Reading_Marathon2024
#24RM050
Book No:29/100+
Pages:109
நான் காணாமல் போகும் கதை
-ஆனந்த்
தனிமனித வாழ்வில் எண்ணங்களுக்கு என்றும் நிலை இல்லை, மனிதர்களுக்கும் அதே நிலைமை தான். அதனை வலியுறுத்துவது போலவே இந்த நாவல் அமைந்துள்ளது. கணத்துக்கு கணம் தோன்றி இருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் மனிதன் ஒவ்வொரு கணத்திலும் நுழைந்து பார்த்து உடனே காணாமல் போவது சலிப்பை ஏற்படுத்துவதாக இல்லாமல் அது அவனுக்கு பழக்கமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எங்கோ ஒரு வெற்றிடத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது நாம் நினைவுகளையும் அசைபோட்டுக் கொண்டிருப்போம். அதுபோலத்தான் இக்கதைகளில் வரும் அவன் நினைவுகள் காலங்களை பின்பற்றி வந்து கொண்டே இருக்கும். தற்காலத்திய இன்ட்ரோவர்ட் போல யாரிடமும் பேசாமல் பயத்தில் ஆச்சரியத்தில் கூச்ச சுபாவத்துடன் இருப்பான். இன்னொரு சமயம் தனிமையில் அவனுடைய எண்ணங்கள் தாறுமாறாக சென்று கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு இப்போது இறந்து போய்விட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பது.
கவலைக்குள் விழுந்து எழுந்து சுயசமாதானம் செய்து கொள்வது போல துன்பம் இருக்கும்போது துக்கப்படுவதை விட துன்பமில்லாமல் காரணம் இல்லாமல் ஏதேனும் வெறுமனே நினைத்து துக்கப்படுவது என ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித உணர்வுகளை துல்லியமாக எழுதியுள்ளார்.
சிந்தனையில் எங்கோ தனிமையில் சென்று திரும்பி வர இயலாமல் யோசிப்பது, காணாமல் போவது, கனவுகளில் அடிக்கடி பார்த்த முகங்கள் நிஜத்தில் எதிர்ப்படுவது, உறக்கத்தில் வரும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு சிக்குவது பின்பு ஓரிருவரை காப்பாற்றுவது அந்த சமயத்திலெல்லாம்.. விழித்துக் கொண்டு ஒருவித பதட்டத்துடனும் விசித்திரமான நிம்மதியுடனும் மனதை தேற்றிக் கொள்வதை குறித்து சொல்லி இருப்பார்.
இனம் புரியாத மென்மயிலும் தழுதழுப்பிலும் மனம் நெகிழ்ந்து செல்லும் நிகழ்வுகளை வரிசையாக சிறுவயது முதல் ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டிக் கொண்டே வருகிறார். கனவில் தென்படும் இடங்களை பற்றி சொல்லும் புது
உலகில் தான் பார்த்திராத வேறொரு உலகம், அடர்ந்த காடு இருளான வனம் அதில் ஏதாவது அறிந்ததை தேடுகிறதா மனம் என்று ஒவ்வொரு முறையும் எண்ணிப் பார்ப்பார்.
நினைவுகளும் கனவுகளும் தவிர விழித்திருக்கும் போதே சில சமயம் தானாக மனதில் எழும் கற்பிதங்களும் உண்டு. கற்பிதம் தரும் சுதந்திரம் கட்டுப்பாடுகள் அற்றது. வாழ்வனுபவ உலகம் இயங்கும் வரையறைகள் கற்பித உலகங்களுக்கு கிடையாது .எதுவும் எங்கும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் .காரண காரியங்கள் தன்னிச்சையான வேறொரு இலக்கணத்தில் இங்கு நடக்கின்றன என்று நிகழ்காலத்தில் நிகழும் எண்ணங்களையும் மனதுடன் ஒப்பிட்டு தன்னுடைய மன அழுத்தத்தை அழகாய் விவரித்து இருப்பார்.
கால தேவனிடம் கேள்வி கேட்பது போல சில பகுதி வருகிறது .பிறப்பு நிற்காமல் இறப்பது மட்டும் நின்று போனால் என்னவாகும் ? புதிய புதிய மரங்கள் செடி கொடிகள் அனைத்துவித மிருகங்கள் குழந்தைகள் பிறந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.எதுவும் யாரும் இறந்து போகாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் வயது மட்டும் ஆகிக்கொண்டிருக்கும். முதுமை வரும். ஆனால் மரணம் இருக்காது. பூமி பழையதாய் கொண்டே இருக்கும் .உலகம் முழுதும் நகர்வதற்கு கூட இடமில்லாமல் உயிரினங்கள் நிறைந்திருக்கும் என்று சொல்கிறார்.
வெறும் கனவு ஒன்றை நம்பிக் கொண்டு இப்படி மாதக்கணக்கில் நேரத்தை செலவழித்துக்கொண்டு அலைந்து கொண்டிருப்பதால் என்ன உபயோகம்? இது சற்று பைத்தியக்காரத்தனமாகப்படவில்லையா என்று மனம் புழுங்குகிறது. ஆனால் கேள்வி விடவில்லை .மனதின் எண்ணங்களை பற்றியும் உணர்ச்சிகளை பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது என்று மனதின் உள நிலையை சமாதானம் செய்ய முடியாமல் எண்ணங்கள் விரிந்து கொண்டே இருப்பதை வேதனையுடன் பகிருகிறார்.
இவ்வாறாக கதை அடுத்தடுத்த சில பல சம்பவங்களை சொல்லிக் கண்டே செல்கிறது.
எந்த இடத்திலும் ஆயற்சி ஏற்படாமல் இந்த நாவலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் நம்மை கட்டி போடுகின்றன வசியமிக்க எழுத்து ஈர்ப்பு விசையால்.
*தரையில் பார்வை படியும் போது ஆச்சரியம் மனதில் விரிகிறது
*பொதுவாக விழிப்பு வந்ததும் கூடவே மனமும் விழித்துக் கொண்டு தன் ஓட்டத்தை தொடங்கி விடும்
*மையத்தில் ஒரு புள்ளியாய் இருந்து கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த நான் இப்போது ஒரு வெளியாகி விரிந்து மற்றவர்கள் அனைவரும் என்னை பார்க்கும் கோணம் நிகழ்கிறது.
*என்னை அறிந்தவர்கள் அறிந்ததை வைத்துக் கொண்டுதான் என்னை வாங்கிக் கொள்கிறார்கள்
*விரிந்திருக்கும் காட்சி புலத்தின் விசாலத்திலும், மழையின் நிசப்தத்திலும் அமைதி கொண்ட தன்னுணர்வு மனத்தின் ஆழங்களில் இறங்கி சஞ்சரிக்கிறது.
கதை தனி மனிதனின் கனவுகளுக்கும் நனவுகளுக்குமான கனவுகளில் தான் கண்ட ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் தொலைந்து போவதும் மனதிற்கு சமாதானம் சொல்லி அடுத்த நிகழ்வில் தொலைந்து போவதுமான கதைக்கு உயிராக இருப்பது வார்த்தைகள் தான். ஒவ்வொரு வார்த்தைகளையும் அழகிய கோலமாக கோர்த்து இந்த கதையை ஒவ்வொரு கணத்திலும் நம்மை உணர வைக்கிறார் வெறும் 100 பக்கங்களே கொண்ட நாவலில் நாம் பல இடங்களில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டுதான் அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல முடிகிறது. நல்ல வார்த்தைகள் தோய்ந்த சித்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் ஆனந்த் அவர்கள்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment