Reading_Marathon2024
#24RM050
Book No:33/100+
Pages:710
ஷாஜி இசைக்கட்டுரை முழுத்தொகுப்பு
-ஷாஜி
பாடல்கள் என்பது மனித வாழ்க்கைக்கு கிடைத்த வரம். சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழன் என்றால் அவை பாடல்களே. பாடல்கள் கேட்காத மனிதர்களே இல்லை எனலாம். பாடலின் நுட்பத்தை அறிந்து கொண்டு கேட்கும் போது அந்தப் பாடல் இன்னும் தெய்வத்துவம் ஆகிவிடுகிறது. தமிழகத்தில் தோன்றிய இசையமைப்பாளர்கள், பாடல்கள் மட்டுமின்றி உலக அளவில் இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் பாடகர்கள் குறித்த முழுமையான அறிமுகத்துடன் அவர்களின் திறமையுடனும் இந்த புதிய புதிய தகவல்களை இந்த புத்தகம் நமக்குச் சொல்கிறது. அதுபோலத்தான் இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும் பாடல்கள் குறித்து நம்மை முழுமையாக செய்திகளை தீர்த்து வைக்கும் விதத்தில் ஒவ்வொரு கட்டுரைகளும் இருக்கின்றன. இன்று அலெக்சாவில் பாட்டு கேட்கும் ஹைடெக் வாழ்க்கை வந்தாலும் கூட.. பாடல்கள் கேட்பதில் அரிச்சுவடி ரேடியோ தான். அந்த ரேடியோவில் இருந்து தான் இந்த கட்டுரையும் துவங்குகிறது.
நல்ல பாடல் சரணங்களில் பல்லவியை விட மேலே சென்று புதிய இடங்களை தொடுவது எம்.எஸ்.வி யின் சிறப்பம்சம். எம்எஸ்வியின் இன்னொரு முகம் உச்ச ஸ்தாயில் பாடும் பாடல்கள் அதற்கு உதாரணமாக பல பாடல்களை சொல்லலாம் ஜகமே மந்திரம் ,சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பாடல்கள். Could you be loved?, In Bob I Trust போன்ற வரிகள் பாப் மார்லியின் சட்டைகளில் விரிந்திருப்பதாகும். ரெகே ஸ்பானிஷ் மொழிச் சொல் அதற்கு அரசனின் இசை என்ற பொருள் உண்டு என்று பாப் மார்லி சொல்லி இருப்பார். தமிழில் சின்ன சின்ன ஆசை, முஸ்தபா ,அகிலா அகிலா போன்றவை அந்த வடிவங்களை பெற்றுள்ளவை ஆகும். இசை உலகுக்கு அவர் வந்த பயணத்தையும் அனுபவத்தையும் இதில் விவரித்துள்ளார்.
'பெண்ணே நீ அழக்கூடாது
உனது துயர்களை எல்லாம்
துடைத்தெறியும் எதிர்காலம் அதோ வருகிறது பெண்ணே நீ அழக்கூடாது
No woman No cry.. என்பது பாப் மார்லியின் புகழ்பெற்ற பாடல்.
இதேபோல பாப் மார்லியின் மகனும் ரிக்கே பாடகனும்மாகிய சிக்கிமார்லி
கடவுளின் பெயரால் எனும் தன் பாடலில் இவ்வாறு பாடினார் என்பதை சொல்கிறார்
கடவுளின் பெயரால் கொல்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால்
கடவுளின் பெயரால் கைப்பற்றுகிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால்
கடவுளின் பெயரால் வெறுக்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால்
கடவுளின் பெயரால் பீற்றிக்கொள்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால்
எல்லா மதங்களும் துடைத்தழிக்கப்பட வேண்டும் அதன் பின் நாம் வாழ்வுக்காக வாழ்வோம்
நம்மை பிரிப்பது மதம்
குழம்பிப்போன மனிதர்களால் உருவான மதம்
என்று பாடல் நிதர்சன வரிகளை உள்ளடக்கியது
இதே போல் தான் மக்கள் பாடகன் டி எம் சௌந்தரராஜன் குறித்த கட்டுரையில் அவர் பாடல்களையும் மிகவும் ரசித்து இருப்பார். எம்எஸ்வி அமைக்கும் மெட்டுகளுக்கு யாராலும் பாட முடியாத காலகட்டத்தில் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் மிக எளிமையாக அதனை கையாண்டதால் உச்சஸ்தாயில் அமையும் பாட்டாகிலும் மெலடி பாட்டுகளினாலும் தன் குரல் வளத்தால் அந்த இசைக்கு உயிர் கொடுப்பார். இந்த நடிகர் பாடினார் என்பதை நீங்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்ள டி எம் எஸ் அவர்கள் மெனக்கெட்டு பாடி இருப்பதும் நாம் கவனிக்கப்பட வேண்டி ஒன்று.
மாயா வனங்களில் விகரிப்பவள் அல்ல நான் கனவுலகங்களில் பயணிப்பவள் அல்ல நான்
அந்தி மேகங்களில் வசிப்பவளும் அல்ல நான்
இசை நிரம்பி வழியும் ஒரு ஜீவன் மட்டும் நான்
இந்த வங்க மொழிப்பாடல் பத்தாண்டுகளில் கேட்கப்பட்ட தனித்துவமிக்க பாடலாக கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். இதனை பாடியவர் நவீன வானம்பாடியான ஸ்ரேயா கோஷால் என்பதை கூறி புகழாரம் சூட்டுகிறார். இசையில் பூரண சுருதி தன்மை அல்லது தூய சுருதி தன்மை என்ற ஒன்று இருக்கிறது. இந்த இரண்டிலும் ஒருங்கே அமையப்பெற்றவர் தான் இப்பாடகி என்கிறார்.
ஒரு பாடல் உச்சத்துக்கு போகும் திறனையும் ஆழத்துக்குச் செல்லும் திறனையும் ஒரே போல் வெளிப்படுத்தும் மெட்டு அமைத்து, அது எத்தனையோ நுட்பமான திருப்பங்களும் வளைவுகளும் கொண்டு இறுதியில் உச்சத்துக்கு சென்று உலவும் என்பதை கவனித்தால் அத்தகைய மெட்டே நம்மை கவரும் ஒரு பாடலாக அமைந்து விடுகிறது. அதில் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் துல்லியமான ஒருமையை ஏற்படுத்தி மிகவும் ரசிக்க வைப்பவர் தான் ஏ எம் ராஜா என்ற தேன் கலந்த குரலுக்குச் சொந்தக்காரரான அவருக்கு புகழாரம் சூட்டுகிறார். மலையாளத்தில் சத்யனின் குரலாக புகழ்பெற்ற ராஜா தமிழில் ஜெமினியின் முகமாகவே இருந்தார். சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போலான துயரத்தையும் தாபத்தையும் தாங்கிய பாடல்கள் நீங்கா புகழ் பெற்றன. கல்யாண பரிசு தேன்நிலவு வரை ஸ்ரீதர் இடம் இணக்கமாக இருந்தவர் தேன்நிலவு படத்தில் பின்னணி இசை அமைக்க மறுத்து எழுந்த பிரச்சனையால் ஏற்பட்டமான கசப்பு அடுத்து நெஞ்சில் ஒரு ஆலயம் பட வாய்ப்பு எம்.எஸ்.விக்கு சென்றது.
சின்ன சின்ன ஆசை பாடலை பாடிய மின்மினியை அறிமுகப்படுத்தியது இளையராஜா தான் மீரா படத்தில் அவரின் முதல் பாடல் அமைந்தது. அவரின் பாடல் வரிகளை சிலாகித்து முத்தாய்ப்பாய் ஒரு வரியை எழுதி முடித்து இருப்பார். பாடுவதற்கு தான் தயாராக இருந்தும் யாரும் பாடுவதற்கு அழைக்க முன்வரவில்லை என்ற சோகத்தையும் மின்மினி பதிவு செய்திருப்பார். அதனை வைத்து ஒரு கவிதை வரி ஒன்று சொல்லி முடித்திருப்பார்
மின்மினி
மிகச்சிறியது
இருள் கவியும் அந்தியில்
ஒரே ஒரு கணம்
எல்லா நட்சத்திரங்களையும்
அது வெல்கிறது
பின்னர் என்றென்றிக்குமாக
எரிந்து மறைகிறது
என்று சொல்லி இருப்பார்.
மர்லின் மன்றோவின் வாழ்வைப் பற்றியும் இசையை பற்றியும் சொல்லும்போது இறுதியில் அவருடைய கூற்றாக ஒரு கவிதையை நமக்குச் சொல்லி இருப்பார்."சிறுவயதில் நீ அழகாக இருக்கிறாய் என்று யாருமே எனக்குச் சொன்னதில்லை .நீ ஒரு அழகான குழந்தை என்று அழகில்லாத சிறுமிகளிடம் கூட நாம் சொல்ல வேண்டும். அந்த சொல்லில் அவர்களுக்கு கிடைக்க கூடிய தன்னம்பிக்கை வாழ்நாள் முழுவதும் அவர்களை வழிநடத்தும்" என்றார்.
"காற்றிலாடும் மெழுகுவர்த்தியை போல் இருந்தது உன் வாழ்க்கை
உன் துயரமான தனிமை
வழிதான் நீ பெற்ற ஊதியம்
எல்லா கவர்ச்சிகளையும் மீறி
எங்கள் நினைவில் என்றும் அழகாய் இருப்பாய் போய்வா மர்லின் மன்றோ"
என்ற ஒரு துயரக் கவிதையும் இறுதியில் கொடுத்து இருப்பார்கள்.
வாசிப்பிலும் சினிமாவிலும் நம்முடைய ரசனை இயல்பாக மேம்படுவது உண்டு. ஆனால் பாடல்கள் கேட்பதில் பெரும்பாலும் நாம் இளமைக்காலத்து ஏக்கங்களில்தான் இன்றும் பல பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம் .இசை ரசனையும் இசை பற்றிய புரிதல்களையும், இது போல புத்தகங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. மறந்து போன இசை கலைஞர்கள் இசை ஆளுமைகள் புகழாலும் வெற்றியாலும் துடைத்தெளிக்க முடியாத கலைஞர்களின் கண்ணீரைப் பற்றி, பெருங்கூடடங்கள் சூழ்ந்திருந்த வேளையிலும் தனிமையில் மடிந்த இசை கலைஞர்களைப் பற்றி, இசை வானத்தில் புதிதாய் பிறந்த வானம்பாடிகள், இன்னும் பறந்து கொண்டிருக்கும் பறவைகள், திரைப்பட நடிகர்களை பற்றி உலக வடிவிலான இசை வடிவங்கள் எவ்வாறெல்லாம் இருக்கின்றன என்பதை பற்றி, இசையை எவ்வாறெல்லாம் எப்போதெல்லாம் கொண்டாடலாம் என்பது பற்றியும் விரிவாக இந்த நூல் அலசுகிறது.
தமிழ் பாடல்கள் மட்டுமின்றி இந்தி பாடல்கள் கன்னடம் மற்ற மொழி பாடல்கள் இசை தொகுப்புகள் இசை குறிப்புகள் மேடை பாடல்கள் இசை கலைஞர்களின் வரலாறுகள் கர்நாடக இசை சங்கீதம் ஒலி அமைப்புகள் குறித்தும் இந்த புத்தகம் அலசுகிறது.
இசைக்கலைஞர்கள் யாரும் தெய்வத்தின் ஆசி பெற்று ஒரே நாளில் யாரும் முன்னேறவில்லை. ஒவ்வொரு நாளும் படிப்படியாக தங்கள் திறமைகளை முன்னிறுத்தி அவர்கள் அனைவரும் முன்னேறியுள்ளனர். அவர்களுக்கு பின்னால் ஒரு தன்னம்பிக்கை நிரம்பிய வாழ்வு ஒன்று உள்ளது. அதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். எந்தத் துறையை சேர்ந்தவராய் இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடனும புதிய தேடலுடனும் இருப்பவர்களுக்கு இந்த உலகம் வழிகாட்டுகிறது. ரத்தின கம்பளங்களையும் விரிக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment