Wednesday, 9 June 2021

கொரோனா அலைக்கூட ஓய்ந்திடும், குட்மார்னிங் அலை ஓயாது..! - LKG ஆன்லைன் கிளாஸ் சேட்டைகள் #MyVikatan-மணிகண்டபிரபு

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பல விஷயங்களில் குழந்தைகளும் கல்வியும் ஒன்று. கல்லூரி, பள்ளி துவங்கி இப்போது எல்.கே.ஜிக்கும் ஆன்லைன் வகுப்பும் துவங்கியிருக்கிறது. புது பேக், புது ஷூ, புது லன்ச் பேக்கெல்லாம் வாங்கித்தரேன் சாப்பிடுனு மாசக்கணக்கில் சோறு ஊட்டிய தாயிடம்.. இதையேதான் 4 மாசமா சொல்லுறீங்கனு கோபப்பட்ட குழந்தை இப்ப எல்.கே.ஜி சேரப்போவது ஃபார்முக்கு வந்த தோனி மாதிரி எனர்ஜியானது ஆன்லைன் க்ளாஸ் வகுப்புகளில்

#அறிமுகம்

முதல் நாள் ஆன்லைன் வகுப்பில் எல்லாரும் பயபக்தியா.. "நாளைய ஐ.ஏ.எஸ் ஆபிசரின் அப்டேட் வெர்சனா இவன்" எனும் ரேஞ்சிலயே அப்பாவி மாதிரி இருப்பார்கள். say good morning னு சொன்னதும் எல்லாரும் கோரஸா குட் மார்னிங் சொல்லுவாங்கனு பார்த்தால்.. கோவை சரளாமாதிரி தனித்தனியா குட்மார்னிங் சொல்லி.. போதும் போதும் னு டீச்சர் அமைதிப்படுத்துவாங்க. ஆனாலும் கொரொனா அலைகூட ஓய்ந்திடும் ஆனால் குட்மார்னிங் அலை ஓயாதுங்கிற மாதிரி அது தொடர்ந்துகிட்டே இருக்கும்.

இந்த மாதிரி நேரத்தில் நிலைமையை சமாளிக்க கைதட்டனும், stand up, sit down, jump போன்ற சாம,வேத, தான, தண்டத்தை டீச்சர்ஸ் பயன்படுத்துவாங்க. சின்ன சின்ன

வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போது.. சின்ன கவுண்டர் விஜயகாந்த் பஞ்சாயத்துக்கு போன மாதிரி இருந்த பசங்க.. கொஞ்ச நேரத்தில அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனேனு மாறிப்போவாங்க.


#ஆரம்பிக்கும் அலப்பறை


பொட்டி வரல னு ஒருபடத்தில சொன்னது மாதிரி, ஒரு பையன்.. மிஸ் வாய்ஸ் சரியா கேட்கலனு சொன்னதும்.. எல்லா குழந்தைகளும் ஒரு முறை தானும் சொன்னால்தான் ஆன்லைன் வகுப்பின் ஆத்மா சாந்தியடையும் என்பது போல் எல்லாரும் சொல்வாங்க. ஏழு செகண்டுக்கு மேல எம் பேச்சை நானே கேட்க மாட்டேங்கிற மாதிரி..

ஒரே இடத்தில் உட்கார்ந்தவங்க,

திடீரென எழுந்திருப்பாங்க. சட்ட சபை மாதிரி நிற்பவரையெல்லாம் மிஸ் சிட் டவுன் ப்ளீஸ், சிட் டவுன் ப்ளீஸ் னு சபாநாயநோக்கினா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு கொடுத்தாலும்.. பொறுமைக்கான நோபல் பரிசு எல்.கே.ஜி டீச்சர்களுக்குத் தான் கொடுக்கனும்.


திடீர்னு நெட்டு கிடைக்காம நின்னு போய்டுச்சுனா மிஸ் முகம் மட்டும் ஹேங்க் ஆகிடும். ஒட்டுமொத்த கும்பலே மிஸ் statue ஆகிட்டாங்க னு சொல்ல.. எல்லாமே அன்னலும் நோக்கினாள் ஆன்லைனிலும் நோக்கினான் மாதிரி பார்த்துக்கிட்டே கைதட்டி சிரிப்பாங்க.

ஸ்டாண்ட் அப் காமெடிக்கு சிரிப்பே வரலனாலும் கை தட்டுவது போல்.. அடிக்கடி கைதட்டனும். தூக்கம் வருவது போல் தெரிந்தால் ஸ்டாண்ட் அப், சிட் டவுன் சொல்லிடனும். அடுத்து கையை உயர்த்த சொல்லுவாங்க. சிலர் அப்பிடியே ஆடி முடிச்ச மாதிரி நெட்டி முறிப்பாங்க. சிலர் அப்பிடியே சாமி வந்து மலையேறுவது போல் போஸ் கொடுப்பாங்க. அதிலிருந்து வெளியே வர லேட் ஆவதால் அடுத்த ஆக்டிவிட்டிக்கு போயிடனும்.


இன்னும் சிலர் கைகட்டி நிக்க சொன்னா.. கராத்தேவுல ப்ளாக் பெல்ட் வாங்கிற மாதிரி நின்னு திஸ் ஈஸ் ட்ரங்கன் மங்கி ஸ்டைல் மாதிரி நிற்பாங்க. கை பயிற்சிக்காக விரல் பயிற்சிக்காக கர்சிப்பீல் தண்ணீர் நனைத்து பிழியும் போது நாம ஒன்னுசொன்னா அவங்க ஒன்னு விளையாடிட்டு இருப்பாங்க. பார்கிறதுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊத்தவும்னு சொல்லும் சமையல் ஷோ மாதிரி இருக்கும்.

இறைவா இவங்கள புரிஞ்சிக்க தனி மூளை குடுய்யா கந்தானு சொல்லும் மிஸ்ஸோட மைண்ட்வாய்ஸ் கேட்கும்.


*அடிக்கடி மிஸ் now என்று சொல்வதை குழந்தை லவ் எனச் சொல்ல பேரன்ட்ஸ் ஒருத்தர் ஷாக் ஆகி கரெக்ட் செய்தார்.


*சின்ன இடைவெளி கிடைச்சதும் ஒரு குழந்தை விரல் சூப்பியது


*குதிங்காலிட்டு, குத்தவைத்து, மண்டியிட்டு, குப்புறப்படுத்து என எல்லா டைரக்சனிலும் குழந்தைகள் ஆன்லைன் அட்டெண்ட் செய்தனர்.


*mute/unmute என்பது ஆன்லைன் வகுப்பில் கதவின் pull/push போல குழப்பமானது


*இரண்டாவது நாளே ஒரு அம்மா என் பையன் நல்லா படிக்கிறானானு கேட்டதும் குருப்பில் உள்ள எல்லாரும் கொஞ்சம் உறைஞ்சுதான் போய்ட்டோம்


#மழலை மொழி


குழலினிது யாழினிது என்பார் மக்கள்தம் மழலை சொல்லை "ஆன்லைனில்" கேளாதார் என்பது போல் மழலை மொழி கேட்கும். Toy எடுத்திட்டு வாங்கனு சொன்னால் காய் எடுத்து வருவார்கள். இது ஸ்கூட்டர்னு சொன்னால் சூப்பர்னு சொல்லுவாங்க.

நல்லாயிருந்தாச்சுனா கேட்டால் ஓ கண்ணாமூச்சி விளையாடலாம்னு சொல்லும் போது மாத்தி யோசி ரவுண்ட் போலத்தெரியும்.


நீளமான வாக்கியத்தை மிஸ் சொன்னதும்.. மணமேடையில் ஐயர் மந்திரம் சொன்னால்.. மாப்பிள்ளை எதாச்சும் உளறிட்டு கடைசி வார்த்தையை மட்டும் கரெக்டா சொல்வது மாதிரி.. வாக்கியத்தின் கடைசி வார்த்தையை சொல்வாங்க. தவறாய் பேசும் போது கூட இன்பமே அது.


மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ

மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ

பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்

கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும் எனும்


கண்ணதாசன் வரி அப்போது நினைவுக்கு வரும்.

மிஸ் bye சொன்னீங்களானு அடிக்கடி கேட்டு இறுதியில் உண்மையிலேயே bye சொன்னதும் அப்படி ஒரு குதூகலம் குழந்தையின் முகத்தில். யதார்த்தமான உலகில் யதார்த்தமான ஒன்றையே தேர்வு செய்கிறார்கள். நம்மைவிட குழப்பம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஜெரோம் புருனெர் சொன்னது போல,

''கற்பிக்கும் இடங்களில் நம் செயல்பாடுகளும்,பேச்சுகளும் குழந்தைகளுக்கு ஒன்றுமே தெரியாது எனும் எண்ணத்தை உருவாக்குகின்றன".


ஆனால் அவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயமில்லை என நினைத்து கற்றலில் தைரியமாய் ஈடுபடுகின்றனர். இத்தகைய சுதந்திர உணர்வே கற்றலில் முக்கிய அம்சம்.


#ஆன்லைன் வகுப்புகள்


"Something is better than nothing" என்பது போல இந்த கால கட்டத்தில் நேரடி கற்பித்தல் இல்லாத போது ஆன்லைன் வகுப்புகள் ஓரளவு உதவுகின்றன. தமிழகம், கேரளாவில் தொலைகாட்சி வாயிலாகவும், ஆசிரியர்கள் வாட்ஸ் அப் வாயிலாகவும், கூகுள் சீட் வழியாகவும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் வாட்ஸ் அப் குழுவில் 40 பேர் இருந்தாலும் படித்து பதிவிடுவது சிலர் மட்டுமே. மற்றவர் பார்த்தும் பார்க்காதது போல் கடந்துவிடுகின்றனர். இன்னும் சிலர் புத்தகமே வாங்கவில்லை. குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை பெற்றோரால் நிறைவேற்ற முடிவதில்லை. அதேபோல் பெற்றோருடைய எதிர்பார்பார்ப்பை குழந்தைகளால் நிறைவேற்ற முடிவதில்லை. காரணம், எல்லாமே பெரிய எதிர்பார்ப்புகள் என்பதால் தான். இந்த எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும்.


ஜெயகாந்தன் சொல்லுவார்

நம்பிக்கை தான் எல்லா மனிதரையும் வாழ வைக்கிறது; நம்பிக்கை நிறைவேறுவது இரண்டாம் பட்சம்; ஆனால், நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை; அடித்தளம்!

எவ்வளவு தான் சிறப்பானதாயிருந்த போதிலும், முந்தைய ஆண்டு என்பது இறந்த காலம் தான்; எவ்வளவு தான் குழப்பமானதாக இருந்தாலும், இந்த ஆண்டு தான் எதிர்காலமும், நாம் எதிர்கொள்ள வேண்டிய காலமும் ஆகும். எனவே, புதிய நம்பிக்கைகளுடன் இந்த கல்வி ஆண்டை எதிர்கொள்வோம்.

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment