திரா குடும்பத்துக்கும், காங்கிரசுக்கும் பெரும் தலைவலியாக இருந்தது. நெருக்கடி காலத்தில் இந்திராவுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படத்தை சஞ்சய் காந்தி அழித்துவிட்டதாக குற்றம் சாட்டி வழக்கு போட்டனர். சஞ்சய் காந்தியும், சுக்லாவும் கைதாகி பின் ஜாமினில் வந்தனர். கிஸார்குர்ஸிகா எனும் இந்த வழக்கு ஜனதா அரசாங்கத்துக்கு அவப்பெயரை தேடித்தந்தது. அதன்பின்னர் 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்திராவும் சஞ்சையும் மீண்டும் புத்துணர்வு பெற்றனர்.
#எதிர்பாராத இறப்பு
கார்களின் விருப்பம் மெருகேறி விமானத்தின் மீது சஞ்சய்க்கு நாட்டம் ஏற்பட்டது. சிறிய ரக விமானங்களை ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுத் தேறினார். அண்ணன் ராஜிவ் பைலட்டாக இருப்பதால் ஏற்பட்ட விருப்பமாய் கூட இருக்கலாம்.
விமான ஓட்டுவோருக்கான சங்கத்தில் (“பிளையிங் கிளப்”) உறுப்பினராக இருந்தார். 'பிட்ஸ்'எனும் அமெரிக்க ரக சிறிய விமானத்தில் தினமும் காலை டெல்லியை ஒரு வட்டமிட்டு திரும்புவது சஞ்சயின் வழக்கம்.
அப்படித்தான் எப்போதும் போல 1980 ஜுன் 23ந்தேதி காலை 8 மணிக்கு 'புஷ்பக்' என்ற சிறிய விமானத்தில் ஏறி டெல்லி மீது சஞ்சய் பறந்தார். அவருடன் சக்சேனாவும் பயணம் செய்தார். இந்திரா காந்தி வீட்டுக்கு மேல் விமானம் பறந்து சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக வெலிங்டன் கிராஸ் எனும்
இடத்தில் செங்குத்தாக தரையில் விழுந்து மோதியது. இது
பாராளுமன்றத்திலிருந்து மூன்று கிலோமிட்டர் தொலைவில் இருந்தது. இந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. சஞ்சையின் வீட்டுக்கு பின்புறம் தான் இந்த இடம் உள்ளது. விமானம் மூன்று முறை வட்டமடித்து, நான்காம் முறை வட்டமடிக்கும் போது விழுந்ததாக கூறப்பட்டது. விபத்து நடந்த இடத்திலேயே சஞ்சயும், உடன் பயணித்த சக்சேனாவும் இறந்தனர்.
இரத்த வெள்ளத்தில் இருந்தவரை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இறந்ததை உறுதிப்படுத்தினர். உடல் பல பாகங்களாக சிதறி இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் ஒன்றிணைத்து பிறகு பிற்பகலில் வீட்டிற்கு கொண்டு வந்தனர். இந்த மரணம் இந்திராவையும் மேனகாவையும் உலுக்கிவிட்டது. 35 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரின் மரணம் இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தது.
சஞ்சய் காந்தி இறந்த போது மகன் வருணுக்கு மூன்று வயதே ஆகியிருந்ததால் இத்தாலியிலிருந்து வந்த ராஜீவ் காந்தியே சஞ்சய்க்கு இறுதிச்சடங்கு செய்தார். சஞ்சையின் மரணம் ராஜீவின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment