Saturday, 28 December 2024

புத்தகம் 38


Reading_Marathon2024
#24RM050

Book No:38/100+
Pages:-590

தம்மபதம்-4
-ஓஷோ

புத்தரின் கருத்துக்களை முன்வைத்து ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகள் தான் தம்ம பதம். இவை பல பாகங்களாக வந்துள்ளது. அதில் நான்காம் பாகம் தற்பொழுது பார்ப்போம்.

புத்தரைப் பொறுத்த அளவில் நீங்கள் செய்வதெல்லாம் விஷமம் தான். ஏனென்றால் செய்வதெல்லாம் உணர்வின்றி செய்து கொண்டிருக்கும் காரியங்கள். அவருடைய விபரணையில் விஷமம் என்பது உணர்வின்றி செய்யும் காரியம். அகத்திலிருந்து நாம் வாழ்வதில்லை. பிறரை பார்த்து நடந்து கொள்வதுதான் வாழ்க்கை என்றாகி போய்விட்டது. நம்முடைய அக்கறையெல்லாம் நாம் செய்வதை பிறருக்கு காட்சி பொருளாக்குவதாக ஆகிவிட்டது,
எனெனில் சிறந்த மனிதர்கள் மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்வதே இல்லை என்பதை உதாரணத்துடன் ஓசோ விளக்குகிறார்.

நீயாக தெரிந்து கொள்ளும்போது நாம் அவ நம்பிக்கையை தூக்கி எறிய முடியும். பார்க்க முடிந்த கண்களே வியப்பில் வளர்கின்றன. அறிவு ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதன் வெளிப்பாடு. ஆனால் விவேகம் என்பது வித்தியாசமானது. அது வரைபடம் இல்லாத கடலுக்குள் போவதைப் போல என்று விவரிக்கிறார். அதுவே படைப்புத்திறனாகவும் விளங்குகிறது.

*இந்தியாவில் இரண்டு மொழிகள் இருந்தன பிராகிருதி என்றால் இயல்பானது என்ற பொருள். அது மக்களுடைய இயல்பான மொழி. மற்றொன்று சமஸ்கிருதம் என்றால் திருந்திய என்ற பொருள். அது மேல் தட்டு மொழி பண்டிதர்களும் அறிஞர்களும் பேசிய மொழி.. புத்தரும் மகாவீரரும் முதன்முதலில் மக்கள் மொழியை பயன்படுத்தி அவர்கள் பிராமணர்களால் அவர்கள் மன்னிக்க முடியவில்லை. சாஸ்திரங்களை கும்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் ஒருபோதும் அதனை புரிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணமே இதற்கு அடிநாதமாக விளங்குவதை சொல்கிறார்.

நல்லதை விரைவாக செய் என்பதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு கதைகளையும் அவருடைய வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும் தொகுத்து கூறுகிறார். யோசனைக்கு பின்னால் யோசனை என்ற ஒரே யோசனைதான் இருக்கும். மெத்தனமாக இருந்து விடக்கூடாது விரைந்து செயலாற்ற வேண்டும். ஏனெனில் மனம் விரைந்து செயல்படுவது. வேறு எதை விடவும் வேகமாக போவது. ஒளியை விட வேகமாக உள்ளது. சுதாரிப்போடு இருக்கவில்லை எனில் மனம் உன்னை குப்புற தள்ளிவிடும். எதையும்  செய்யாமல் இருந்தால் மனம் தரும் தண்டனை தான் சலிப்பு.

இதைத்தான் புத்தர் நல்லதை செய்யும் நெஞ்சோடு இரு. திரும்பத் திரும்பச் செய்திடு. மகிழ்ச்சி உன்னை நிறைத்து விடும் என்கிறார் .மகிழ்ச்சி துயரத்தைப் போலவே ஒரு துணைப் பொருள்தான். ஏதாவது கெடுதல் செய்யும்போது துயரம் ஒரு  நிழலை போல உன்னை தொடர்கிறது. ஏதாவது ஒரு நல்லதை செய்தால் மகிழ்ச்சியும் நிழலை போல உன்னை தொடர்ந்திடும் என்கிறார்.

மேலும் உன் குறைகளை மலிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது என்னவாகி போகிறது என்று மட்டும் இருந்து விடாதே. சிறு துளிதான் ஒரு கடலையும் உருவாக்குவதே. அதனால் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கவனமோடு இரு என்கிறார். ஏனெனில் வாழ்க்கை சின்னவற்றால் ஆக்கப்படுகிறது. பெரியவை என்று ஏதுமில்லை. சின்ன சின்ன விஷயங்களை திரட்சியே பெரிய விஷயமாகிறது என்கிறார்.

துயரத்தை எதைக்கொண்டாவது மறந்திருப்பது நுகர்ச்சியின்பம் என்கிறார்கள்.பாட்டு கேட்டபின், தூங்கி எழுந்தபின் மீண்டும் துயரத்துக்கு திரும்புகிறோம். துயரத்தோடு போராடாதே. அதனால் எந்த பயனும் இல்லை. இங்கும் அங்குமாக துயரத்தை தள்ளி வைக்கலாம். ஆனால் இருந்து கொண்டே தான் இருக்கும் .பிறர் மீது பொறுப்பை சுமத்தாதே. இரண்டு நெஞ்சங்களுக்கு இடையேயான தொடர்பை கம்யூனியன் என்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் குடும்பம் என்ற கொள்கையே முடை நாற்றம் வீசுவதாக போய்விட்டது. ஒரு காலத்தில் சிறப்பாக இருந்தது ஆனால் அதன் பணி முடிந்து விட்டது. இனி குடும்பத்துக்கு எதிர்காலம் இல்லை .உண்மையில் துயரத்துக்கு காரணமாக குடும்பம் இருப்பதால் அதை இனி காலாவதியாக கூடும் என்பதை அன்றே உணர்ந்து கூறியிருக்கிறார்.

Can you float a loan? என்பது வியாபாரமொழி இதில் float என்ற வார்த்தைக்கு என்ன பொருளோ அதை தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறவன் அப்படியே எடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? எந்த ஒரு நிலையிலும் எதை சொன்னாலும் அவன் அவனுக்கு தெரிந்த மொழியில் தான் அதை எடுத்துக் கொள்கிறான். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை நம்மில் பெரும்பாலானோர் பெரும்பாலான சமயங்களில் புரிந்து கொள்வதே இல்லை. நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியுமோ எப்படி வசதியாகப் புரிந்து கொள்ள முடியுமோ அதை மட்டுமே நாம் புரிந்து கொள்கிறோம் .மரணப்படுக்கையில் இருந்தவர் தன்னுடைய மகன்கள் அருகில் இருக்கிறார்களா என்று கேட்டுக் கொண்டார். அனைவரும் இருக்கிறார்கள் என்று சொன்னவுடன் பின்பு யார் கடையை பார்த்துக் கொள்வது என்று கேட்கிறார். இறக்கும்போது கூட வியாபாரத்தின் மீதுதான் அவரின் நினைவு இருக்கிறது.

புத்தர் இறந்த ஏழு எட்டு நூற்றாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் பௌத்தர்கள் அனைவரையும் கொன்று குவித்தார்கள். அதனால் சில தப்பித்து இந்தியாவை விட்டு ஓடினார்கள் .பலர் இறந்தார்கள். இப்படித்தான் திபெத் மங்கோலியா சீனா தாய்வான் போன்ற நாடுகளுக்கு சென்று ஆசியா முழுக்க பௌத்தம் பரவியது. இதுவும் ஒரு வகையில் நல்லது தான் என்கிறார்.

புத்தருடைய அஹிம்சையும் முழுக்க வேறானது. குணவியல்பில் வேறுபட்டது. அவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை என்ற நிலையில் பேசுபவர். யாரையாவது நோகடிப்பது என்றால் அது உன்னையே நோகடித்துக் கொள்வதாய் போகிறது. எதையாவது அழிக்கும்போது உன்னையே அழித்துக் கொள்வதாய் போகிறது என்கிறார். புத்தர் கடவுள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதே இல்லை. ஆனால் கடவுளை குறிக்க அவர் ஆங்காங்கே குறிப்பு காட்டுகிறார். இதுதான் அவர் சுட்டிக் காட்டும் வழி

எல்லாரையும் வெறுக்கிறவன் ஒருபோதும் யாரையும் நேசிக்க முடியாது. ஏனெனில் வெறுப்புக்கு பழகிப் போகிறான். அவன் ரத்தத்தில் வெறுப்பு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வீட்டிலும் அவனுக்கு சண்டை தான் போராட்டம் தான். பிறகு எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது. ஒரு போலீஸ்காரன் வீட்டிலும் போலீஸ்காரனாகவே இருக்கிறான். நீதிபதி எப்போதும் நீதிபதி தான். இன்றைய இணைய உலகிலும் கணினி உலகிலும் மன அழுத்தம் என்ற வார்த்தை அனைவருக்கும் பழகிப் போனது தான் .அதனை விடுபடுவதற்கு தேவையான ஆலோசனைகளை இந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பார்.

உடைந்து கிடக்கும் காண்டாமணி போல சும்மா இரு மவுனித்திரு. எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் விடுபட்டிருக்கும் நிச்சலனத்தை தெரிந்து ஆசையிலிருந்து விடுபட்டு இரு. ஆசைதான் உனக்குள் ஆரவாரத்தை உண்டு பண்ணுகிறது.
மனோதத்துவ சிகிச்சையில் எல்லாவற்றையும் உணர்வின் மேல் நிலைக்கு கொண்டு வர செய்கிறார்கள். அப்போதுதான் அதை தொலைக்க முடியும். கனவுகள் ஆழ்ந்த உணர்வின் குறுக்கலைகள் மேலே வந்து சேரும் போது அதை உணர்ந்து கொள்வதால் தொலைத்து கட்ட முடிகிறது என்கிறார். 

புத்தகம் முழுக்க ஆங்காங்கே ஓஷோவக்குரிய கிண்டலும் கேள்வியுமாக வயது வந்த நகைச்சுவைகளை ஆங்காங்கே தெளித்து அயல்நாட்டு மேதைகளின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களையும் சொல்லிக் கொண்டு வந்ததில் புத்தகம் விரைவாக படித்திட முடிகிறது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment