நாம் அமைதியான ஒரு பஞ்சத்தில் (Silent famine) இருக்கிறோம் என்கிறது Centre for Science & Environment இன் இதழான “Down to Earth” இன் கட்டுரை. 'Indian Council of Agricultural Research' இன் விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட ஆய்வில் நம் உணவுதானியங்கள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழந்து வருவதோடு நச்சுத் தன்மையை அடைந்து வருவதாகத் தெரியவந்திருக்கிறது.
ஒவ்வொரு உணவுத் தானியத்திலும் உடலுக்குத் தேவையான என்னென்ன ஊட்டச் சத்துக்கள் எவ்வளவு மில்லிகிராம் இருக்கின்றன என்ற பட்டியலை நாம் பார்த்திருப்போம். அந்த பட்டியல் இப்போது பொய்த்துக்கொண்டிருக்கிறது. அரிசி மற்றும் கோதுமையில் இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, செம்புச் சத்து ஆகியவை எவ்வளவு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதையும் ஆர்சனிக், அலுமினியம், பேரியம் போன்ற நச்சுக்கள் எப்படி அதிகரித்திருக்கின்றன என்பதையும் பின்னூட்த்திலிருக்கும் படங்களில் காணலாம்.
இதை இன்னொரு வகையில் சொல்வதானால் உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முன்பு நீங்கள் உண்ண வேண்டியிருந்ததைவிட அதிகமாக இன்னும் அதிகம் நச்சுக்களையும் சேர்த்து நீங்கள் உண்ண வேண்டியிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் காலநிலை மாற்றத்தால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் வகைமையும், தாக்குதலும், தீவிரமும், பரவலும் வேகமாய் அதிகரித்து வருகின்றன. வளமிழந்தப் பயிர்களை உண்ணும் பூச்சிகளும்கூட தமக்குத் தேவையானவற்றைப் பெற இன்னும் அதிகமாய் உண்ண வேண்டியிருக்கிறது. பூச்சிகளின் அதிகரிப்பால் ஏற்படும் சேதங்கள் ஒருபுறமிருக்க இன்னொருபுறம் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் வீழ்ச்சியும் அதிகரிக்கும் வெப்பத்துக்குத் தகவமைய இயலாதத் தன்மையும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளான பெருமழை, வறட்சி, புயல்கள் போன்றவையும் விளைச்சலைக் குறைக்கின்றன. இவைகுறித்த விரிவாக அறிக்கைகள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன.
அரிசி கோதுமை போன்ற அதிக சூழல் தாக்கமுள்ள தானியங்கள் எளிதில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுபவையாகவும் இருக்கின்றன. International Rice Research Institute இன் அறிக்கையானது உலகம் முழுதும் 14 கோடி சிறுகுறு நெல் விவசாயிகளின் வாழ்வாதாரம் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கிறது.
You are what you eat, or, rather, what you grow to eat என்கிறது Down to earth கட்டுரை. "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்கிறது புறநானூறு. நாம் இந்த நிலத்துக்கும் நீருக்கும் செய்ததை அறுவடை செய்யத் தயாராக இருப்போம்.
கிரெடிட் கார்ட் வைத்திருப்பதால் மட்டும் அரிசி வாங்கிவிட முடியாத நிலையை விரைவில் எட்டிவிடும்போது ‘ஓரளவிற்கு’ வறட்சிதாங்கும் குறைவான இடுபொருட்கள் தேவைப்படும் சிறுதானியங்களும் பஞ்சத்தில் பிழைத்திருக்கச் செய்யும் பஞ்சகாலத் தாவரங்களும் நமக்கு (அல்லது நம் பிள்ளைகளுக்குக்) கைகொடுக்கலாம்.
No comments:
Post a Comment