நேரம்!
ஒர் இளம் நகரவாசி, ‘நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது’ என்று நம்பினார்.
அதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் ஷேவ் பண்ணிக்கொண்டே குளிப்பார். பாத்ரூம் போகும்போதே, பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்சி பண்ணிக்கொண்டே, ரேடியோவில் பக்திப் பாடல்கள் கேட்பார்.
இவ்வாறு ஒவ்வொரு நிமிஷத்தையும் விரயமடிக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது. மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கையலம்ப வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது நியூஸ் பேப்பரில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. கண்ணின் விழி, கரண்டியால் வந்துவிட்டது.
இப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறார், பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார்.
நீதி : நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது
Wednesday, 31 August 2016
சுஜாதா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment