Monday, 5 February 2024

ikea


IKEA effect

IKEA என்பது உலகப் புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு ஃபர்னிச்சர் நிறுவனம். அவர்களின் தனிச்சிறப்பு, பொருட்களை முழுமையாக தராமல், அதன் பாகங்களைத் தனித்தனியாக அடுக்கி, ஒரு பாக்கெட்டில் தருவார்கள். கூடவே அதனை எப்படி அசெம்பிள் செய்வது என்ற DIY (Do it Yourself) கையேடும், வீடியோ இணைப்பும் இருக்கும். அதைப் பார்த்து நாமே எளிதாக அந்தப் பொருளை கட்டமைத்துக் கொள்ளலாம். 

வேறு பல நிறுவனங்கள் முழுமையான பொருளாக விற்பார்கள் அல்லது ஒரு டெக்னீஷியனை வீட்டுக்கு அனுப்பி பொருத்தித் தருவார்கள். 

இந்த இரண்டு அணுகுமுறையை வைத்து, மக்கள் எப்படி ஒரு பொருளின் மதிப்பை அளவிடுகிறார்கள் என்ற உளவியல் சோதனையை நடத்தியிருக்கிறார்கள். அதனை, IEKA effect என்று அழைக்கிறார்கள்.

ஒரு பயிற்சியில் பங்கெடுத்தவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவிடம் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட ஒரு மேஜையை காண்பித்து அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என அளவிடச் சொன்னார்கள். இன்னொரு குழுவிடம், அதே மேஜையின் பாகங்களை தந்து அதனை அசெம்பிள் செய்து, பிறகு அதன் மதிப்பை கணிக்கச் சொன்னார்கள்.

முதல் குழுவினர் மதிப்பிட்ட விலையை விட இரண்டாவது குழுவினர் அதே மேஜைக்கு 50% அதிக விலையை நிர்ணயித்திருந்தனர். இதே பரிசோதனை பல முறை நடத்தப்பட்ட போதும் தாமே அசெம்பிள் செய்தவர்கள், தமது பொருளுக்கு கூடுதல் மதிப்பை தந்திருந்தனர்.

IKEAவின் தயாரிப்பை வாங்கியவர்கள், அதனை அவர்களே பொருத்தியதால் அந்தப் பொருளை கூடுதலாக விரும்புகிறார்கள். நாமே ஒரு கட்டிலை, அலமாரியை, மேஜையை பொருத்தும் போது ஒரு வித எம்பவர்மெண்ட்டை நாம் அடி ஆழத்தில் உணர்வோம். நாம் உருவாக்கிய பொருளை பாதுகாப்பாக, கவனத்துடன் பயன்படுத்துவோம். அதனால் IKEA தயாரிப்புகளை சிறந்தது என நம்பத் தொடங்குவோம். மீண்டும் மீண்டும் அதே நிறுவனப் பொருட்களை வாங்கவும் செய்வோம்.

கின்டர்-ஜாய் எனும் ஒரு சாக்லேட்டுக்கு குழந்தைகள் அடிமை. அதன் முக்கியக் காரணம், அந்த சாக்லேட் அல்ல. அதனுடன் ஒரு சர்ப்ரைஸ் பரிசுப் பொருள் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை குழந்தைகளே பொருத்திப் பார்க்குமாறு தந்திருப்பார்கள். அந்த சர்ப்ரைஸ் எலமெண்ட்டும், நாமே அதனை பொருத்தும் போது கிடைக்கும் மனநிறைவும் அந்த சாக்லேட்டின் மார்க்கெட் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

பொதுவாக நாம் எந்த பணியில் ஈடுபடுகிறோமோ அந்த பணியில் கூடுதல் இணைப்பு ஏற்படும். அதன் நுணுக்கங்களை நாம் அறிவதால் அந்த பணிக்கு அதிக மதிப்பை தருகிறோம். அப்பாவின் பணத்தில் வாங்கிய வண்டியை விட, தானே உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய வண்டியை அதிக மதிப்புடன் நாம் உணர்வோம்.

ஒரு வேலையில் ஈடுபடாமல், வெளியே இருந்து அந்த வேலையின் தன்மையை அளவிடும் போது கொஞ்சம் குறைவாகத் தான் மதிப்பிடுவோம். ஆனால் அதில் ஈடுபட்டவர்கள் அதன் மதிப்பை அதிகமாக உணர்வார்கள். இது பணி சூழலில் முக்கியமான தத்துவமாக பின்பற்றப்படுகிறது. எந்த ஒரு வேலையிலும் பணியாளர்களை நேரடியாக ஈடுபடுத்தும் போது பணியாளர்கள் உணர்வுரீதியாக அந்த வேலையில் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மதிப்பை கூடுதலாக உணர்வார்கள்.

-ஜானகிராம்

No comments:

Post a Comment