Tuesday, 16 August 2016

தமிழகம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்

* சென்னை தொலைக்காட்சி நிலையம் முதன்முதலாக வண்ண ஒளிபரப்பை பரிசோதனை முயற்சியாக ஒளிபரப்பிய நாள் ஜூலை 18, 1980. அன்று மாலை ஒரு மணி நேரம் மட்டும் வண்ணத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயின.

* சென்னை, கதீட்ரல் சாலையில் 15.4.1962ல் தொடங்கப்பட்ட உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ரெஸ்டாரன்ட்தான் இந்தியாவின் முதல் டிரைவ் இன் ஓட்டல்.

* தர்மபுரி மாவட்டத்தில் தளி என்ற ஊருக்கு, ‘லிட்டில் லண்டன்’ என்றொரு பெயர் உண்டு. காரணம், இங்கு இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் நகரத்து சீதோஷ்ண நிலை காணப்படுவதால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவ்வாறு அழைக்கப்பட்டது.

* தஞ்சையை அடுத்த வல்லத்தில் 1988ல் மகளிருக்கு மட்டும் என்று ‘பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி’ அமைக்கப்பட்டது. ஆசியாவிலேயே மகளிருக்கு என்று தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி இதுதான்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு காட்டுப் பகுதியில் வசிக்கும் பளியர்கள் இனத்து மக்களில் மனைவி பெயரை ஆண்கள் சொல்லவே மாட்டார்களாம்.

* உதகமண்டலத்தின் உண்மையான பெயர் - ‘ஒற்றைக்கல் மந்து’ என்பதாகும். இதனை உச்சரிக்க முடியாத வெள்ளையர்கள் ‘உடகமண்ட்’ எனக் குழறினார்கள். நாளடைவில் உடகமண்ட் நிலைத்து அதற்கு உதகமண்டலம் என்ற தமிழ் வடிவம் ஏற்பட்டது. உதகமண்டலம் அரசினர் தாவரவியல் பூங்கா 1847ம் ஆண்டில், அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் ‘மார்க்விஸ் ஆப் ட்வீடேல்’ என்பவரால் துவக்கப்பட்டது.

* சென்ைன - பெங்களூரு சாலையில் உள்ளது சுங்குவார் சத்திரம். ஆங்கிலேயரிடம் வணிகத்தொடர்பு கொண்ட சுங்குவார் என்னும் ஆந்திர வைசியர்களால் நிறுவப்பெற்ற சத்திரம் அங்கு இருந்ததால் சுங்குவார்சத்திரம் எனும் பெயர் பெற்றது.

* நகரங்களின் பெயர்களை ஐ ஓசையை இறுதியாக வைத்துச் சுருக்கமாகச் சொல்வது இப்போது வழக்கமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ெசன்னை, சைதை, புதுவை, நாகை, குடந்தை, மன்னை, கோவை ஆகியவற்றைச் சொல்லலாம். இம்மாதிரி முதன்முதலில் சுருக்கப்பட்ட ஊர் மாமல்லபுரம். அதனை மல்லை என்று அழைத்தனர்.

* ஈரோடுக்கு அருகிலுள்ள பவானியில் சங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு காவேரி, பவானி, அமுத நதி மூன்றும் ஒன்று சேருகின்றன. ஆக, தமிழகத்திலும் திருவேணி சங்கமம் இருக்கிறது.

* தமிழ்நாட்டில் வைகை நதி, கடலில் கலப்பதில்லை. இது ராமநாதபுரத்திலுள்ள பெரிய கண்மாயில் கலக்கிறது.

* கோழிக்காட்டானூர், வெள்ளாட்டுக்காரனூர், மாட்டுக்காரனூர், குதிரைக்காரனூர், எலியனூர், எருமைப்பட்டி, கீரிப்பட்டி, சிங்கம்பட்டி, புலியம்பட்டி, காடைப்பட்டி, பல்லிப்பட்டி, காக்காப்பாளையம், யானைப்பாதை - இவையெல்லாம் சேலம் மாவட்டத்தின் அருகில் உள்ள சில கிராமங்களின் பெயர்கள்.

* புலிவாய் என்றதும் புலியின் வாய்க்குள் அச்சமின்றி போய்வர முடியுமா என்று நினைக்காதீர்கள். வந்தவாசி அருகே ஒரு ஊரின் பெயர்தான் புலிவாய்.

- என்.ஜரினாபானு, திருப்பட்டினம்

No comments:

Post a Comment