Sunday, 1 December 2024

புத்தகம்-28


Reading_Marathon2024
#24RM050

Book No:28/100+
Pages:120

டாக்ஸி டிரைவர்
-ஆனந்த ராகவ்

ஆனந்த ராகவ் கதை சொல்லல் முறை மிகவும் நுட்பமானது. வார இதழில் ஆங்காங்கே கதைகளை படித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்துக்களில் அவர் காட்டும் ஈடுபாடு எதார்த்தமான சொற்களின் பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மைகள் கதை முழுவதும் தொய்வின்றி இறுதி வரை இழுத்துச் செல்வது என இவரின் சிறுகதைகளுக்கு ஒரு தனித்துவம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

 பர்மாவில் இருந்து எல்லை கடந்து அகதியாய் தாய்லாந்தில் பாதுகாப்பில்லாமல் வாழவரும் சீதாவுக்கு நேர்ந்த இழப்புகளும் வேதனைகளும் கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அடுத்து என்ன என்று பதற்றத்துடன் நம்மையும் படிக்க வைக்கிறது இவரின் எழுத்து கடைசியில் ஒரு சோக முடிவுடன் முடிந்தாலும் அது தரும் அனுபவம் பிரமக்க வைக்கிறது.

அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் பல பிரச்சனைகளுக்கு எளிமையான ஒரு தீர்வு தான் மிகப்பெரிய பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறது. நீதிக்கதைகளில் வரும் பூட்டாத பூட்டிற்கு சாவி தேடுவது போல பல பிரச்சனைகளுக்கு தீர்வை நோக்கி ஓடுகிறோம். அது பிரச்சனை இல்லை என்று தெரியாமல். அதுபோலத்தான் அப்பார்ட்மெண்டில் நீச்சல் குளம் கட்டுவதற்கான யோசனை வரும் போது ஒவ்வொருவரும் ஒரு யோசனை அதற்கான முட்டுக்கட்டை ஏன் போடுகிறார்கள்? இறுதியில் எவ்வாறு அந்த அப்பார்ட்மெண்டில் நீச்சல் குளத்தை கட்டினார்கள் என்பதை நகைச்சுவையாகவும் அட இவ்வளவுதானா என எண்ணும் படியும் சிந்திக்க வைக்கிறது கதை.

நேர்மையாய் வாழ்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. எல்லா நேரத்திலும் நாம் நேர்மையாக இருந்து விட முடியாது. சில நேரங்களில் மனசாட்சிக்கு பயந்து கொண்டும் நேர்மையாய் வாழ வேண்டுமா என்ற கேள்வியை அடிக்கடி நாம் கேட்டுக்கொள்வதுண்டு. அதுபோல ஒரு இக்கட்டான சூழலில்தான மகேஷ் என்னும் நடுத்தர வயது இளைஞன் கடைநிலை ஊழியம் பார்ப்பவன் தன்னுடைய மேனேஜருக்கு விசுவாசமாக இருக்கிறான். அவர் தரும் பண உதவி அவரின் குடும்பத்தையே காக்கிறது. கடைசியில் நேர்மையாய் இருந்ததால் அவனுக்கு நேர்ந்தது என்ன என்பதை "விலை" கதை நமக்கு சொல்கிறது.

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை ஐன்ஸ்டீன் ஐயப்பன் தான் .தனியார் பள்ளிகளில் சொற்ப ஊதியத்தில் தகுதியின்றி சேரும் சில ஆசிரியர்களால் அந்தப் பள்ளிக்கு நேரும் ஆபத்தும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால் அந்தப் பள்ளிக்கு நேரும் பிரச்சனையும் பற்றி மிக அழகாக கதை பேசுகிறது. ஐ க்யூ அதிகம் உள்ள ஐயப்பன் என்ற மாணவன் அந்த பள்ளிக்கு புதிதாய் சேருகிறான். அவனின் அறிவுத்திறமை கண்டு வியக்கிறது அந்தப் பள்ளி நிர்வாகம். ஒவ்வொரு ஆசிரியரும் திணறுகிறார்கள் அவனுடைய அறிவின் மேன்மையை சொல்ல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிறார்கள் ஆனால் அந்தப் பள்ளியின் தரம் உயர்கிறது .அதுவே ஒரு விஷயத்தில் எதிராகவும் அமைகிறது அது என்ன என்பதுதான் மீதிக்கதை.
ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசும் ஆங்கிலம் முழுக்க நம்மை நகைச்சுவையால் கட்டிப் போடுகிறது

நடுத்தர வயது பெண்களின் கழுத்தில் இருக்கும் நகைகள் அவர்களின் சந்தோஷத்தை போலவே அடிக்கடி காணாமல் போகும் .அது போன்ற நடுத்தர வயது பெண்மணியின் ஒரு தாயின் நகை காணாமல் போகிறது. குடும்பமே தேடுகிறது. கடைசில அந்த நகையை யார் எடுத்திருப்பார்கள் என்பதனை அவலச் சுவையுடன் இக்கதை சொல்கிறது.

என்ன படிக்க வேண்டும் என்று தெளிவில்லாமல் என்ன வேலைக்கு செல்கிறோம் என்ற இலக்கும் இல்லாமல் செல்லும் இளைஞர்களின் கதை வித்தியாசமானது. அவர்களின் முகங்களையும் மன நிலையும் படம் பிடித்து அப்படியே பாதை என்னும் கதையை எழுதி இருக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையாக உள்ள தந்தையும் அவரின் மனைவி படும் பாட்டினையும் அவரால் மகனுக்கு ஏற்படும் ஆசையே மருந்து என்னும் கதை படிக்கும் போது உணர முடிகிறது.

வயதான தந்தை திடீரென மயங்கி விழுகிறார். சர்க்கரை நோயாளியின் அவர் மருந்துகளால் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இப்போது அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடனும் மருத்துவமனையில் சேர்த்து விட்டேன் .ஆனால் ஐசியூ லையே பல நாள்கள் இருக்க வேண்டிய சூழல். குடும்பத்தில் நிம்மதி இல்லை, சேமிப்பு குறைகிறது, கடன் அதிகரிக்கிறது .இந்த நிலையில் அலுவலகத்தில்  வெளிநாடு செல்லும் வேலை வருகிறது. தன்னிச்சையாக தன் தந்தையைக் காக்க போராடுவதுடன் பாசப்பிணைப்புடனும் அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடிப்புடனும் நாயகன் இருக்கிறான் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இரண்டாம மரணத்தின் கதை

சிறுகதை தொகுப்புகளை வாசிப்பதற்கு அச்சம் வரும். ஏனெனில் இந்த புத்தகம் நம் நேரத்தை வீணாக்கி விடுமோ புதிய செய்தி இல்லாமல் எழுதுபவரின் மேதாவித்தனத்தை மட்டும் கொண்டாடுமோ அல்லது பழமை வாதத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருப்பவரோ என எண்ணத் தோன்றும். எதெச்சியாக வாசித்தது இந்த புத்தகம் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வடிவினில் நேர்த்தியான சொல் கட்டமைப்பு முறையில் நம்மை மிகவும் கவர்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment