ஒரு கனவு நிறைவேறுவதற்கு தன்னால் எதுவும் செய்யவியலாது என்கிறபோது வருகின்ற கையறுநிலை மௌனத்திற்கு தனி நிறம் உண்டு.
லட்சியங்களை அடைவதற்கு உதவிய மனதின் மகிழ்வைப்போல,
அந்த வெற்றியை தூரத்தில் இருந்தபடி பாதங்களின் தனிமை இன்னும் ஆழமானது.
ஒருபோதும் தான் அடகு வைத்த பொருட்களை மீட்கமுடியாதவளாக,
சதா வறுமைபீடித்தவளாக,
படிக்க விரும்பும் மகனை பட்டறைக்கு அனுப்புபவளாக இருக்கின்ற,
காப்பிக்கொட்டையை கடத்தி விற்பவளாக இருக்கின்ற அந்த பெண்மணி அழுக்கான தனது கைகளால் மகனை அணைத்தபடி உறங்கும்போது,
அவன் அவளிடமிருந்து தப்பி தனது கனவினை நோக்கி ஓடுகிறான்.
ஒரு லட்சியவாத விரும்பிக்கு படம் இதோடு முடிகிறது.
ஆனால்,பின்னொரு நாள் அவளது மரணத்திற்கு பிறகு, தான் வாழ்ந்த அந்த வீட்டிற்கு வருகின்ற - இப்போது பிரபலமான வயலினிஸ்டாகிவிட்ட - அவனுக்கு வறுமையின் காலத்தில் தான் வெறும் 30 லியாருக்கு அடமானம் வைத்த அந்த வயலினை ஏதோவொரு குற்றவுணர்வின் பொருட்டு மீட்டு வைத்திருக்கிறாள்.
ஒரு துணைப்பாத்திரம் போன்ற அவள்தான் இதில் நிஜமான வாழ்வினை வெளிப்படுத்துபவள்.
அதனாலேயே அவளைப் பார்த்து கோபம் வரவில்லை.மாறாக , ஒருவித ஆதங்கம் எழுந்துவிடுகிறது.
நாம் பார்க்கின்ற பெரும்பாலான அம்மாக்கள் " நீ பட்டாதான் திருந்துவ ..பாரு " எனத் திட்டிக்கொண்டே இருப்பவர்கள்.
நாம் பெறுகின்ற வெற்றியில் ஒரு விள்ளலை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள்.
தோற்றுப்போன ஒரு இரவில் தூக்கமற்று நாம் குமைந்துகொண்டிருக்கும்போது,
" கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு தூங்குய்யா..சரியாப்போகும் தூங்கு.."
என்றபடி இருட்டுக்குள்ளிருந்து குரல் தருபவர்கள்.
அதனாலேயே இவளும் நம் ஒவ்வொருவரின் அம்மாவைப் போல உலகின் அழகான பெண் ஆகிறாள்.
No comments:
Post a Comment